Thursday, 21 January 2010

நீயும்...நானும் ! - கோபிநாத்

சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை சிக்னல்... ஹார்ன்கள் பறக்கின்றன. 'யார்றா அது முன்னால, வண்டிய எடு. யே போப்பா... காலையிலயே வந்துட்டானுங்க. அட, போய்த் தொலைய்யா...' ஆளாளுக்குத் திட்ட, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே கோபத்தோடும் அவமானத்தோடும் நின்றுபோன தன் வண்டியை வேகவேகமாக உதைக்கிறார். அது கிளம்புகிற மாதிரி தெரியவில்லை. இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

தரையில் கால்களை ஊன்றித் தள்ளி வண்டியை ஓரங்கட்டிய அவர், எல்லோரின் மேல் இருந்த கோபத்தையும் வண்டியின் கிக்கர் மீது காட்டினார். எத்தனை முறை உதைத்தும் ஒரு பயனும் இல்லை. முகம் எல்லாம் வியர்த்துப் போக, நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் கிக்கரை உதைப்பதும், ஆக்ஸிலேட்டரைத் திருகுவதுமாக அவர் முயற்சி தொடர்கிறது.

அணிந்து வந்த புது டிரெஸ் நனையும் அளவுக்கு வியர்வை. முகம் எல்லாம் கோபம். போதாக்குறைக்கு போவோர் வருவோர் எல்லாம் பார்த்துக்கொண்டே போகிறார்கள் என்ற எரிச்சல் வேறு. யாருக்கோ போன் செய்கிறார். ச்சே! என்று தலையில் அடித்துக்கொள்கிறார். வாட்ச்சைப் பார்க்கிறார். ஆத்திரமாக வண்டியை எட்டி உதைக்கிறார்.

எங்கிருந்தோ வந்த அழுக்கு டிரவுசர் பையன்... 'என்னண்ணே, வண்டி நின்னுபோச்சா?' என்று கேட்டபடியே வண்டியின் அருகில் முழந்தாளிட்டான். ஏதோ ஒன்றைக் கழட்டினான். தன் பனியனால் துடைத்தான். இன்னொரு வொயரை உருவினான். பல்லால் கடித்தே ஏதோ செய்தான். 'இப்போ ஸ்டார்ட் பண்ணுங்கண்ணே!' என்று ஆர்டர் போட்டான்.

ஒரு உதைதான், வண்டி ஸ்டார்ட் ஆனது. ஆத்திரம் தீர ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே அந்த அழுக்குப் பையனை நன்றியோடு பார்த்தார் அந்த இளைஞர். அன்றைய தேதிக்கு அந்தப் பையன்தான் அவருக்குக் கடவுள்.

இவர் மட்டுமல்ல... நம்மில் பெரும்பாலானோருக்கு வண்டி நின்றுபோனால் செய்யத் தெரிந்த வைத்தியம் இதுதான். வேகவேகமாக கிக்கரை உதைப்பது, வெறித்தனமாக ஆக்ஸிலேட்டரைத் திருகுவது. அவசரத்துக்கு நாம் போன் பண்ணிக் கூப்பிட்ட மெக்கானிக் வந்தால் பிழைத்தோம். ஏறக்குறைய 1 மணி நேரம் வண்டியை ஸ்டார்ட் செய்யப் போராடிய அந்த இளைஞர், அநேகமாக 10 வருடங்களாவது வண்டி ஓட்டிக்கொண்டு இருப்பவராகத்தான் தெரிந்தார்.

புதுசு புதுசாக வண்டி வாங்கினாலும் நமக்குத் தெரிந்த ஒரே உத்தி ஆக்ஸிலேட்டரைத் திருகுவதுதான். அதிகபட்சம் சோக் போட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சிப் போம்.

அதைத்தாண்டி அது குறித்துத் தெரிந்துவைத்து இருப்பதில்லை. அதில் ஆர்வம் இருப்பதில்லை அல்லது, அது என் வேலை இல்லை என்ற முடிவுக்கு வருகிறோம். இரு சக்கர வாகனம் என்றில்லை. மொபைல் போன், கையில் அணிந்திருக்கிற காஸ்ட்லி வாட்ச், ஏ.சி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், டியூப்லைட், வாஷிங் மெஷின், கார், கம்ப்யூட்டர், டி.வி. இப்படி எதுவானாலும் பிரச்னை இல்லாமல் ஓடும் வரை சந்தோஷம். நின்றுபோனால் கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போலத்தான் இருக்கும்.

நாம் பயன்படுத்தும் பொருளோடு தொடர்புடைய சிறுசிறு விஷயங்களைக்கூடத் தெரிந்துகொள்ள முனைவதில்லை.

முன்பெல்லாம் மை ஊற்றி எழுதும் பேனாக்கள் பிரபலம். அதில் இங்க் ஊற்றுவது, நிப்பைச் சரி செய்வது, கழுவிவைப்பது என்று அது தொடர்பான வேலைகளை நாம் செய்வதுண்டு. இப்போதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் வாடிக்கையாளர் நோகாமல் இருக்க வசதியாகச் செய்யப்படுகின்றன.

தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கைக்கு மாறி இருந்தாலும், இயந்திரங்களோடு புழங்குவது அதிகரித்து இருந்தாலும், அதைப் பயன்படுத்துவது தவிர, வேறெதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எண்ணமும் இருப்பதில்லை.

ஒரு நிலையில் நாம் பயன்படுத்துகிற, நமக்குத் தேவைப்படுகிற பொருட்கள் குறித்தும், விஷயங்கள் குறித்தும் தன்னிறைவோடு இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்... பயன்படுத்துதல் மட்டுமே என் வேலை என்பது ஒரு குணமாக மாறிவிடுகிறது.

இந்தக் குணம் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் எதிரொலிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 'என்னய்யா நெனைச்சுட்டு இருக்கீங்க. நான் என்ன இளிச்சவாயனா? ஒருநாள் லேட்டா பணம் கட்டினதுக்கு இவ்வளவு ரூபா அபராதம் போடுவீங்களா? உங்க கிரெடிட் கார்டே எனக்கு வேண்டாம்' என்று கத்திக்கொண்டு இருப்பவரிடம், 'ஹலோ! ரொம்பச் சத்தம் போடாதீங்க. நாங்க கார்டுகூடவே ஒரு கையடக்கப் புத்தகம் அனுப்பினோமே, எல்லா விவரமும் அதுல இருக்கு' என்று பதில் சொல்வார், பணம் வாங்க வந்த பேங்க்காரர்.

கிரெடிட் கார்டு விவரங்களை, வங்கி அனுப்பும் சட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை எத்தனை பேர் படித்திருப்போம். ஏ.சி-யோடு, வாஷிங்மெஷினோடு, மொபைல் போனோடு வரும் விவரப் புத்தகங்களைப் படித்து, அது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தான் பயன்படுத்தும் பொருள் குறித்து தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும் என்ற குணமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.

