Thursday 31 December 2009

செய் செய்யாதே!.- சத்குரு ஜக்கி வாசுதேவ்

"ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அப்போது, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத் தைக் கொண்டுவர என்னால் முடிந்த வரை பலமுறை முயன்றுவிட்டேன். அவன் இறுக்கமாகவே இருக்கிறான். அந்த நண்பன் உங்கள் மீது அபார மதிப்பு வைத்திருப்பவன். உங்கள் வார்த்தைகளைக் கவனிப்பவன். என்னை மறுபடியும் நெருக்கமான நண்பனாக ஏற்கச் சொல்லி நீங்கள் சொன்னால் கேட்பான். செய்வீர்களா?"

‘‘பிறப்பினாலோ, அல்லது சமூக பந்தத்தினாலோ, ஓர் உறவு அமைந்துவிட்டால், அது பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது மிகத் தவறு. மனைவியோ, கணவனோ, தாயோ, தந்தையோ, குழந்தையோ, நண்பரோ, எந்த நெருக்கமான உறவாக இருந்தாலும், அது இரும்புக் கவசம் அணிந்திருப்பதில்லை.

உறவு என்பது மிக அழகான கண்ணாடி ஜாடி போன்றது. அதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது. அதைக் கவனம்இன்றிக் கீழே போட்டுவிட்டால், அது நொறுங்கித்தான் போகும். நொறுங்கியதை மறுபடி பழைய வடிவத்துக்குக் கொண்டுவருவது இயலவே இயலாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மிகவும் கடினமான வேலை.

கடற்கரையில் சங்கரன்பிள்ளை நடந்துகொண்டு இருந்தார். ஒரு பையன் ஓடி வந்தான். அவரிடம் 'சார், வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பாட்டில் ஒன்றை எடுத்துக் காட்டினான்.

'என்ன விலை?' என்றார் சங்கரன்பிள்ளை.

'500 ரூபாய்.'

'கொள்ளையாக இருக்கிறதே, வேண்டாம்.'

'சரி, பிஸ்கட்டாவது வாங்கிக்கொள்ளுங்கள் சார். இரண்டே ரூபாய்தான்.'

சங்கரன்பிள்ளை பரிதாபப்பட்டு வாங்கினார். பிஸ்கட்டை வாயில் போட்டவர் தூதூவென்று துப்பினார்.

'என்ன கண்றாவி இது? இவ்வளவு மோசமாக நாறுகிறதே?'

'இப்போது சொல்லுங்கள் சார்... வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வேண்டுமா?'

இதைப்போலத்தான் பிரச்னைகளை நாமே உருவாக்கிவிட்டு, அவற்றுக்குத் தீர்வு தேடி அலைகிறோம். எப்போதும், உங்கள் எண்ணத்துக்கு ஏற்ப மற்றவரை மாற்ற வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. நீங்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி எப்படிப்பட்ட உறவும் நிலைத்து இருக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

சில உறவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். 'நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை' என்று உணர்ந்தவர்கள்கூட, ஏதோ காரணத்தினால் பிரிய நேரிடும். அப்படிப் பிரிந்து இருப்பது, சேர்ந்து இருந்ததைவிட அதிக நிம்மதி தரும் என்பதை அவர் கள் உணர்ந்துவிட்டால், எதற்கு மறு படியும் தலைவலி என்று ஒதுங்கி இருக்கத்தானே நினைப்பார்கள்?

உங்கள் நண்பர் ஒருவேளை ஏதோ ஓர் ஆதாயத்துக்காக உங்களுடன் நட்பு பாராட்டியிருந்தால், அவருக்கான ஆதாயம் கிடைத்ததும், பிரிவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்து இருந்திருக்கக்கூடும். நீங்கள் சொன்ன வார்த்தைகளைக் காரணம் காட்டி, அவர் ஒதுங்கியிருக்கலாம்.

அவர் கோபத்திலோ, வருத்தத்திலோ இருந்தால் அந்தக் கோபத்தைக் குறைக்கப் பார்க்கலாம். விட்டதடா தொல்லை என்று அவர் ஒதுங்கப்பார்த்தால், யார் சொன்னதற் காகவும் அவர் உங்களுடன் மீண்டும் நண்பர் ஆகப் போவதில்லை.

ஒவ்வோர் உறவின் ஏமாற்றமும் சரிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால், அத்தனை பேரும் சரிசெய்யக்கூடிவர்களாக இருப்பதில்லை. அதற்கான பக்குவம் பெற்றவர்களாக அவர்கள் விளங்குவது இல்லை.

இந்த உண்மையை முதலில் முழுமையாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது அந்த நண்பருடைய உறவு உங்களுக்கு முக்கியமானதா என்பதைத் தீர்மானியுங்கள். முக்கியமானது என்றால், செய்த தவறுக்கு அவரிடம் மனதார மன்னிப்புக் கேளுங்கள்.

'ஏதோ ஓர் அறியாமையில், முட்டாள்தனத்தில் தவறாகப் பேசிவிட்டேன், என் உணர்வு உன் நட்பைத்தான் விரும்புகிறது' என்று அவருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். சொல்லிவிட்டு, முடிவு செய்ய அவருக்கு அவகாசம் கொடுங்கள். அவர் நெருங்கி வருகிறாரா, பாருங்கள்.

அந்த இடைவெளிகூடக் கொடுக்காமல், மேலும் மேலும் அவரை நட்புக்காக வற்புறுத்தினால், அது மேலும் எரிச்சலைக் கிளப்பிவிடக்கூடும். அவர் உடனடியாக இறங்கி வராமல் போகலாம். இன்றைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, நாளைக்கு அதே தவறை நீங்கள் செய்வீர்கள் என்று அவர் நினைத்தால், அவர் உங்கள் மன்னிப்பைப் பொருட்படுத்தாமல் போகக்கூடும்.

அப்படி ஒரு நிலை வந்தால், உங்கள் வாழ்க்கையைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள். உங்கள் வார்த்தைகளை முழுமையாக நம்ப முடியுமா? உங்கள் மீது மற்றவர்கள் முழுமையான நம்பிக்கைவைக்கும் அளவு நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.

நாம் பீகாரில் இருக்கும்போது, குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வந்து சேர்ந்துவிட்டால், நம் வாட்ச் நின்றுவிட்டதா என்று ஆட்டிப்பார்க்கிறோம். இதுவே ஜப்பானில் இருந்தால், ரயிலைப் பார்த்துவிட்டு வாட்ச்சில் நேரத்தைச் சரிசெய்யலாம்.

சாராயத்துக்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். 'இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும்' என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்திஎடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

பார்த்தான் நண்பன். ஒருநாள், ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக் கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப் போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான்.

'டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது' என்றான்.

'சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து...'

'கவலைப்படாதே நண்பா... வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்' என்றான் அவன்.

நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல் தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்துஇருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள் மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா?

உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல; நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது.

