Wednesday 31 December 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009


பிச்சை புகினும்.. - பத்மா, பெங்களூரு (நன்றி: அவள் விகடன்)

அது 1952-ஆம் வருடம். நான் பள்ளியிறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வசதியானவர்கள் மட்டும்தான் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். என் குடும்பம் வறுமையில் உழன்றதால் என்னால் மாதாமாதம் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாத சூழல். இருந்தாலும் புத்தகம், நோட்ஸ் என்று எல்லாவற்றையும் இரவல் வாங்கிப் படித்து, முதலிடம் பிடித்து விடுவேன்.
இப்படிப்பட்ட சூழலில் எனது பள்ளிக் கட்டணத்தை ஊர்ப் பெரியவர் ஒருவர் தானே கட்டுவதாகக் கூறி, என்னைப் படிக்க வைத்தார். ஒருமுறை அவர் தொழில் விஷயமாக வெளியூர் சென்று விட்டதால் பணம் கட்டவில்லை.
அப்போது 'ப்ரீ ஃபைனல் எக்ஸாம்' நடந்து கொண்டிருந்தது. பரீட்சைக்குப் பணம் கட்டாததால் எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர் என்னை பரீட்சை எழுத அனுமதிக்க மறுத்துவிட்டார். அதோடு, 'இப்படி யாசகம் எடுத்துப் படிக்கணுமா? போய் அடுப்பூது, நான்கு வீட்டில் பாத்திரம் கழுவு' என்று அவர் கூற மாணவ, மாணவிகள் பலரும் சிரித்தனர். இது எனக்கு அவமானமாக இருந்தாலும் பரீட்சை எழுதியே தீருவது என்கிற தீர்மானத்துடன் ஹாலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.
அரை மணி நேரம் கழித்து அங்கு வந்த தலைமையாசிரியர் நான் வெளியே நிற்பதன் காரணத்தைக் கேட்க, நானும் சொன்னேன். உடனடியாக என்னை அவர் பரீட்சை எழுத அனுமதித்ததுடன் எனக்கான கட்டணம் மற்றும் ரீ - அட்மிஷன் தொகையையும் கட்டினார்.
ஒரே பள்ளியில் ஒரு ஆசிரியர் என்னை அவமானப்படுத்த, இன்னொருவர் என் உயர்வுக்குக் காரணமாக அமைந்தார்.கடைசியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்த நான் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். வேலையில் சேர்ந்து, அதன் பிறகு மேலும் படித்து இன்றுவரை ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
என்னுடைய டீன்-ஏஜில் நான் பெற்ற அவமானங்கள், உதவிகள்.. இந்த இரண்டுமே என் வாழ்வில் நான் உயர காரணமாக அமைந்தன.
இப்போது எனக்கு எழுபதைத் தொடும் வயது. இன்னும்கூட எதையாவது படிக்கிறேன். படிப்பு ஆசை எனக்குக் குறையவேயில்லை.

சிறந்த கேள்வி பதில்கள்

நான், யாரிடம் பேசினாலும் சண்டையில் போய் முடிகிறது! நியாயத்தைதான் சொல்கிறேன்... எனினும் எவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை! என்ன செய்வது?

எவருடன் பேசுவதாக இருந்தாலும்... 'வாருங்கள் கலந்து பேசுவோம்' என்று உரையாடலுக்குத் தயாராகுங்கள். எதிர் தரப்பினரின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! 'உரையாடல் என்பது இருவழிப் பாதை; எதிர்ப் பக்கத்தில் இருந்தும் பயணம் அனுமதிக்கப்படுகிறது' என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மாறாக, விவாதத்துக்கு அழைப்பு விடாதீர்கள். அது சண்டையில் முடியலாம். உரையாடல்- நட்புக்கு வழி வகுக்கும். விவாதம்- பகைமைக்கு வாசல் திறக்கும்!

-------------------------------------------------------------------------------------------------

என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. தப்பிக்க வழி சொல்லுங் களேன்?

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.உங்களது கேள்விக்கு, ஓஷோவே பதில் சொல்லி விட்டார். என் மீது எரிச்சல் எதுவும் இல்லையே!

-----------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறேன். சுருக்கமாக ஓர் யோசனை சொல்லுங்களேன்...

தனியாக இருக்கும்போது உங்களது எண்ணங்களில் கவனமாக இருங்கள்.
உங்களுடன் மற்றொருவரும் இருக்கும் நேரத்தில் எண்ணம் தவிர சொற்களிலும் கவனமாக இருங்கள்.பலரோடு சேர்ந்து இருக்கும் தருணத்தில்... எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தால் உயர்வு நிச்சயம்!