ஆனால், மார்க்கெட்டில் புதிதாக ஒரு பொருள் வந்ததும் ஓடிப் போய் வாங்குகிற முதல் ஆள் நாம்தான். தரம் இல்லாத பொருள்களை ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள். சரியான விவரம் சொல்லாமல் கிரெடிட் கார்டைத் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோமே ஒழிய... அது குறித்து ஒன்றுக்குப் பத்து கேள்விகள் எழுப்பி, விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை.

எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வதில் இருக்கிற முனைப்பு... கோளாறு ஏற்பட்டால், பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதில் இருப்பதில்லை. காரணம், தெரியாததைக் கேட்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது. 'இதுகூட இவருக்குத் தெரியவில்லையே என்று மற்றவர் கள் கேவலமாக நினைத்துவிடுவார்களோ' என்ற எண்ணமே முதலில் வருகிறது.

'எல்லாம் தெரிந்துவைத்திருப்பவன் சிறந்தவன்' என்ற நினைப்புதான் எதையுமே தெரிந்துகொள்ளவிடாமல் தடுத்துவிடுகிறது.

'ச்சே! நான் எவ்வளவு பெரிய ஆளு... இதப்போயி கேப்பாங்களா' என்று யோசித்தால், எங்கோ ஓரிடத்தில் அந்த விஷயம் தெரியாததால் தவிக்க வேண்டி இருக்கும்.

நான், எனது நண்பர், அவருடைய நண்பர் மூவரும் ஒரு காரில் பயணித்துக்கொண்டு இருந்தோம். என் நண்பரின் நண்பர் ஐ.நா சபையோடு இணைந்து பணியாற்றும் ஒரு நிறுவனத்தின் ஊழியர். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் என் நண்பரிடம், 'இந்தக் கதவை எப்படித் திறப்பது?' என்றார். என் நண்பர் கிண்டலாக, 'இவ்வளவு பெரிய பணியில் இருக்கிறீர்கள், இதுகூடத் தெரிய வில்லையா' என்றார். அவர் நிதானமாக, 'ஐ.நா. சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்னவென்று தெரியுமா?' என்று கேட்டார். 'அதெப்படி எனக்குத் தெரியும்' என்றார் நண்பர். 'அப்போ எனக்கு மட்டும் உன் கார் கதவைத் எப்படித் திறக்கத் தெரியும்' என்றார்.

விஷயம் இவ்வளவுதான்... ஒருவருக்குத் தெரிந்த விஷயம் உங்களுக்குத் தெரியாததைப் போலவே உங்களுக்குத் தெரிந்த விஷயம் இன்னொருத்தருக்குத் தெரியாமல் இருக்கும். இங்கு எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. தெரிந்துகொள்வதற்காகக் கேட்பது கேவலமும் இல்லை.

கூச்சமில்லாமல் கேட்பது குறித்து வெள்ளைக்காரர்களிடம் கற்றுக்கொள்ளலாம். அடுத்தவர் அற்பமாக நினைப்பாரோ என்றெல்லாம் யோசிக்காமல், தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். உணவகத்துக்குப் போனால்கூட, தான் கேட்கிற உணவு எப்படி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் சேர்ப்பீர்கள், அதன் விலை என்ன என்றெல்லாம் கேட்பார்கள்.

புதிதாகப் போன ஏரியாவில் வழி தெரியாமல் அரை மணி நேரம் சுற்றிக்கொண்டே இருக்கிற நம்மில் பலரும்... அது எங்கே இருக்கிறது என்று கேட்கக் கூச்சப்படுபவர்கள்தான். பேருந்து நிலையத்திலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ, விமான நிலையத்திலோ யாரிடமும் எதையும் கேட்காமல் சிறுநீரை அடக்கிக்கொண்டு கழிவறை தேடிக்கொண்டு இருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

கேட்டுத் தெரிந்துகொள்வதில் தீவிரம் இல்லாமல் போனதால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் போய்விடுகிறது. ஏனோதானோவென்று பல விஷயங்களைச் சொல்கிறோம். பிறகு, நான் என்ன சொன்னேன்... நீ என்ன செஞ்சிருக்கே என்று சண்டை வரும்.

ஐந்து ஆண்டு ஆளப்போகிறவர்கள் தொடங்கி, மூன்றாண்டு படிப்பு சொல்லித் தரப்போகிற கல்லூரி வரை எங்கும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்பதில் வரும் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக நாம் செய்த கோமாளித்தனங்களால், இன்று எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்குச் சமூகச் சூழல் மாறி இருக்கிறது.

யாராவது கேட்பார்கள், அப்போது தெரிந்துகொள்ளலாம் என்று நீங்கள் காத்திருப்பதைப்போலவே எல்லாரும் காத்திருக்கிறார்கள். விளைவு, தான் செய்கிற செயல் குறித்த தெளிவான தகவல் யாரிடமும் இல்லை. ஓட்டுப் போடுவது வரை இதுதான் நிலைமை. எலெக்ட்ரானிக் மெஷினில் எப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை... ஓர் ஓட்டின் பலம் என்ன என்பதை உணர்வதே அவசியம்.

கேள்வியை எங்கு அதிகாரமாக வெளிப்படுத்த முடியுமோ, அங்கு மட்டுமே அதைப் பிரயோகிப்பதில் என்ன பயன்? ஒரு ரூபாய்க்கு மூன்று வாழைப் பழம் என்று பஸ் ஜன்னல் வழியே நீட்டுகிறவரிடம் அத்தனை கேள்வி கேட்கிற நாம், தேனும் பாலும் ஓடும் என்று சொல்லி ஓட்டுக் கேட்டு வருபவ ரிடம் என்ன கேட்கிறோம்?

நாம் செய்கிற வேலையில், வாங்குகிற பொருட்களில் அது குறித்த தன்னிறைவைப் பெற... புரிதலை உணர... கூச்சப்படாமல் கேளுங்கள். அது எனக்குத் தேவைஇல்லை என்கிற மனோபாவம்தான், வண்டியை ஸ்டார்ட் செய்யத் தெரியாமல் நடுரோட்டிலும், வாழ்க்கையை ஆளத் தெரியாமல் இந்தச் சமூகத்தை வீதியிலும் நிறுத்தியிருக்கிறது.

கிடைக்கிறதோ
கிடைக்கவில்லையோ
கேளுங்கள்- அது நமது உரிமை.
'கேளுங்கள் தரப்படும்!'

உங்களை, உங்களுக்கே உணர்த்தும் - சுவாமி சுகபோதானந்தா

'நாற்பது வயதில் நீங்கள் இருபதாகலாம்... அறுபது வயதில் நாற்பதாகலாம்!'

வாழ்வியல் பயிலரங்கங்களை நடத்த அவ்வப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும்.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில்... ஏராளமான அனுபவ அறிவு தேவைப்படும் பதவிகளில் எல்லாம் வெறும் இருபது, இருபத்தி இரண்டு வயது பெண்கள் வீற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 'எப்படி...?!' என்று நான் வியந்தபோதுதான், என் மாணவன் ஒருவன் எனக்கு அந்த நாடுகளில் நிலவும் நிதர்சனத்தை விளக்கினான்.