நீங்கள் சொன்னால் அதை வேத வாக்கியமாக எடுத்துக்கொள்ள இயலும் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு நம்பிக்கை மற்றவரிடத்தில் பிறந்துவிட்டால், உங்கள் வேலை சுலபம். நீங்கள் போய் மன்னிப்பு கேட்டால், உங்கள் நண்பர் மனம் மாறுவார்!''

- சரி செய்வோம்...

நன்றி விகடன்.

"பெற்றால்தான் பிள்ளையா ?" எஸ்.ராமகிருஷ்ணன்

அந்தப் பையனுக்கு 14 வயதிருக்கும். சென்னையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சம்மர் கேம்ப் ஒன்றில் அவனைச் சந்தித்தேன். ஓவியப் போட்டி, கதை சொல்லுதல், பாட்டுப் போட்டி என்று நான்கைந்து முதல் பரிசுகள் வாங்கியிருந்தான். உற்சாகம் பொங்கும் தோற்றம். வெளிறிய மஞ்சள் நிற உடல்வாகு, சப்பையான முகம். செம்பட்டை படிந்த தலை. நிச்சயம் இவன் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.

சம்மர் கேம்ப் ஏற்பாடு செய்திருந்த பள்ளியின் நிர்வாகி மைக்கில் பேசத் துவங்கினார், "நமது பள்ளியில் பணிபுரியும் சுப்ரஜா டீச்சரால் இரண்டு வயதிலேயே தத்து எடுக்கப்பட்ட அஸ்வின் என்ற நேபாளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், இன்று ஐந்து முதல் பரிசுகள் வென்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. யாவரும் அதைக் கைதட்டி வரவேற்போம்'' என்றார். மாணவர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், அஸ்வின் முகத்தில் இருந்த சந்தோஷம் அப்படியே வடிந்திருந்தது. அவன் அவசரமாக மேடையைவிட்டு இறங்கி ஓடினான்.

எதற்காக அவனைத் தத்துப்பிள்ளை என்று அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மேடையில் பேசியது போதாது என்பதுபோல, என் அருகில் உட்கார்ந்த நிர்வாகி, "இந்தப் பையனின் அப்பா-அம்மா எல்லாம் நேபாளிகள். ஸ்வெட்டர் விற்க வந்த ஆட்கள். புருஷன் விட்டுட்டுப் போயிட்டான். நேபாளிப் பெண்ணாலே பிள்ளையைப் பெத்து வளர்க்க முடியலை. டீச்சருக்கும் கல்யாணமாகி ஏழு வருஷமாப் பிள்ளை இல்லை. அதனால், இந்தப் பையனைப் பெரிய மனசு பண்ணி தத்து எடுத்துக்கிட்டாங்க. இப்போ டீச்சர் பேரைக் காப்பாத்துற மாதிரி படிக்கிறான். எங்கே பிறந்தா என்ன? எல்லாம் நாம வளர்க்கிறதுலதானே இருக்கு'' என்று சொன்னார்.

என்னால் அந்த அசட்டு உளறல்களைத் தாங்க முடியவில்லை. "அந்தப் பையனை நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள்'' என்று முகத்துக்கு நேராகச் சொன்னேன். அவரோ, "உண்மையைத்தானே சொன்னேன். இதில் என்ன அவமானப்படுத்த இருக்கிறது?'' என்றார். "அந்த உண்மை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது உங்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதான் இப்படிப் பேசுகிறீர்கள்'' என்று கடுத்த குரலில் சொன்னேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அன்றெல்லாம் ஆத்திரம் எனக்குத் தணியவே இல்லை.

திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் போனால், தம்பதிகள் சந்திக்கும் கேலிகளும், ஏளனப் பேச்சுக் களும், இலவச ஆலோசனைகளும் சகிக்க முடியாத வேதனைகள். குழந்தை பெற்றுவிட்டதைப் பெரிய சாதனைபோலப் பேசும் பலரைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே குழந்தை இல்லா தவர்கள் என்னதான் படித்து, உயர்வேலை செய்து வசதியாக வாழ்ந்தபோதும் அவர்களை விரல் நீட்டி, 'உங்களுக்குத்தான் பிள்ளை இல்லையே' என்று இளக்காரமாகப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

திருமணம், ஆணைவிடப் பெண்களுக்குப் பெரிய சவாலா கவே இருக்கிறது. உலகில் எந்த ஆணும் தான் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்குப் போய் அவர்களது சாப்பாட்டை, பழக்கவழக்கத்தை, இனிஷியலைப் போட்டுக்கொண்டு அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஏதோ சில சலுகைகளுக்காக அப்படி முன்வரும் ஒரு சிலர்கூட அதைப் பெரிய தியாகச் செயல்போலத்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால், பெண்கள் திருமணமான உடனே தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவர்கள் வீட்டு உணவின் ருசியோ, பழக்கமோ எதுவும் இருக்கக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் இது. குழந்தைப்பேறின்மைக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை நாம் யோசிப்பதே இல்லை. குழந்தை இல்லை என்று மறுமணம் செய்துகொண்ட ஆண்கள் பலரைக் கண்டு இருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணைக்கூட நாம் அனுமதிக்கவில்லையே... அது ஏன்?

குழந்தை இல்லாமல் இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், யாரோ ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதை என் உயிர் உள்ளவரை அனுமதிக்கவே மாட்டேன் என்று வீம்பு பேசும் வயதானவர்கள் பல வீடுகளில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து தத்து எடுப்பதைக் கைவிட்ட பலரையும் கண்டு இருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லை. கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பேசி, ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தனர். அந்தக் குழந்தைக் குப் பெயர் சூட்டும் விழாவுக்கு யாவரையும் அழைத்திருந்தார். நண்பரின் தாய் - தந்தை மற்றும் அவர் மனைவியின் உறவினர் என்று வந்திருந்த அத்தனை பேரும், "ஏன் இப்படிச் செய்தீர்கள்? இந்தப் பிள்ளை என்ன சாதியோ, என்ன குலமோ, ஏதாவது நோய் இருக்குமோ? இவள் நிறத்தைப் பாருங்கள்... அட்டைக் கரி. சிவப்பான பிள்ளையைத் தத்து எடுத்திருக்கலாமே'' என்று குற்றம் சொன்னதோடு, ஒருவரும் குழந்தையைத் தொட்டுத் தூக்கவோ, கொஞ்சவோ இல்லை.

எங்கோ கோயிலில் பார்க்கும் அடுத்தவர் குழந்தையைக்கூட ஆசையாகத் தொட்டுத் தூக்கும் நண்பரின் அம்மா, தன் மகன் யாரோ ஒரு அநாதை குழந்தையைத் தத்து எடுத்துவிட்டானே என்று, கடசிவரை குழந்தையைத் தொடவே இல்லை. தத்து எடுப்பதாக ஆசை இருந்தால் சொந்தத்தில் எடுத்திருக்கலாமே என்று அவரது அப்பா ஆதங்கப்பட்டார். இவர்களை ஏன் அழைத்தோம் என்று நண்பருக்கு மனச்சோர்வாகிப்போனது.

