Showing posts with label சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள். Show all posts

Tuesday, 21 September 2010

விதிக்கப்பட்ட விதிகள்

கடந்த வாரம் விஜய் டிவி நீயா நானாவில் 'விதி' இருக்கா இல்லையா என்ற தலைப்பில் பல்வேறு சுவராசியமான  விஷயங்கள்   விவாதிக்கப்பட்டது.  அந்த தலைப்பு குறித்து சில கருத்துகள் என் பார்வையில்

எதிர்காலத்தில் நமக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த ஒரு பயம் அல்லது அதை பற்றி விளங்காத புதிர்கள், இதன் விளைவாக  உருவானது தான் விதி என்று பொதுவாக கருதப்படுகிறது. 'அவன் விதி அவ்வளவு தான்',  'வாழ்க்கையில் விதி விளையாடுது'  போன்ற சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலம்.

விதி என்ற ஒரு விஷயத்தின் மீது மக்களுக்கு பல தரப்பட்ட அபிப்பிராயம் இருக்கிறது. அவை இந்த நான்கு பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

I. எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.

II. விதி என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அதை பற்றி பயப்படாமல் உன் வேலையை பார்த்து கொண்டிரு.

III. விதி என்ற ஒன்று இல்லை, அதனால் அதை பற்றி கவலை பட வேண்டியது இல்லை.

IV. விதி என்கிற நம்பிக்கையை அல்லது உணர்வை கடக்கும் போது ஞானம் பிறக்கிறது.

அலுவலகத்தில்,  வேலையை குறித்த நேரத்தில் முடிக்காததால் மேனேஜர் கண்டிக்கும் போது,  என் விதி இவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு என்று மனதிற்குள் தோன்றும்.   இந்த செயலில் எந்த விதி உங்களை, உங்களுடைய வேலையை  குறித்த நேரத்தில் செய்ய விடாமல் தடுத்தது.  அந்த வேலையை குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் முடிக்க ஏற்கனவே ஒப்புகொண்டவரும் நீங்கள் தான். அதேபோல், குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் முடிக்காததும் நீங்கள் தான்.  உங்கள் தவறை உங்கள் மனது ஏற்று கொள்ள மறுக்கிறது. எனவே ஒரு 'விதி' யை உருவாக்கி தப்பிக்க வழி தேடுகின்றோம்.

நம்மை மீறின ஒரு செயல் அல்லது எதிர்பாராத ஒரு பிரச்சினையை சந்திக்கும் போது அல்லது நம்முடைய கட்டுபாட்டை மீறி ஏதாவது  நடக்கும் போது,  விதி என்று வித விதமான பெயரிட்டு அழைக்கிறோம்.  ஒரு மனிதன் மரணத்தை தழுவும் போது, அவன் விதி முடிந்ததாக கருதுகிறோம். இதை பார்த்து விட்டு எப்படி இருந்தாலும் விதிப்படி  நாம் இறக்க போகிறோம் என்று இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை கெடுத்து கொள்ளாமல்,  வாழும் காலத்தில் நீங்கள் செய்யும் நல்லவைகள் உங்கள் 'விதி' முடிந்த பின்பும் பேசப்பட கூடியதாக இருக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு என்ற விதி ஒன்று இருப்பதாக  நீங்கள் நினைத்தால்,  அதை பற்றி பயப்படாமல் உங்களுடைய வேலையை அல்லது கடமையை செய்து கொண்டிருக்கும் போது விதி என்ற ஒன்று இருந்தாலும் இல்லை என்றாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

அதேபோல், ஒரு மனிதன் சாதாரணமாக நான்காவது விதியை பின்பற்றி விட முடியாது. காரணம், படிப்படியாக அவன் வாழ்க்கை நிலையில் பெற்ற அனுபவங்கள், ழ்ந்த மற்றும் தேர்ந்த படிப்பறிவு மூலம் மட்டுமே அவன் அந்த விதி என்ற நிலையை கடந்து ஞானம் என்ற தெளிவான நிலையை அடைய முடியும்.