"சுவாமி... இவர்கள் எல்லாம் பார்க்கத்தான் இருபது, இருபத்தி ஐந்து வயது பெண்கள் போல இருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அதைவிட இருமடங்கு வயது கொண்டவர்கள்!" என்றான். நம்புவதற்கு நான் சிரமப்படுவதைப் பார்த்த மாணவனே தொடர்ந்தான்.

"சுவாமி... இந்தியாவில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களுக்குச் செல்லும் பெண்கள் நல்ல நகை நட்டோடு, பாந்தமாக பட்டுப்புடவை அணிந்து போவதை எப்படி முக்கியமாக நினைக்கிறார்களோ, அதேபோல அலுவலகத்துக்கு நல்ல கச்சிதமான உடலமைப்போடு போக வேண்டும் என்பதை இந்த நாட்டுப் பெண்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். குழந்தை பெற்று சற்றே சதை போட்டுவிடும் பெண்கள்கூட பேறுகாலம் முடிந்து மீண்டும் அலுவலகம் போக முடிவெடுத்தால், சுமார் இரண்டு மாத காலம் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடம்பை கச்சிதமாக மாற்றிக் கொண்டுதான் அலுவலகம் செல்கிறார்கள்" என்றான்.

நான் என் இந்த அனுபவத்தை என் இந்திய மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு, " 'உடற்பயிற்சியால் நாற்பது வயது பெண்கள் எல்லாம் இருபது வயது பெண்கள் போல தோற்றமளிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவர்களின் உற்சாகம், துறுதுறுப்பு, வேலையில் குதூகலம் என்று... அனைத்திலும் இருபது வயது பெண்கள் போல சுறுசுறுப்போடு எப்படி நடந்து கொள்ள முடிகிறது?!'

- இதுதானே உங்களின் கேள்வி? இது மிகவும் சுலபம். நினைத்தால்... மனதளவில் உங்களால்கூட உங்கள் வயதை பாதியாகக் குறைத்துக் கொண்டு உற்சாகத்தை இரண்டு மடங்கு கூட்ட முடியும்" என்றேன்.

ஒரு பெண்மணி, "சுவாமி... நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே?! திருமணமான புதிதில் என் கணவரின் கவனம் முழுக்க முழுக்க என் மீது இருந்தது. எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. பேறுகாலத்திலும் குழந்தைகள் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த பருவங்களிலும் என் கவனம் முழுக்க அவர்கள் மீது இருந்தது. அப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால், இப்போதோ குழந்தைகள் பெரியவர்களாகி வேலை கிடைத்து திருமணம் நடந்து வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது வாழ்க்கையில் வெறுமை தான் மிஞ்சியிருக்கிறது."

இப்படிப் பேசிய பெண்மணிக்கு நாற்பத்தி ஐந்து வயதுதான் இருக்கும். அதற்குள் அவருக்கு வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்டதைப் போல ஓர் உணர்வு.

ஆனால், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் ஒருபோதும் இப்படி நினைப்பதில்லை. அவ்வளவு ஏன்... மறைந்த நமது பிரதமர் இந்திரா காந்தியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேரன், பேத்தியெல்லாம் எடுத்தவர்தான். அந்த அந்தஸ்தை அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தார். பேரன், பேத்திகளோடு எல்லாம் விளையாடினார். ஆனால், வேலை என்று வரும்போது அவர் தன்னை பாட்டியாக கற்பனை செய்து கொண்டதுகூட இல்லை. ஆம்... உலகம் எப்போதுமே அவரை ஒரு இரும்பு மனுஷியாகத்தான் பார்த்திருக்கிறதே ஒழிய, ஒருபோதும் பாட்டியாகப் பார்த்ததே இல்லை. காரணம்... வயது என்பது உடம்பைவிட மிக அதிகமாக மனதோடும், செயல்பாட்டோடும் சம்பந்தப்பட்டது.

அமெரிக்கா போன்ற பிரதேசங்களில் வாழும் 'வல்ச்சர்' என்று சொல்லப்படும் பருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிஸ்கவரி சேனலே இப்போது தமிழில் வருவதால் அதில்கூட நான் சொல்லும் செய்தியை நீங்கள் பார்க்கக்கூடும். அந்த பருந்துகளுக்குப் பொதுவாக நாற்பது வயது வரைதான் ஆயுள். அந்த வயதை எட்டிப்பிடிக்கும் போதே எலி, பாம்பு மாதிரியான இரைகளை வேட்டையாடிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதன் அலகுகள் மழமழவென்று மழுங்கி போய்விடும். கால் விரல்களில் இருக்கும் நகங்களும் கூர்மையை இழந்துவிடும். அதனால் இந்தப் பருவத்தில் ஒரு சில பருந்துகள் உணவின்றி இறந்துபோய்விடும். ஆனால், அவற்றில் அதீத மனத்தின்மை வாய்ந்த பருந்துகளோ... தங்களின் முயற்சியால் கூடுதலாக முப்பது வருட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும்!

ஆச்சர்யமாக இருக்கிறதா..? ஆனால், அது உண்மைதான்! இந்தப் பருந்துகள், நாற்பது வயதான பருவத்தில் ஆளரவமற்ற ஏகாந்தமான மலைப்பிரதேசங்களுக்குச் சென்று பெரும் மறுமலர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும். இந்தக் காலத்தில் அவை மலைகளில் தன் அலகுகளை மோதி உடைத்துக் கொள்வதுடன், புதிதாக அலகு முளைக்கும் வரை அந்த மலைகளிலேயே தங்கியிருக்கும். அதேபோல கூர்மை இழந்த தங்களது கால் நகங்களை அவை பிடுங்கிப் போட்டுவிட்டு, புதிய நகங்கள் வளரும் வரை காத்திருக்கும். புதிய அலகும் கால் நகங்களும் வளர்ந்த பின்னர், மீண்டும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி... மேலும் முப்பது ஆண்டு காலம் வாழும்!

இந்தப் பருந்துகளைப் போல நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் ஆசைப்பட்டு நிறைவேறாத விஷயங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். நீங்கள் படிக்க விரும்பிய புத்தகங்களை எல்லாம் அனுபவித்து படித்து ரசியுங்கள். 'வீணை கற்றுக் கொள்ள வேண்டும்', 'இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்' 'தெலுங்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்!' என்று ஆளாளுக்கு ஆயிரமாயிரம் நிறைவேறாத ஆசைகள் மனசுக்குள் அடங்கிக் கிடக்கும். உங்களின் வயது என்னவானாலும் அதை இப்போது நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

'குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதித்து விளையாடுகிற மாதிரி...' என்று யாராவது உங்களைப் பரிகாசம் செய்ய முற்பட்டால்... அதையெல்லாம் காதிலேயே வாங்காதீர்கள். எனக்குத் தெரிந்த பல பெண்மணிகள் நாற்பத்தைந்து வயதுக்கு மேல்தான் ஸ்கூட்டி ஓட்டவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் பேரன், பேத்திகளோடு பேச அறுபது வயதுக்கு மேல் கம்ப்யூட்டரை இயக்க கற்றுக் கொண்ட பலரை உங்களுக்கே தெரிந்திருக்கும். புதிய விஷயத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் போது... உங்கள் மனதுக்குள் உற்சாக அலை அடிப்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும்!