அந்தக் குழந்தையை எங்கே அழைத்துச் சென்றாலும், இதே கேள்விகள்... அபத்தமான அறிவுரைகள் அவர்களை ரணப்படுத்தின. ஒருமுறை மருத்துவமனையில், "இது உங்க வயித்துல வளர்ந்த பிள்ளை இல்லையா? அதான் பிள்ளை இப்படி மெலிஞ்சிபோயிருக்கு'' என்று ஒரு நர்ஸ் முகத்துக்கு நேராகச் சொல்லியதும், நண்பர் மனைவி வாய்விட்டு அழுதிருக்கிறார்.

அதற்காகவே அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை. நண்பர்கள் வீடுகளுக்குக்கூட வருவதில்லை. அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோதுதான் அவர்கள் இயல்பானார்கள். ஆனால், அப்போதும் ஊரில் இருந்து வந்துபோகும் யாராவது அந்தப் பிள்ளையின் முன்னால் அது தத்துப்பிள்ளை என்று சொல்லி மனதை நோகடிப்பார்கள்.

அப்படி ஊரில் இருந்து வந்த மாமா ஒருவர் அந்தச் சிறுமியைப் பார்த்து, "இதுதான் அடாப்டட் சைல்டா? நோகாம பிள்ளை பெத்துக்கிடறதுன்னு சொல்வாங்க. அது உங்க விஷயத்துல நடந்திருக்கு. பெத்த பிள்ளைகளையே நம்ப முடியலை. தத்துப் பிள்ளைன்னா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. எவனையாவது இழுத்துக்கிட்டு ஓடிப் போயிரும். பிறகு, நாமதான் தெருவுல நிக்கணும்'' என்று கமென்ட் அடித்திருக்கிறார்.

நண்பர் இந்த வலியைத் தாங்கிப் பழகியதால், அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார். ஆனால், அந்தச் சிறுமி அந்தச் சொல்லால் மிகவும் காயமடைந்துவிட்டாள். இரவெல்லாம் சாப்பிடாமல் அழுதிருக்கிறாள். அவளுக்காகவே நண்பர் வட இந்தியாவுக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு சென்றார்.

100 கோடிக்கும் மேலாக மக்கள்தொகை உள்ள நாட்டில் குழந்தை இல்லை என்பது பற்றி எரியும் பிரச்னையாக இருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். முந்தைய தலைமுறைகள்போல தத்து எடுப்பதற்கு இன்றைய பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதோ, தயக்கம் காட்டுவதோ இல்லை. ஆனால், அவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்து பவர்கள் பெரிதும் குடும்பத்து நபர்களே.

காலங்காலமாகவே நமது சமூகம் குழந்தைப்பேற்றை மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் பாவிகள். சபிக்கப்பட்டவர்கள் என்ற பொதுபிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. இரண்டும் இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாகி அர்த்தமற்றவையாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

குழந்தைகள் உலகுக்கு ஒளியாக வருகிறார்கள். ஒளியில் ஏது பேதம்? உண்மையில் குழந்தைகள் நம் நம்பிக்கைகள், கனவுகள். அன்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். நாம் வாழ்ந்த நினைவுகளை நாம் வசித்த வீடும், ஊரும், சேர்ந்த பணமும், செல்வமும் தேக்கிவைப்பதில்லை. ஆனால், நம் குழந்தைகளிடம் மட்டுமே நம் நினைவுகள் எஞ்சியிருக்கின்றன. நெஞ்சில்வைத்துக் காப்பாற்றப்படுகின்றன.

உலகமே பார்த்து ஆச்சர்யப்படும் சூப்பர்மேன் கதாபாத்திரம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பிள்ளையே. நம் காலத்தின் மாபெரும் தத்துவவாதியும் சிந்தனாவாதியுமான ஜெ.கிருஷ்ண மூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரே. செட்டிநாட்டில் ஆண் வாரிசுக்காகத் தத்து எடுப்பது தலைமுறை வழக்கமாகவே இருந்து வருகிறது. தத்துப்பிள்ளை என்பதற்காக அங்கே எந்தப் பேதமும் காட்டப்படுவது இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனப் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தை இயக்கியவர் ஷென் கேஹே. 13 வயதுச் சிறுவன் ஒருவனையும் அவன் அப்பாவையும்பற்றியது படம். அந்தச் சிறுவனுக்கு வயலின் வாசிப்பதில் மிகவும் அசாத்தியமான திறமை இருக்கிறது. அப்பாவோ, சாதாரணத் தொழிலாளி.

தன் மகனை மொசார்ட் போல நாடறிந்த இசைக் கலைஞன் ஆக்குவதற்காக பீகிங் அழைத்து வரும் அப்பா, அங்கே இசைப் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவைக்க ஆசைப்படுகிறார். அந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள திறமையான இளம் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஆகவே, அவனுக்குச் சிறப்பு பயிற்சியளிக்க நல்ல ஆசான் ஒருவர் தேவை என்று அறிந்து, சீனாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைத் தேடிச் சென்று, தன் மகன் அவரிடம் பாடம் படிக்க அனுமதிக்கும்படி கேட்கிறார். அதற்கு நிறையப் பணம் செலவாகும் என்றபோதும், தன்னிடம் உள்ள பொருட்களை விற்றுக் கடன் வாங்கி அவனைப் படிக்க அனுமதிக்கிறார்.

சிறுவனுக்கோ பதின் பிராயத்தில் தோன்றும் ஊர் சுற்றும் ஆசை. பெண்கள் மீது தோன்றும் ஏக்கம் காரணமாக அவன் திசை தடுமாறத் துவங்குகிறான். அப்பா அவனைக் கண்டிக்கிறார். இசையில் சாதனை செய்வது மட்டுமே அவனது உலகம் என்று திட்டுகிறார். அவன் தேர்ந்த இசைத் திறனுடன் இருந்தபோதும், அப்பாவின் ஆசைக்காக எதற்கு தான் சாதிக்க வேண்டும் என்று வீண்பிடிவாதம்கொள்கிறான். அப்பா சொன்ன இசைக் கலைஞரிடம் மனமில்லாமல் பாடம் படிக்கிறான்.

போட்டி நடக்கும் நாளில் தனக்கு இசை முக்கியம் இல்லை என்று விலக முடிவு செய்கிறான். அப்பா ஆத்திரமாகி அவனைப் பிரிந்து போகிறார். அப்போதுதான் அவன் ஒரு தத்துப்பிள்ளை, அவனைக் குழந்தையாக யாரோ ரயில் நிலையத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்பா அவனைக் கண்டெடுத்து வளர்த்து இசைக் கலைஞனாக உருவாக்க மிகவும் போராடியிருக்கிறார் என்ற உண்மைகள் தெரியவருகின்றன.

போட்டியில் வெல்வதைவிடவும், தன்னைப் பிரிந்து போகும் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகத் தனது வயலினுடன் ரயில் நிலையம் ஓடி வருகிறான். அங்கே பெரும் ஜனத்திரள் ததும்பி வழிகிறது. அப்பாவைத் தேடிக் காணாமல் மனம் உடைந்து வயலின் வாசிக்கத் துவங்குகிறான். மிக அற்புதமான வயலின் இசை ரயில் நிலையத்தையே ஸ்தம்பிக்கவைக்கிறது. இசை முடிவில் பொதுமக்கள் அவனைக் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள். தன்னை வளர்ப்பதற்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு அழுகிறான் மகன். அவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

தனது சொந்த வாழ்க்கையை மறந்து, தான் கண்டெடுத்த பிள்ளையின் திறமையை உலகம் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவின் மனதுதான் இந்தப் படம். இது எங்கோ... யாரோ ஓர் அப்பாவின் ஆசை மட்டுமில்லை. பிறப்பில் பேதமில்லை என்ற உறுதியான நம்பிக்கையுடன் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து உன்னத நிலையை அடையவைக்க ஆசைப்படும் பலரது மனதும் இதுவே!

இன்னும் பரவும்...

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
நன்றி விகடன்.

Thursday 17 December 2009

சாதிகள் (நிஜமாகவே) இல்லையடி பாப்பா!

விகடன் இதழ் 'டீன் கொஸ்டீன்' பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வி-பதில் இது...

"சாதி மாறித் திருமணம் செய்துகொண்டவன் நான். என் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா?"

"கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் சாதியில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இப்போது இருக்கும் நடைமுறைப்படி பள்ளிச் சான்றிதழ் மற்றும் அரசின் பிற வேலைவாய்ப்புச் சான்றிதழ்களிலும் சாதி அவசியமாகிறது. சாதி பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், பள்ளியில் சேர்க்க மறுப்பது இப்போது உள்ள சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், 'சாதியைக் குறிப்பிடச் சொல்லக் கூடாது' என்று நீங்கள் விரும்பினால், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால் உரிய தீர்வு கிடைக்கும். சாதி குறிப்பிடவில்லை என்றால், உங்கள் குழந்தை பொதுப் பிரிவில் வரும்!"

இதழ் வெளியான மூன்றாவது நாளில் விகடன் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் சாராம்சம் இது...

"என் பேரு செந்தில்குமாருங்க. சென்னைல வேலை பாக்குற சேலத்துக்காரன். நான் சின்ன வயசுல இருந்தே சாதிக் கொடுமையால ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்ந்தவனுங்க. வாழ்க்கையோட வரமா எனக்குப் பொறந்தா ஆராதனா. அவ பொறந்த நிமிஷத்துல இருந்தே சாதி பேரைச் சொல்லி கிடைக்கும் எந்தச் சலுகையும் அவளுக்குத் தேவையில்லைன்னு முடிவெடுத்தேன். இப்ப அவளுக்கு மூணு வயசு. ஆராதனாவுக்கு எல்.கே.ஜி. அட்மிஷனுக்குப் போனப்போ அட்மிஷன் ஃபார்ம்ல 'சாதி'ங்கிற காலத்துல 'சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை'ன்னு எழுதினேன். 'சாதியைக் குறிப்பிடலைன்னா உங்க குழந்தைக்கு எதிர்காலத்துல சில சலுகைகள் கிடைக்காமப் போகலாம். பரவாயில்லையா?'ன்னு கேட்டாங்க பிரின்சிபால். 'தேவையில்லை'ன்னு உறுதியாச் சொன்னேன். 'வெரிகுட்'னு சொல்லி அட்மிஷன் போட்டாங்க.

படிப்பு, வேலைவாய்ப்புன்னு எதுவா இருந்தாலும், தங்கள் சாதிகளைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு அதிகளவில் சலுகை அளிக்க அரசாங்கம் முன்வரணும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்திவிட்டால், ஒரு காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களும்கூட தலை நிமிருவாங்க. சாதிரீதியான அடையாளத்தைத் தவிர்க்கத் தயாராயிடுவாங்க. சாதிகளைப் பள்ளிகளில் குறிப்பிட அவசியம் இல்லைன்னு எத்தனை பேருக்கு இங்கே தெரியுது? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் சாதியைக் குறிப்பிடுவதால் கிடைக்கும் சலுகைக்காகவே அவங்க தயங்குறாங்க. இது ஸ்கூல் அட்மிஷன் நேரம். சாதிகளைக் குறிப்பிடாம உங்க குழந்தைகளைப் பள்ளிகளில் சேருங்க.

'சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!'னு முண்டாசுக் கவிஞன் அப்பவே பாடிட்டுப் போயிட்டான். ஆனா கம்ப்யூட்டர், இன்டர்நெட், நிலவுக்கு மனுஷன்னு இந்தக் காலத்துலயும் நாம அதை விடாமத் தொங்கிட்டு இருக்கோம். இன்னிக்கு நாம விதைச்சாதான் நாளைக்கு அறுவடை பண்ண முடியும். நான் விதைச்சுட்டேன்!"

நாளைய நம்பிக்கையுடன்,
செந்தில்குமார்.

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்டோம்,

"2000-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தமிழக அரசாணை 205, 'இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றல் சான்றிதழ் ஆகியவற்றில் 'சாதி இல்லை, சமயம் இல்லை' என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ விரும்புவர்களுக்கு அந்த உரிமையை வழங்குகிறது. சாதியைக் குறிப்பிடாதவர்கள் பொதுப்பிரிவில் இணைக்கப்பட்டு விடுவார்கள்!" என்று தெரிவித்தார்.

எல்லோருமே 'பொதுப் பிரிவு' ஆகும் ஒரு நன்னாள் வரட்டும்!

நன்றி விகடன் !!!!

Friday 11 December 2009

சூரி +2

நான் ஒரு சராசரி மாணவன். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி அடுத்தடுத்த கிளாசுக்கு வந்திடுவேன். எனக்கு வகுப்பறையில் முதல் வரிசையில் உட்கார ரொம்ப ஆசை. எப்படியாவது முதல் வரிசையில் உட்கார்ந்து நல்லா படிக்கிற மாணவனாக என்னை அடையாளப்படுத்தி கொள்வேன்.

+2 முதல் நாள் கிளாசுக்கு வந்திருந்தபோது, வகுப்பாசிரியர் அனைத்து மாணவர்களையும் உயரம் குறைந்தவர்கள் முதல் உயரமானவர்கள் வரை வரிசையாக நிற்க வைத்து கொண்டிருந்தார். +1 லிருந்து +2 வரும்போது சற்று உயரமாக வளர்ந்துவிட்டேன். எப்படியோ என்னுடைய காலை கொஞ்சமாக வளைத்து நெளித்து 7 வதாக நின்று முதல் வரிசையில் அமர்ந்து விட்டேன். எனக்கு இடது பக்கம் கோபிநாத் (தற்போது மருத்துவர்), வலது பக்கம் இர்பான் (தற்போது அரசு ஊழியர்). இருவருமே மிக சிறந்த படிப்பாளிகள். இந்த மாதிரி நல்லா படிக்கிற பசங்களோட பழகியே நானும் எப்படியோ நல்லா படிச்சிட்டேன்.