பின் நாற்பதிலும் நீங்கள் இருபது; அறுபதிலும் நாற்பது!

- அமைதி தவழும்...

Thursday, 31 December 2009

செய் செய்யாதே!.- சத்குரு ஜக்கி வாசுதேவ்

"ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அப்போது, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத் தைக் கொண்டுவர என்னால் முடிந்த வரை பலமுறை முயன்றுவிட்டேன். அவன் இறுக்கமாகவே இருக்கிறான். அந்த நண்பன் உங்கள் மீது அபார மதிப்பு வைத்திருப்பவன். உங்கள் வார்த்தைகளைக் கவனிப்பவன். என்னை மறுபடியும் நெருக்கமான நண்பனாக ஏற்கச் சொல்லி நீங்கள் சொன்னால் கேட்பான். செய்வீர்களா?"

‘‘பிறப்பினாலோ, அல்லது சமூக பந்தத்தினாலோ, ஓர் உறவு அமைந்துவிட்டால், அது பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது மிகத் தவறு. மனைவியோ, கணவனோ, தாயோ, தந்தையோ, குழந்தையோ, நண்பரோ, எந்த நெருக்கமான உறவாக இருந்தாலும், அது இரும்புக் கவசம் அணிந்திருப்பதில்லை.

உறவு என்பது மிக அழகான கண்ணாடி ஜாடி போன்றது. அதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது. அதைக் கவனம்இன்றிக் கீழே போட்டுவிட்டால், அது நொறுங்கித்தான் போகும். நொறுங்கியதை மறுபடி பழைய வடிவத்துக்குக் கொண்டுவருவது இயலவே இயலாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மிகவும் கடினமான வேலை.

கடற்கரையில் சங்கரன்பிள்ளை நடந்துகொண்டு இருந்தார். ஒரு பையன் ஓடி வந்தான். அவரிடம் 'சார், வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பாட்டில் ஒன்றை எடுத்துக் காட்டினான்.

'என்ன விலை?' என்றார் சங்கரன்பிள்ளை.

'500 ரூபாய்.'

'கொள்ளையாக இருக்கிறதே, வேண்டாம்.'

'சரி, பிஸ்கட்டாவது வாங்கிக்கொள்ளுங்கள் சார். இரண்டே ரூபாய்தான்.'

சங்கரன்பிள்ளை பரிதாபப்பட்டு வாங்கினார். பிஸ்கட்டை வாயில் போட்டவர் தூதூவென்று துப்பினார்.

'என்ன கண்றாவி இது? இவ்வளவு மோசமாக நாறுகிறதே?'

'இப்போது சொல்லுங்கள் சார்... வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வேண்டுமா?'

இதைப்போலத்தான் பிரச்னைகளை நாமே உருவாக்கிவிட்டு, அவற்றுக்குத் தீர்வு தேடி அலைகிறோம். எப்போதும், உங்கள் எண்ணத்துக்கு ஏற்ப மற்றவரை மாற்ற வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. நீங்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி எப்படிப்பட்ட உறவும் நிலைத்து இருக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

சில உறவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். 'நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை' என்று உணர்ந்தவர்கள்கூட, ஏதோ காரணத்தினால் பிரிய நேரிடும். அப்படிப் பிரிந்து இருப்பது, சேர்ந்து இருந்ததைவிட அதிக நிம்மதி தரும் என்பதை அவர் கள் உணர்ந்துவிட்டால், எதற்கு மறு படியும் தலைவலி என்று ஒதுங்கி இருக்கத்தானே நினைப்பார்கள்?

உங்கள் நண்பர் ஒருவேளை ஏதோ ஓர் ஆதாயத்துக்காக உங்களுடன் நட்பு பாராட்டியிருந்தால், அவருக்கான ஆதாயம் கிடைத்ததும், பிரிவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்து இருந்திருக்கக்கூடும். நீங்கள் சொன்ன வார்த்தைகளைக் காரணம் காட்டி, அவர் ஒதுங்கியிருக்கலாம்.

அவர் கோபத்திலோ, வருத்தத்திலோ இருந்தால் அந்தக் கோபத்தைக் குறைக்கப் பார்க்கலாம். விட்டதடா தொல்லை என்று அவர் ஒதுங்கப்பார்த்தால், யார் சொன்னதற் காகவும் அவர் உங்களுடன் மீண்டும் நண்பர் ஆகப் போவதில்லை.

ஒவ்வோர் உறவின் ஏமாற்றமும் சரிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால், அத்தனை பேரும் சரிசெய்யக்கூடிவர்களாக இருப்பதில்லை. அதற்கான பக்குவம் பெற்றவர்களாக அவர்கள் விளங்குவது இல்லை.

இந்த உண்மையை முதலில் முழுமையாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது அந்த நண்பருடைய உறவு உங்களுக்கு முக்கியமானதா என்பதைத் தீர்மானியுங்கள். முக்கியமானது என்றால், செய்த தவறுக்கு அவரிடம் மனதார மன்னிப்புக் கேளுங்கள்.

'ஏதோ ஓர் அறியாமையில், முட்டாள்தனத்தில் தவறாகப் பேசிவிட்டேன், என் உணர்வு உன் நட்பைத்தான் விரும்புகிறது' என்று அவருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். சொல்லிவிட்டு, முடிவு செய்ய அவருக்கு அவகாசம் கொடுங்கள். அவர் நெருங்கி வருகிறாரா, பாருங்கள்.

அந்த இடைவெளிகூடக் கொடுக்காமல், மேலும் மேலும் அவரை நட்புக்காக வற்புறுத்தினால், அது மேலும் எரிச்சலைக் கிளப்பிவிடக்கூடும். அவர் உடனடியாக இறங்கி வராமல் போகலாம். இன்றைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, நாளைக்கு அதே தவறை நீங்கள் செய்வீர்கள் என்று அவர் நினைத்தால், அவர் உங்கள் மன்னிப்பைப் பொருட்படுத்தாமல் போகக்கூடும்.

அப்படி ஒரு நிலை வந்தால், உங்கள் வாழ்க்கையைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள். உங்கள் வார்த்தைகளை முழுமையாக நம்ப முடியுமா? உங்கள் மீது மற்றவர்கள் முழுமையான நம்பிக்கைவைக்கும் அளவு நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.

நாம் பீகாரில் இருக்கும்போது, குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வந்து சேர்ந்துவிட்டால், நம் வாட்ச் நின்றுவிட்டதா என்று ஆட்டிப்பார்க்கிறோம். இதுவே ஜப்பானில் இருந்தால், ரயிலைப் பார்த்துவிட்டு வாட்ச்சில் நேரத்தைச் சரிசெய்யலாம்.

சாராயத்துக்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். 'இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும்' என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்திஎடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

பார்த்தான் நண்பன். ஒருநாள், ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக் கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப் போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான்.

'டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது' என்றான்.

'சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து...'

'கவலைப்படாதே நண்பா... வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்' என்றான் அவன்.

நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல் தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்துஇருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள் மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா?

உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல; நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது.

நீங்கள் சொன்னால் அதை வேத வாக்கியமாக எடுத்துக்கொள்ள இயலும் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு நம்பிக்கை மற்றவரிடத்தில் பிறந்துவிட்டால், உங்கள் வேலை சுலபம். நீங்கள் போய் மன்னிப்பு கேட்டால், உங்கள் நண்பர் மனம் மாறுவார்!''

- சரி செய்வோம்...

நன்றி விகடன்.

"பெற்றால்தான் பிள்ளையா ?" எஸ்.ராமகிருஷ்ணன்

அந்தப் பையனுக்கு 14 வயதிருக்கும். சென்னையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சம்மர் கேம்ப் ஒன்றில் அவனைச் சந்தித்தேன். ஓவியப் போட்டி, கதை சொல்லுதல், பாட்டுப் போட்டி என்று நான்கைந்து முதல் பரிசுகள் வாங்கியிருந்தான். உற்சாகம் பொங்கும் தோற்றம். வெளிறிய மஞ்சள் நிற உடல்வாகு, சப்பையான முகம். செம்பட்டை படிந்த தலை. நிச்சயம் இவன் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.

சம்மர் கேம்ப் ஏற்பாடு செய்திருந்த பள்ளியின் நிர்வாகி மைக்கில் பேசத் துவங்கினார், "நமது பள்ளியில் பணிபுரியும் சுப்ரஜா டீச்சரால் இரண்டு வயதிலேயே தத்து எடுக்கப்பட்ட அஸ்வின் என்ற நேபாளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், இன்று ஐந்து முதல் பரிசுகள் வென்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. யாவரும் அதைக் கைதட்டி வரவேற்போம்'' என்றார். மாணவர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், அஸ்வின் முகத்தில் இருந்த சந்தோஷம் அப்படியே வடிந்திருந்தது. அவன் அவசரமாக மேடையைவிட்டு இறங்கி ஓடினான்.

எதற்காக அவனைத் தத்துப்பிள்ளை என்று அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மேடையில் பேசியது போதாது என்பதுபோல, என் அருகில் உட்கார்ந்த நிர்வாகி, "இந்தப் பையனின் அப்பா-அம்மா எல்லாம் நேபாளிகள். ஸ்வெட்டர் விற்க வந்த ஆட்கள். புருஷன் விட்டுட்டுப் போயிட்டான். நேபாளிப் பெண்ணாலே பிள்ளையைப் பெத்து வளர்க்க முடியலை. டீச்சருக்கும் கல்யாணமாகி ஏழு வருஷமாப் பிள்ளை இல்லை. அதனால், இந்தப் பையனைப் பெரிய மனசு பண்ணி தத்து எடுத்துக்கிட்டாங்க. இப்போ டீச்சர் பேரைக் காப்பாத்துற மாதிரி படிக்கிறான். எங்கே பிறந்தா என்ன? எல்லாம் நாம வளர்க்கிறதுலதானே இருக்கு'' என்று சொன்னார்.

என்னால் அந்த அசட்டு உளறல்களைத் தாங்க முடியவில்லை. "அந்தப் பையனை நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள்'' என்று முகத்துக்கு நேராகச் சொன்னேன். அவரோ, "உண்மையைத்தானே சொன்னேன். இதில் என்ன அவமானப்படுத்த இருக்கிறது?'' என்றார். "அந்த உண்மை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது உங்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதான் இப்படிப் பேசுகிறீர்கள்'' என்று கடுத்த குரலில் சொன்னேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அன்றெல்லாம் ஆத்திரம் எனக்குத் தணியவே இல்லை.

திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் போனால், தம்பதிகள் சந்திக்கும் கேலிகளும், ஏளனப் பேச்சுக் களும், இலவச ஆலோசனைகளும் சகிக்க முடியாத வேதனைகள். குழந்தை பெற்றுவிட்டதைப் பெரிய சாதனைபோலப் பேசும் பலரைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே குழந்தை இல்லா தவர்கள் என்னதான் படித்து, உயர்வேலை செய்து வசதியாக வாழ்ந்தபோதும் அவர்களை விரல் நீட்டி, 'உங்களுக்குத்தான் பிள்ளை இல்லையே' என்று இளக்காரமாகப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

திருமணம், ஆணைவிடப் பெண்களுக்குப் பெரிய சவாலா கவே இருக்கிறது. உலகில் எந்த ஆணும் தான் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்குப் போய் அவர்களது சாப்பாட்டை, பழக்கவழக்கத்தை, இனிஷியலைப் போட்டுக்கொண்டு அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஏதோ சில சலுகைகளுக்காக அப்படி முன்வரும் ஒரு சிலர்கூட அதைப் பெரிய தியாகச் செயல்போலத்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால், பெண்கள் திருமணமான உடனே தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவர்கள் வீட்டு உணவின் ருசியோ, பழக்கமோ எதுவும் இருக்கக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் இது. குழந்தைப்பேறின்மைக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை நாம் யோசிப்பதே இல்லை. குழந்தை இல்லை என்று மறுமணம் செய்துகொண்ட ஆண்கள் பலரைக் கண்டு இருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணைக்கூட நாம் அனுமதிக்கவில்லையே... அது ஏன்?

குழந்தை இல்லாமல் இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், யாரோ ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதை என் உயிர் உள்ளவரை அனுமதிக்கவே மாட்டேன் என்று வீம்பு பேசும் வயதானவர்கள் பல வீடுகளில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து தத்து எடுப்பதைக் கைவிட்ட பலரையும் கண்டு இருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லை. கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பேசி, ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தனர். அந்தக் குழந்தைக் குப் பெயர் சூட்டும் விழாவுக்கு யாவரையும் அழைத்திருந்தார். நண்பரின் தாய் - தந்தை மற்றும் அவர் மனைவியின் உறவினர் என்று வந்திருந்த அத்தனை பேரும், "ஏன் இப்படிச் செய்தீர்கள்? இந்தப் பிள்ளை என்ன சாதியோ, என்ன குலமோ, ஏதாவது நோய் இருக்குமோ? இவள் நிறத்தைப் பாருங்கள்... அட்டைக் கரி. சிவப்பான பிள்ளையைத் தத்து எடுத்திருக்கலாமே'' என்று குற்றம் சொன்னதோடு, ஒருவரும் குழந்தையைத் தொட்டுத் தூக்கவோ, கொஞ்சவோ இல்லை.

எங்கோ கோயிலில் பார்க்கும் அடுத்தவர் குழந்தையைக்கூட ஆசையாகத் தொட்டுத் தூக்கும் நண்பரின் அம்மா, தன் மகன் யாரோ ஒரு அநாதை குழந்தையைத் தத்து எடுத்துவிட்டானே என்று, கடசிவரை குழந்தையைத் தொடவே இல்லை. தத்து எடுப்பதாக ஆசை இருந்தால் சொந்தத்தில் எடுத்திருக்கலாமே என்று அவரது அப்பா ஆதங்கப்பட்டார். இவர்களை ஏன் அழைத்தோம் என்று நண்பருக்கு மனச்சோர்வாகிப்போனது.