எப்படியோ முதல் வரிசையில இடம் பிடித்து உட்கார்ந்த மகிழ்ச்சியில் திளைத்துகொண்டிருந்தேன். வேதியியல் ஆசிரியர் உள்ளே நுழைந்து முதல் நாள் பாடம் எடுக்க துவங்கினார். முதல் நாள் என்பதால் பாடங்களை தவிர்த்து பொதுவான விஷயங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் எல்லோரையும் பார்த்து "ஒரு கை ஓசை போடுமா" என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்ட உடன், என்னையும் அறியாமல் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஒரு கையால் இரண்டு முறை "சிட்டிகை" போட்டு விட்டேன்.

வகுப்பறை முழுவதும் சில நிமிட அமைதி. ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. என்னை வகுப்பறையை விட்டு வெளியே சென்று நிற்குமாறு சொல்லிவிட்டார். அந்த வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். என் நண்பன் என்னருகில் வந்து, அவர் கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொன்னான். இல்லையென்றால் இந்த வருடம் வேதியியல் செய்முறை தேர்வில் (Practical Exam) அவர் உன் மதிப்பெண்ணை குறைத்துவிடுவார் என்று சொன்னான்.

வேகமாக சென்று வேதியியல் ஆசிரியரிடம் என்னை அறியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டேன். அவர் அடுத்த வினாடியே என் முதுகில் அவர் கையால் மூன்று அடி அடித்து விட்டார். எத்தனையோ
ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருந்தாலும், இந்த அடி என்னால் என்றும் மறக்க முடியாதது.

அவரிடம் டியூஷன் படித்தேன், காலாண்டு, அரையாண்டு வேதியியல் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி அவரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வெளியாகி இருந்தது. இயற்பியல் செய்முறை தேர்வில் (Physics practical ) 50/50, உயிரியல் செய்முறை தேர்வில் (Biology practical) 50/50 மற்றும் வேதியியல் செய்முறை தேர்வில் (Chemistry practical) 49/50.

இயற்பியல், உயிரியல் தேர்வை விட வேதியியல் தேர்வை மிக எளிமையாக செய்திருந்தேன். என் வகுப்பறை மாணவர்கள் பெரும்பாலானவர்கள் முழு மதிப்பெண்கள் வாங்கி இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டது ஏன்? என்பது மட்டும் இன்று வரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இந்த "வேதியியல் மாற்றம்" (Chemical reaction) என்னால் என்றும் மறக்க முடியாதது.
மாற்றங்கள் நிகழும்....
-சூரியபிரகாஷ்.வா

Saturday 28 November 2009

1990ம் வருடம் - ஒரு நாள்

காஞ்சிபுரம், மிக சிறந்த கோயில்களுக்காகவும், பட்டு சேலைக்கும் புகழ் பெற்ற நகரமாக எல்லார்க்கும் தெரியும். இது தான் என் ஊர். இங்க எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் சினிமா பார்ப்பதும் ஒன்று. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுகிழமையும், காலையில 9.30 மணிக்கெல்லாம் முதல் காட்சி திரையிடப்படும்.

தமிழ் நாட்டிலேயே காஞ்சிபுரத்தில தான் இவ்வளவு சீக்கிரம் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் காலையில 8.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவதாக ஒரு நாளிதழ்ல படிச்சிருக்கேன். திங்கள் முதல் வெள்ளி வரை முதல் காட்சி 10.30 மணிக்கு ஆரம்பமாகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். ஏராளமான படங்களை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத சினிமா தியேட்டர் அனுபவங்கள் ஏராளம்.
ஒரு புது படம் எங்க ஊர் பாபு தியேட்டர்ல ரிலீஸ் ஆன போஸ்டர் பார்த்தேன். இப்பொழுது நான் ஏழாவது படிச்சிகிட்டு இருக்கேன். இந்த ஞாயிற்றுகிழமை இந்த படத்தை பார்த்திடனம்னு முடிவு பண்ணி எங்க அப்பா கிட்ட காசு கேட்டேன். ஒரு 10 ரூபாய் கொடுத்தார். 5 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய்க்கு எதாவது வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணேன். எனக்கு நினைவு தெரிஞ்சி நான் தனியா போய் பார்க்க போற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். கிளம்பும்போது, என் தம்பி ஒரே அழுகை, நானும் சினிமாக்கு வருவேன்னு. எங்க அம்மாவும், அவனையும் கூட்டிகிட்டு போடான்னு சொல்லிட்டாங்க. என் தம்பி ஐந்தாவது படிச்சிகிட்டு இருக்கான்.

நாங்க ரெண்டு பேரும் நடந்தே பாபு தியேட்டர்க்கு வந்தடைந்தோம். டிக்கெட் கவுன்ட்டர் ஒவ்வொரு ஆளாக நுழைந்து போகிற குகை மாதிரி இருக்கும். இது வேற புது படம், கூட்டம் எக்கசெக்கமாக இருந்தது. டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில நானும், என் தம்பியும் போய் நின்றோம். சமயத்துல முன்னாடி டிக்கெட் வாங்கற ஆர்வத்துல தலைக்கு மேல எல்லாம் பறந்து, டைவ் அடிச்சி எல்லாம் சில பேர் போவானுங்க. டிக்கெட் கவுன்டரை நெருங்கியதும், 10 ரூபாய் கொடுத்து 2 டிக்கெட் கொடுக்க சொல்லி கேட்டேன். டிக்கெட்டை கையில வாங்கின ஆர்வத்தோட நானும் என் தம்பியும் தியேட்டர் உள்ளை நுழைய முற்பட்டோம்.

அங்கே ஒரு செக்கிங் நபர் என் டிக்கெட்டை பார்த்து விட்டு "ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க" என்று கேட்டார். அதுவரை என்னிடம் இருந்தது ஒரு டிக்கெட்டா இல்ல இரண்டு டிக்கெட்டா என்று கூட தெரியாத நான் மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டேன். புதிய படம் என்பதால் டிக்கெட் விலை 10 ரூபாயாக மாறியிருந்தது எனக்கு தெரியவில்லை.

நாங்க இரண்டு பேர், கையில ஒரே ஒரு டிக்கெட், உள்ளே திரைப்படம் ஆரம்பிக்க போகிறது. எனக்கு ஒரே அழுகையாக வந்துவிட்டது. என் தம்பி மிக தெளிவாக, டேய் நீ படம் பார்த்துட்டு வா, நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். என்னடா இது முதல் முறையாக தனியாக படம் பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு ஒரே அழுகையும், வருத்தமாகவும் இருந்தது.

என் தம்பி சென்றவுடன், உள்ளே நுழைந்து ஒரு சீட் பிடிச்சி உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கினேன். திரையில் படத்தின் பெயர் போட்டார்கள்,
ஆபாவாணனின் "இணைந்த கைகள்" .

Friday 27 November 2009

அட்வைஸ் அண்ணன் அமெரிக்கா!

விருந்தோம்பலில் நெகிழ்ந்துபோவது இந்தியர்களின் பொதுவான குணம். இதில் நமது பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்? அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் கொடுத்த சிவப்புக் கம்பள வரவேற்பும் அட்டகாச விருந்தும் அவரை நெகிழ வைத்ததில் வியப்பில்லை.

ஆனாலும் இப்படி நெகிழாமல், ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஒபாமாவோடு சேர்ந்துவந்து நிருபர்களைச் சந்தித்தபோது அவர் அமெரிக்காவுக்கு இப்படி அட்வைஸ் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும்? ‘‘வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனான பிரச்னைகளை அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் இதற்கு கியூபா மூன்றாவது நாடாக இருந்து மத்தியஸ்தம் செய்யலாம்!’’

ஒரு இந்தியப் பிரதமரிடமிருந்து இப்படியான நெஞ்சுரத்தை நாம் எதிர்பார்ப்பது பேராசை. தலையிடாக் கொள்கை’, ‘அணி சேராக் கொள்கைஎன அரதப்பழசான நேரு காலத்து தத்துவங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தொங்கியே நாம் காலம் தள்ளி வருகிறோம். தவணை முறையில் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் நுழைத்து பாகிஸ்தான் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் இதே கொள்கையைச் சொல்வோம். எல்லை பாதுகாப்புப் படையினரை வங்க தேச ராணுவம் கொன்றாலும் இதையே சொல்வோம். அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடியும், அங்கு நம் பிரதமர் பயணிப்பதை ஆட்சேபித்தும், இந்தியாவுக்குள் நுழையும் ஜீவ நதிகள் மீது அணைகள் கட்டி தடுத்தும் சீனா அட்டகாசங்கள் செய்தாலும் நாம் கொள்கை மாறமாட்டோம். நம் காலடியில் கிடக்கும் குட்டி தேசமான இலங்கையில் நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும் நமக்கு கொண்ட கொள்கையே முக்கியம்.

அமெரிக்காவுக்கு அட்வைஸ் பிடிக்காது... அவர்களுக்கு யாராவது சொன்னால் மட்டும்! அட்வைஸ் செய்பவர்களையும் பிடிக்காது. ஆனால் உலகத்துக்கே அட்வைஸ் செய்கிற தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறது. ரிபப்ளிகனோ, டெமாக்ரட்டோ & ஜார்ஜ் புஷ்ஷோ, ஒபாமாவோ... யார் அதிபராக இருந்தாலும் இந்த எண்ணங்கள் மாறுவதில்லை. அதனால்தான் சில நாட்களுக்கு முன் சீனத் தலைநகர் வந்து, சீன அதிபரோடு கூட்டறிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்குமான பிரச்னையில் சீனா மூன்றாவது நாடாக இருந்து மத்தியஸ்தம் செய்து வைக்கவேண்டும்என்று திருவாய் மலர்ந்துவிட்டுப் போனார். இரண்டே வாரங்களில் மன்மோகனை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘‘ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்காக இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது’’ என அதே வாயால் சொல்கிறார். ஒருவேளை பாகிஸ்தானும் சீனாவும் கொடுக்கும் குடைச்சல்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, ‘ரொம்ப நல்லவர்களாகஅகிம்சை முறையில் எதிர்ப்பு காட்டாமல் அமைதி காக்கிறோமே... அதைச் சொல்கிறாரோ என்னவோ! இந்தியாவைப் புகழ்ந்த அதே சமயத்தில் பாகிஸ்தான் பற்றியும் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஒபாமா. கொஞ்ச நாளில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்கா போவார். அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உறுதியான நண்பனாக பாகிஸ்தான் இருக்கிறதுஎன்று சொன்னாலும் சொல்வார்.

போரிட்டு வெல்லும் தேசங்களில் எல்லாம் தங்களது அடங்காத பிள்ளைகளையோ, வாலாட்டும் உறவினர்களையோ கவர்னர்களாக நியமித்து, ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்துவிட்டுப் போவது சுல்தான்கள் காலத்து ஆட்சி முறை. அப்படித்தான் உலகத்தின் சட்டாம்பிள்ளையான அமெரிக்கா, ஆசியாவின் சட்டாம்பிள்ளையாக சீனாவை நியமித்து, அமைதிக்கு உதவச் சொல்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் பிரச்னைகளை சீனா எப்படி தீர்த்துவைக்க முடியும்? காஷ்மீர் சிக்கல்தான் இதில் பிரதானமானது. காஷ்மீர் இந்தியாவோடு இருந்து இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக இருக்க வேண்டுமா... அல்லது தனி நாடாகி திபெத் போல சீனாவால் ஆக்கிரமிக்கப்பட வேண்டுமா... அல்லது பாகிஸ்தானோடு இணைந்து தாலிபன் தீவிரவாதிகளைத் தோற்றுவிக்கும் லேபாரட்டரி ஆகவேண்டுமா என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கிறது. காஷ்மீரின் மூன்றில் ஒருபகுதிதான் இப்போது நம் வசம் இருக்கிறது. மீதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் அதில் ஒரு பகுதியில் பொம்மை அரசாங்கத்தை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்என அதை நாம் சொல்கிறோம். இதுதவிர மூன்றாவது ஏரியாவான அக்ஸாய் சின்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டது பாகிஸ்தான்.

இதை தனது தேசத்தின் ஒரு பகுதியாகவே சொந்தம் கொண்டாடும் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருக்கும் யார் வேண்டுமானாலும் சீனாவுக்கு வருவதற்கு விசா விதிகளைத் தளர்த்தி இருக்கிறது. அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் அந்த நாடு, நமது எல்லையில் ஏராளமான ராணுவத்தைக் குவித்து, எந்த நேரமும் போருக்குத் தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகிறது. சீன அதிகாரிகளும், ‘ஏற்கனவே வாங்கிய அடி மறந்துவிட்டதாஎன்கிற ரேஞ்சில் இந்தியாவைச் சீண்டிப் பார்க்கிறார்கள். இதோடு இந்தியாவில் சமீபகாலமாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் சீனா வழங்கிவரும் ஆயுதங்களும் பயிற்சியுமே என்பதை நமது உள்துறை அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு அமைதியின் நாயகனைத்தான் நம் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் நாட்டாமையாக அமெரிக்கா நியமித்திருக்கிறது. கள்ளன் கையில் கொத்துச்சாவியைக் கொடுப்பது போன்ற இந்த செயலைக்கூட நாம் மென்மையாகத்தான் கண்டித்தோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் மூன்றாம் நாடு தலையிடும் பேச்சுக்கே இடம்கிடையாதுஎன சீனாவுக்கும் வலிக்காமல், அமெரிக்காவுக்கும் வலிக்காமல் ஒரு பதிலை நமது வெளியுறவுத்துறை கொடுத்தது.