அந்தக் குழந்தையை எங்கே அழைத்துச் சென்றாலும், இதே கேள்விகள்... அபத்தமான அறிவுரைகள் அவர்களை ரணப்படுத்தின. ஒருமுறை மருத்துவமனையில், "இது உங்க வயித்துல வளர்ந்த பிள்ளை இல்லையா? அதான் பிள்ளை இப்படி மெலிஞ்சிபோயிருக்கு'' என்று ஒரு நர்ஸ் முகத்துக்கு நேராகச் சொல்லியதும், நண்பர் மனைவி வாய்விட்டு அழுதிருக்கிறார்.

அதற்காகவே அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை. நண்பர்கள் வீடுகளுக்குக்கூட வருவதில்லை. அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோதுதான் அவர்கள் இயல்பானார்கள். ஆனால், அப்போதும் ஊரில் இருந்து வந்துபோகும் யாராவது அந்தப் பிள்ளையின் முன்னால் அது தத்துப்பிள்ளை என்று சொல்லி மனதை நோகடிப்பார்கள்.

அப்படி ஊரில் இருந்து வந்த மாமா ஒருவர் அந்தச் சிறுமியைப் பார்த்து, "இதுதான் அடாப்டட் சைல்டா? நோகாம பிள்ளை பெத்துக்கிடறதுன்னு சொல்வாங்க. அது உங்க விஷயத்துல நடந்திருக்கு. பெத்த பிள்ளைகளையே நம்ப முடியலை. தத்துப் பிள்ளைன்னா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. எவனையாவது இழுத்துக்கிட்டு ஓடிப் போயிரும். பிறகு, நாமதான் தெருவுல நிக்கணும்'' என்று கமென்ட் அடித்திருக்கிறார்.

நண்பர் இந்த வலியைத் தாங்கிப் பழகியதால், அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார். ஆனால், அந்தச் சிறுமி அந்தச் சொல்லால் மிகவும் காயமடைந்துவிட்டாள். இரவெல்லாம் சாப்பிடாமல் அழுதிருக்கிறாள். அவளுக்காகவே நண்பர் வட இந்தியாவுக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு சென்றார்.

100 கோடிக்கும் மேலாக மக்கள்தொகை உள்ள நாட்டில் குழந்தை இல்லை என்பது பற்றி எரியும் பிரச்னையாக இருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். முந்தைய தலைமுறைகள்போல தத்து எடுப்பதற்கு இன்றைய பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதோ, தயக்கம் காட்டுவதோ இல்லை. ஆனால், அவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்து பவர்கள் பெரிதும் குடும்பத்து நபர்களே.

காலங்காலமாகவே நமது சமூகம் குழந்தைப்பேற்றை மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் பாவிகள். சபிக்கப்பட்டவர்கள் என்ற பொதுபிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. இரண்டும் இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாகி அர்த்தமற்றவையாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

குழந்தைகள் உலகுக்கு ஒளியாக வருகிறார்கள். ஒளியில் ஏது பேதம்? உண்மையில் குழந்தைகள் நம் நம்பிக்கைகள், கனவுகள். அன்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். நாம் வாழ்ந்த நினைவுகளை நாம் வசித்த வீடும், ஊரும், சேர்ந்த பணமும், செல்வமும் தேக்கிவைப்பதில்லை. ஆனால், நம் குழந்தைகளிடம் மட்டுமே நம் நினைவுகள் எஞ்சியிருக்கின்றன. நெஞ்சில்வைத்துக் காப்பாற்றப்படுகின்றன.

உலகமே பார்த்து ஆச்சர்யப்படும் சூப்பர்மேன் கதாபாத்திரம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பிள்ளையே. நம் காலத்தின் மாபெரும் தத்துவவாதியும் சிந்தனாவாதியுமான ஜெ.கிருஷ்ண மூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரே. செட்டிநாட்டில் ஆண் வாரிசுக்காகத் தத்து எடுப்பது தலைமுறை வழக்கமாகவே இருந்து வருகிறது. தத்துப்பிள்ளை என்பதற்காக அங்கே எந்தப் பேதமும் காட்டப்படுவது இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனப் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தை இயக்கியவர் ஷென் கேஹே. 13 வயதுச் சிறுவன் ஒருவனையும் அவன் அப்பாவையும்பற்றியது படம். அந்தச் சிறுவனுக்கு வயலின் வாசிப்பதில் மிகவும் அசாத்தியமான திறமை இருக்கிறது. அப்பாவோ, சாதாரணத் தொழிலாளி.

தன் மகனை மொசார்ட் போல நாடறிந்த இசைக் கலைஞன் ஆக்குவதற்காக பீகிங் அழைத்து வரும் அப்பா, அங்கே இசைப் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவைக்க ஆசைப்படுகிறார். அந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள திறமையான இளம் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஆகவே, அவனுக்குச் சிறப்பு பயிற்சியளிக்க நல்ல ஆசான் ஒருவர் தேவை என்று அறிந்து, சீனாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைத் தேடிச் சென்று, தன் மகன் அவரிடம் பாடம் படிக்க அனுமதிக்கும்படி கேட்கிறார். அதற்கு நிறையப் பணம் செலவாகும் என்றபோதும், தன்னிடம் உள்ள பொருட்களை விற்றுக் கடன் வாங்கி அவனைப் படிக்க அனுமதிக்கிறார்.

சிறுவனுக்கோ பதின் பிராயத்தில் தோன்றும் ஊர் சுற்றும் ஆசை. பெண்கள் மீது தோன்றும் ஏக்கம் காரணமாக அவன் திசை தடுமாறத் துவங்குகிறான். அப்பா அவனைக் கண்டிக்கிறார். இசையில் சாதனை செய்வது மட்டுமே அவனது உலகம் என்று திட்டுகிறார். அவன் தேர்ந்த இசைத் திறனுடன் இருந்தபோதும், அப்பாவின் ஆசைக்காக எதற்கு தான் சாதிக்க வேண்டும் என்று வீண்பிடிவாதம்கொள்கிறான். அப்பா சொன்ன இசைக் கலைஞரிடம் மனமில்லாமல் பாடம் படிக்கிறான்.

போட்டி நடக்கும் நாளில் தனக்கு இசை முக்கியம் இல்லை என்று விலக முடிவு செய்கிறான். அப்பா ஆத்திரமாகி அவனைப் பிரிந்து போகிறார். அப்போதுதான் அவன் ஒரு தத்துப்பிள்ளை, அவனைக் குழந்தையாக யாரோ ரயில் நிலையத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்பா அவனைக் கண்டெடுத்து வளர்த்து இசைக் கலைஞனாக உருவாக்க மிகவும் போராடியிருக்கிறார் என்ற உண்மைகள் தெரியவருகின்றன.

போட்டியில் வெல்வதைவிடவும், தன்னைப் பிரிந்து போகும் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகத் தனது வயலினுடன் ரயில் நிலையம் ஓடி வருகிறான். அங்கே பெரும் ஜனத்திரள் ததும்பி வழிகிறது. அப்பாவைத் தேடிக் காணாமல் மனம் உடைந்து வயலின் வாசிக்கத் துவங்குகிறான். மிக அற்புதமான வயலின் இசை ரயில் நிலையத்தையே ஸ்தம்பிக்கவைக்கிறது. இசை முடிவில் பொதுமக்கள் அவனைக் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள். தன்னை வளர்ப்பதற்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு அழுகிறான் மகன். அவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

தனது சொந்த வாழ்க்கையை மறந்து, தான் கண்டெடுத்த பிள்ளையின் திறமையை உலகம் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவின் மனதுதான் இந்தப் படம். இது எங்கோ... யாரோ ஓர் அப்பாவின் ஆசை மட்டுமில்லை. பிறப்பில் பேதமில்லை என்ற உறுதியான நம்பிக்கையுடன் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து உன்னத நிலையை அடையவைக்க ஆசைப்படும் பலரது மனதும் இதுவே!

இன்னும் பரவும்...

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
நன்றி விகடன்.

Thursday, 17 December 2009

சாதிகள் (நிஜமாகவே) இல்லையடி பாப்பா!

விகடன் இதழ் 'டீன் கொஸ்டீன்' பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வி-பதில் இது...

"சாதி மாறித் திருமணம் செய்துகொண்டவன் நான். என் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா?"

"கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் சாதியில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இப்போது இருக்கும் நடைமுறைப்படி பள்ளிச் சான்றிதழ் மற்றும் அரசின் பிற வேலைவாய்ப்புச் சான்றிதழ்களிலும் சாதி அவசியமாகிறது. சாதி பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், பள்ளியில் சேர்க்க மறுப்பது இப்போது உள்ள சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், 'சாதியைக் குறிப்பிடச் சொல்லக் கூடாது' என்று நீங்கள் விரும்பினால், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால் உரிய தீர்வு கிடைக்கும். சாதி குறிப்பிடவில்லை என்றால், உங்கள் குழந்தை பொதுப் பிரிவில் வரும்!"

இதழ் வெளியான மூன்றாவது நாளில் விகடன் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் சாராம்சம் இது...

"என் பேரு செந்தில்குமாருங்க. சென்னைல வேலை பாக்குற சேலத்துக்காரன். நான் சின்ன வயசுல இருந்தே சாதிக் கொடுமையால ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்ந்தவனுங்க. வாழ்க்கையோட வரமா எனக்குப் பொறந்தா ஆராதனா. அவ பொறந்த நிமிஷத்துல இருந்தே சாதி பேரைச் சொல்லி கிடைக்கும் எந்தச் சலுகையும் அவளுக்குத் தேவையில்லைன்னு முடிவெடுத்தேன். இப்ப அவளுக்கு மூணு வயசு. ஆராதனாவுக்கு எல்.கே.ஜி. அட்மிஷனுக்குப் போனப்போ அட்மிஷன் ஃபார்ம்ல 'சாதி'ங்கிற காலத்துல 'சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை'ன்னு எழுதினேன். 'சாதியைக் குறிப்பிடலைன்னா உங்க குழந்தைக்கு எதிர்காலத்துல சில சலுகைகள் கிடைக்காமப் போகலாம். பரவாயில்லையா?'ன்னு கேட்டாங்க பிரின்சிபால். 'தேவையில்லை'ன்னு உறுதியாச் சொன்னேன். 'வெரிகுட்'னு சொல்லி அட்மிஷன் போட்டாங்க.

படிப்பு, வேலைவாய்ப்புன்னு எதுவா இருந்தாலும், தங்கள் சாதிகளைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு அதிகளவில் சலுகை அளிக்க அரசாங்கம் முன்வரணும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்திவிட்டால், ஒரு காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களும்கூட தலை நிமிருவாங்க. சாதிரீதியான அடையாளத்தைத் தவிர்க்கத் தயாராயிடுவாங்க. சாதிகளைப் பள்ளிகளில் குறிப்பிட அவசியம் இல்லைன்னு எத்தனை பேருக்கு இங்கே தெரியுது? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் சாதியைக் குறிப்பிடுவதால் கிடைக்கும் சலுகைக்காகவே அவங்க தயங்குறாங்க. இது ஸ்கூல் அட்மிஷன் நேரம். சாதிகளைக் குறிப்பிடாம உங்க குழந்தைகளைப் பள்ளிகளில் சேருங்க.

'சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!'னு முண்டாசுக் கவிஞன் அப்பவே பாடிட்டுப் போயிட்டான். ஆனா கம்ப்யூட்டர், இன்டர்நெட், நிலவுக்கு மனுஷன்னு இந்தக் காலத்துலயும் நாம அதை விடாமத் தொங்கிட்டு இருக்கோம். இன்னிக்கு நாம விதைச்சாதான் நாளைக்கு அறுவடை பண்ண முடியும். நான் விதைச்சுட்டேன்!"

நாளைய நம்பிக்கையுடன்,
செந்தில்குமார்.

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்டோம்,

"2000-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தமிழக அரசாணை 205, 'இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றல் சான்றிதழ் ஆகியவற்றில் 'சாதி இல்லை, சமயம் இல்லை' என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ விரும்புவர்களுக்கு அந்த உரிமையை வழங்குகிறது. சாதியைக் குறிப்பிடாதவர்கள் பொதுப்பிரிவில் இணைக்கப்பட்டு விடுவார்கள்!" என்று தெரிவித்தார்.

எல்லோருமே 'பொதுப் பிரிவு' ஆகும் ஒரு நன்னாள் வரட்டும்!

நன்றி விகடன் !!!!

Friday, 11 December 2009

சூரி +2

நான் ஒரு சராசரி மாணவன். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி அடுத்தடுத்த கிளாசுக்கு வந்திடுவேன். எனக்கு வகுப்பறையில் முதல் வரிசையில் உட்கார ரொம்ப ஆசை. எப்படியாவது முதல் வரிசையில் உட்கார்ந்து நல்லா படிக்கிற மாணவனாக என்னை அடையாளப்படுத்தி கொள்வேன்.

+2 முதல் நாள் கிளாசுக்கு வந்திருந்தபோது, வகுப்பாசிரியர் அனைத்து மாணவர்களையும் உயரம் குறைந்தவர்கள் முதல் உயரமானவர்கள் வரை வரிசையாக நிற்க வைத்து கொண்டிருந்தார். +1 லிருந்து +2 வரும்போது சற்று உயரமாக வளர்ந்துவிட்டேன். எப்படியோ என்னுடைய காலை கொஞ்சமாக வளைத்து நெளித்து 7 வதாக நின்று முதல் வரிசையில் அமர்ந்து விட்டேன். எனக்கு இடது பக்கம் கோபிநாத் (தற்போது மருத்துவர்), வலது பக்கம் இர்பான் (தற்போது அரசு ஊழியர்). இருவருமே மிக சிறந்த படிப்பாளிகள். இந்த மாதிரி நல்லா படிக்கிற பசங்களோட பழகியே நானும் எப்படியோ நல்லா படிச்சிட்டேன்.