ஆனால், இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் தரும்விதமாக காஷ்மீரின் முக்கிய அரசியல் அமைப்பான அனைத்துக்கட்சி ஹுரியத் கமிட்டியின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக், ‘நாங்கள் சீனாவோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்என குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஏற்கனவே காஷ்மீர் கட்சிகள் பலவும் பாகிஸ்தானின் கட்டளைப்படி இயங்கிவரும் நேரத்தில், சீனாவுக்கு இவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது விபரீதத்துக்கான அறிகுறி!

போதாக்குறைக்கு சீக்கிய அமைப்பு ஒன்று, ‘இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நிகழ்ந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நீதி வாங்கித் தரவேண்டும்என்று அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இப்படியே போனால் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, சேது சமுத்திரத் திட்டம், குஜ்ஜார் பிரச்னை என இந்தியாவின் தீராத பிரச்னைகளுக்கு முடிவுகளை அமெரிக்காதான் எடுத்தாக வேண்டும் என பலரும் மனுக்களை எழுதிப்போடக்கூடும். ஏதோ இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கும் மேலான அப்பீல் அத்தாரிட்டியாக அமெரிக்காவை நினைக்கும் மனோபாவம் இங்கே பலருக்கும் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு ஆசியாவில் அப்படி என்ன அக்கறை? ஏன் அந்த தேசம் சீனாவிடம் ஒரு மாதிரியாகவும், இந்தியாவிடம் ஒரு மாதிரியாகவும், பாகிஸ்தானிடம் வேறு மாதிரியாகவும் பேசுகிறது? இரண்டு நாட்களுக்கு முன்பு உலக வங்கி வெளியிட்ட ஒரு கணிப்பில் இதற்கான பதில் இருக்கிறது. வரும் 2050 ஆண்டுவாக்கில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் வலிமையான பொருளாதார சக்திகளாக சீனாவும் இந்தியாவும் இருக்கும்என்பதுதான் அந்தக் கணிப்பு.

ஐரோப்பிய நாடுகளின் போட்டியை அமெரிக்கா சமாளித்துவிடும். ஆனால் மக்கள்தொகையிலும் பரப்பிலும் பெரிய இரண்டு ஆசிய தேசங்கள் போட்டி போட்டால், அமெரிக்காவால் சமாளிக்கமுடியாது. அந்த போட்டியாளர்களை பலவீனப்படுத்தும் ஒரே வழி... போர் மட்டும்தான்! இந்தியாவும் சீனாவும் போரிட்டு தங்கள் பொருளாதார வலிமையை இழந்தால், அதனால் ஆதாயம் பெறும் ஒரே நாடு அமெரிக்காதான்! இப்படி ஒரு போர் நடக்கும்போது இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் சக்தியாக சீனாவுக்கு பாகிஸ்தான் உதவக்கூடும். போரினால் உருக்குலையும் தேசத்தை மீண்டும் கட்டமைப்பதே பெரிய சவாலாக இருக்கும்போது அமெரிக்காவோடு எப்படி மோதமுடியும்?

இரண்டாம் உலகப்போரில் பெருத்த சேதமில்லாமல் வெற்றியை ருசித்த ஒரே தேசம் அமெரிக்காதான்... அதனால் கிடைத்த வல்லமைதான் அந்த தேசத்தை உலகத்தின் கேள்வி கேட்கமுடியாத வல்லரசு ஆக்கியது. இதை சீனா புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு!


& நாடோடி (நன்றி தெனாலி.காம்)

Tuesday 17 November 2009

தொல்காப்பியன்... ஸாரி, திருச்செல்வம்


*ஆறுவருட பயணம்... எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொண்டேன். அம்மா, பெண், பாட்டி என மூன்று தலை முறைகளையும் தொலைக்காட்சி முன்னால் அமர வைத்ததை பெரிய விருதாகவே நினைக்கிறேன்.

*தொல்ஸ் மகாபொறுமைசாலியாக இருக்கிறாரே?

இந்த காலத்தில் பொறுமை என்பது அனைவருக்கும் அவசியமான ஒரு குணம். எதற்கெடுத்தாலும் முதலில் கோபப்படுகிறோம். மேடையில் ஆயிரம் பேசினாலும் நிஜத்தில் பெண்களின் முன்னேற்றத்தை ஆண்கள் ஏற்க மறுக்கிறார்கள். இன்னும் சிலர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்புக்கு சாத்தியமில்லை என்று அடித்துச் சொல்வார்கள். இந்த ஆண்கள் திருந்தவே மாட்டார்களா என்ற என் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் 'தொல்காப்பியன்' கதாபாத்திரம். அதிகாரம் செய்யும் ஆணைவிட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும். அந்தவகையில் பெண்களின் நல்ல நண்பன் 'தொல்ஸ்'

*திருநங்கை கதாப்பத்திரத்தையும் குடும்பத்தில் ஒருவராக சேர்த்திருக்கிறீர்களே?

அவர்கள் மட்டும் தீண்டத் தகாதவர்களா என்ன? இயற்கை செய்த தவறுக்கு அவர்களை ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இங்குதான் தேவையில்லாத கேலிப்பேச்சுகளால் அவர்களை பிரித்து பார்த்து ஒதுக்கி வைக்கிறார்கள். எங்க பேராவூரணி ஏரியாவில் அவர்களையும் உறவு முறை சொல்லித்தான் அழைப்போம்.

*அபியை மட்டுமே சுற்றி வரும் கதையில் மார்க்சியம் பேசும் தோழர் கதாபாத்திரம் எதற்கு?

பெண் என்பவள் தனிப்பட்டவள் இல்லை. அவளும் சமூகத்தில் ஒரு அங்கம்தான். அவள் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளோடு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறவர்தான் தோழர். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தின் மீதும், சமூகத்தில் நிகழும் முறைகேடுகள் மீதும் கோபம் இருக்க வேண்டும் என்பதை சொல்வார் என் தோழர். அந்தக் கதாபாத்திரத்தை ரசித்துச் செய்த தோழர் ஆதவனால் அது இன்னும் மெருகேறியது. தங்களால் செய்ய முடியாததை செய்ததாலேயே தோழருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

*தோழரின் மரணம், விடுதலை புலிகள் தலைவர் பிரகரனின் இறப்பை நினைவுபடுத்துவது போல இருந்ததே?