எப்படியோ முதல் வரிசையில இடம் பிடித்து உட்கார்ந்த மகிழ்ச்சியில் திளைத்துகொண்டிருந்தேன். வேதியியல் ஆசிரியர் உள்ளே நுழைந்து முதல் நாள் பாடம் எடுக்க துவங்கினார். முதல் நாள் என்பதால் பாடங்களை தவிர்த்து பொதுவான விஷயங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் எல்லோரையும் பார்த்து "ஒரு கை ஓசை போடுமா" என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்ட உடன், என்னையும் அறியாமல் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஒரு கையால் இரண்டு முறை "சிட்டிகை" போட்டு விட்டேன்.

வகுப்பறை முழுவதும் சில நிமிட அமைதி. ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. என்னை வகுப்பறையை விட்டு வெளியே சென்று நிற்குமாறு சொல்லிவிட்டார். அந்த வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். என் நண்பன் என்னருகில் வந்து, அவர் கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொன்னான். இல்லையென்றால் இந்த வருடம் வேதியியல் செய்முறை தேர்வில் (Practical Exam) அவர் உன் மதிப்பெண்ணை குறைத்துவிடுவார் என்று சொன்னான்.

வேகமாக சென்று வேதியியல் ஆசிரியரிடம் என்னை அறியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டேன். அவர் அடுத்த வினாடியே என் முதுகில் அவர் கையால் மூன்று அடி அடித்து விட்டார். எத்தனையோ
ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருந்தாலும், இந்த அடி என்னால் என்றும் மறக்க முடியாதது.

அவரிடம் டியூஷன் படித்தேன், காலாண்டு, அரையாண்டு வேதியியல் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி அவரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வெளியாகி இருந்தது. இயற்பியல் செய்முறை தேர்வில் (Physics practical ) 50/50, உயிரியல் செய்முறை தேர்வில் (Biology practical) 50/50 மற்றும் வேதியியல் செய்முறை தேர்வில் (Chemistry practical) 49/50.

இயற்பியல், உயிரியல் தேர்வை விட வேதியியல் தேர்வை மிக எளிமையாக செய்திருந்தேன். என் வகுப்பறை மாணவர்கள் பெரும்பாலானவர்கள் முழு மதிப்பெண்கள் வாங்கி இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டது ஏன்? என்பது மட்டும் இன்று வரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இந்த "வேதியியல் மாற்றம்" (Chemical reaction) என்னால் என்றும் மறக்க முடியாதது.
மாற்றங்கள் நிகழும்....
-சூரியபிரகாஷ்.வா

Saturday, 28 November 2009

1990ம் வருடம் - ஒரு நாள்

காஞ்சிபுரம், மிக சிறந்த கோயில்களுக்காகவும், பட்டு சேலைக்கும் புகழ் பெற்ற நகரமாக எல்லார்க்கும் தெரியும். இது தான் என் ஊர். இங்க எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் சினிமா பார்ப்பதும் ஒன்று. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுகிழமையும், காலையில 9.30 மணிக்கெல்லாம் முதல் காட்சி திரையிடப்படும்.

தமிழ் நாட்டிலேயே காஞ்சிபுரத்தில தான் இவ்வளவு சீக்கிரம் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் காலையில 8.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவதாக ஒரு நாளிதழ்ல படிச்சிருக்கேன். திங்கள் முதல் வெள்ளி வரை முதல் காட்சி 10.30 மணிக்கு ஆரம்பமாகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். ஏராளமான படங்களை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத சினிமா தியேட்டர் அனுபவங்கள் ஏராளம்.
ஒரு புது படம் எங்க ஊர் பாபு தியேட்டர்ல ரிலீஸ் ஆன போஸ்டர் பார்த்தேன். இப்பொழுது நான் ஏழாவது படிச்சிகிட்டு இருக்கேன். இந்த ஞாயிற்றுகிழமை இந்த படத்தை பார்த்திடனம்னு முடிவு பண்ணி எங்க அப்பா கிட்ட காசு கேட்டேன். ஒரு 10 ரூபாய் கொடுத்தார். 5 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய்க்கு எதாவது வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணேன். எனக்கு நினைவு தெரிஞ்சி நான் தனியா போய் பார்க்க போற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். கிளம்பும்போது, என் தம்பி ஒரே அழுகை, நானும் சினிமாக்கு வருவேன்னு. எங்க அம்மாவும், அவனையும் கூட்டிகிட்டு போடான்னு சொல்லிட்டாங்க. என் தம்பி ஐந்தாவது படிச்சிகிட்டு இருக்கான்.

நாங்க ரெண்டு பேரும் நடந்தே பாபு தியேட்டர்க்கு வந்தடைந்தோம். டிக்கெட் கவுன்ட்டர் ஒவ்வொரு ஆளாக நுழைந்து போகிற குகை மாதிரி இருக்கும். இது வேற புது படம், கூட்டம் எக்கசெக்கமாக இருந்தது. டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில நானும், என் தம்பியும் போய் நின்றோம். சமயத்துல முன்னாடி டிக்கெட் வாங்கற ஆர்வத்துல தலைக்கு மேல எல்லாம் பறந்து, டைவ் அடிச்சி எல்லாம் சில பேர் போவானுங்க. டிக்கெட் கவுன்டரை நெருங்கியதும், 10 ரூபாய் கொடுத்து 2 டிக்கெட் கொடுக்க சொல்லி கேட்டேன். டிக்கெட்டை கையில வாங்கின ஆர்வத்தோட நானும் என் தம்பியும் தியேட்டர் உள்ளை நுழைய முற்பட்டோம்.

அங்கே ஒரு செக்கிங் நபர் என் டிக்கெட்டை பார்த்து விட்டு "ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க" என்று கேட்டார். அதுவரை என்னிடம் இருந்தது ஒரு டிக்கெட்டா இல்ல இரண்டு டிக்கெட்டா என்று கூட தெரியாத நான் மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டேன். புதிய படம் என்பதால் டிக்கெட் விலை 10 ரூபாயாக மாறியிருந்தது எனக்கு தெரியவில்லை.

நாங்க இரண்டு பேர், கையில ஒரே ஒரு டிக்கெட், உள்ளே திரைப்படம் ஆரம்பிக்க போகிறது. எனக்கு ஒரே அழுகையாக வந்துவிட்டது. என் தம்பி மிக தெளிவாக, டேய் நீ படம் பார்த்துட்டு வா, நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். என்னடா இது முதல் முறையாக தனியாக படம் பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு ஒரே அழுகையும், வருத்தமாகவும் இருந்தது.

என் தம்பி சென்றவுடன், உள்ளே நுழைந்து ஒரு சீட் பிடிச்சி உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கினேன். திரையில் படத்தின் பெயர் போட்டார்கள்,
ஆபாவாணனின் "இணைந்த கைகள்" .