அப்படி நினைவுபடுத்த வேண்டும் என திட்டமிட்டு அமைக்கப்பட்ட காட்சிதான் அது. சாவைக் கண்டு பயப்படாத ஒருவனுடைய கண்கள் மரணத்தின்போது எப்படி இருக்குமோ அதை அப்படியே பிரதிபலித்தார் தோழர். மார்க்சிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, 'முப்பது வருடங்களாக எங்களால் செய்ய முடியாததை உங்கள் தோழர் கதாபாத்திரம் செய்து விட்டது. நான் போகிற ஊர்களில் சிறுவர்கள் கூட 'தோழர்' என்று அழைப்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது' என்று பாராட்டினார். என் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே போதுமே.

மேலும் இந்தத் தொடரில் வரும் எல்லா கதாபாத்திரமும் ஒரு குறியீடுதான். ஆதி என்பவன் முதலாளி வர்க்கத்தின் குறியீடு. தோழரும், அபியும் சமூக மற்றும் தனிமனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போராட்ட வர்க்கத்தின் குறியீடுகள். சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவதை இங்கு அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் போரட்டம் என்ற பெயரில் அரசியல் ஆதாயங்களை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மை எத்தனை பேரைச் சென்று அடைந்திருக்கிறது? சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்கும் யதார்த்தம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் என் கருத்துகளை சின்னத்திரை என்கிற சக்திவாய்ந்த ஊடகம் மூலமாக சொல்கிறேன்.


*அடுத்தது சின்னத்திரையா வெள்ளித்திரையா?

இரண்டும்தான். 'மாதவி மனோகரன்' என்ற தொடரை இரண்டு வாரங்களுக்கு மட்டும் இயக்க இருக்கிறேன். பிறகு கதை, திரைக்கதை மட்டும் எழுதுவேன். தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் 'முத்து குமரனின் காதல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். இது காதல் கதை கிடையாது. அனைவரும் விரும்பு குடும்பம் மற்றம் போராட்ட கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இந்தியின் முன்னனி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்.


*வெள்ளித்திரையில் இயக்கப் போவதில்லையா?

செய்யலாம். ஆனால் சின்னத்திரையில் இருக்கிற வசதி பெரியதிரையில் இல்லை. ஒரு தொடரை இயக்கும் போது இந்த வாரம் சரியில்லை என்றால் அடுத்த வரம் சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் சினிமாவில் அப்படி செய்ய முடியாது.

வரும் டிசம்பர் 4-ம் தேதியோடு கோலங்கள் நிறைவடையப் போகிறதாம். சின்னத்திரையில் வெற்றிவலம் வரும் தொல்காப்பியன்... ஸாரி, திருச்செல்வம் வெள்ளித்திரையிலும் பிரகாசிக்க வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

Wednesday 4 November 2009

தேய்பிறைகள் - சத்யராஜ்குமார்

சிறுகதை

- ஆனந்தவிகடன் – 10.05.1998

” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.

ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.

” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா காட்டியிருக்கார்.

எவ்ளோவ் பெரிய கட்டிடம் ! ஒரே மாதிரி டிரஸ் போட்டு அக்கா, அண்ணா எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டிருந்தாங்க.

எதிர் வீட்டு ரம்யாக்கா கூட அந்தக் கூட்டத்தில் இருப்பா. ஷூ, ஸாக்ஸ் போட்டு டை எல்லாம் கட்டியிருப்பா. அப்பா கிட்டே எனக்கும் அது மாதிரி வாங்கித் தரச் சொன்னேன்.

” அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்ந்துக்க. நீயும் அதெல்லாம் போட்டுட்டுப் போகலாம். “

சாயந்தரமானா ரம்யாக்கா, மதுக்கா எல்லாரும் சத்தம் போட்டுப் படிப்பாங்க. நானும் படிக்கணும்பேன். அம்மா அகர முதலன்னு ஒரு பாட்டு சொல்லித் தந்தா.

யாராவது வீட்டுக்கு வந்தா, ” அஸ்மிதா, திருக்குறள் சொல்லு” ம்பா அம்மா.

” அகர… முதல… எழுத்தெல்லாம்… ஆதி… பகவன்… முதற்றேஏஏஏஏ… உலகு. “

அந்தப் பாட்டை நான் ராகமா சொல்லுவேன்.

” ஸ்கூலுக்குப் போறதுக்கு முந்தியே இந்தப் பாப்பா திருக்குறள் எல்லாம் சொல்லுதே” ன்னு வந்தவங்க என்னோட கன்னத்தை செல்லமாக் கிள்ளுவாங்க.

காலேஜில் படிக்கிற ராஜிக்கா என்னை ” அகர முதல அஸ்மிதா “ன்னுதான் கூப்பிடுவாங்க.

அப்புறம் அம்மா ஒன் டூ த்ரீ… டென் வரைக்கும் சொல்லிக் குடுத்தா. அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் வந்தா அதெல்லாம் நான் சொல்லுவேன்.

” அஸ்மிதா, எந்த கிளாஸ் படிக்கிறே? “

” அடுத்த வருஷம்தான் ஸ்கூலுக்குப் போவேன். எல்.கே.ஜி-ல சேரப் போறேன். “

” ஸ்கூலுக்குப் போறதுக்கு முந்தியே இவ்வளவு சொல்றா… உன் பொண்ணுக்கு நல்ல மெமரி பவர் வாசு. “

கொஞ்ச நாள் கழிச்சு புது டிரஸ்செல்லாம் போட்டு என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

” பிரின்சிபல் மேடம் கேக்கற கேள்விக்கு டாண் டாண்ணு பதில் சொல்லணும். ” – அம்மா சும்மா சும்மா இதையே சொன்னா.

மேடம், ” வாட்ஸ் யுவர் நேம்? ” ன்னாங்க.

” அஸ்மிதா. “

” நைஸ் நேம்! நல்லா படிப்பியா? “

” ஓ ! “

” ரொம்ப புத்திசாலிக் குழந்தையா தெரியறா. “

என்னோட தலையைத் தடவினாங்க மேடம். அப்பா கிட்டே சொன்னாங்க.

” கெளண்ட்டர்ல பணத்தைக் கட்டி அட்மிஷன் ஆகிக்கங்க. புக்ஸ், யுனிபார்ம், ஷூ, ஸாக்ஸ் எல்லாம் எங்க ஸ்டோர்லயே கிடைக்கும். ஜூலை முதல் தேதியிலிருந்து ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க. “

” தாங்க்யூ மேடம். “

வெளியே வந்ததும், ” நீ ஸ்கூல்ல சேர்ந்தாச்சு. இப்ப உனக்கு யுனிபார்ம், டை எல்லாம் வாங்கப் போறோம்”னு அப்பா சொன்னார்.

” யாராவது கேட்டா ‘ எல்.கே.ஜி படிக்கிறேன்’னு சொல்லு”ன்னா அம்மா.

அன்னிக்கு சாயந்தரம் மேஸ்திரி மாமா வீட்டு மல்லி மண்ணுல விளையாடிட்டிருந்தா.

” நான் எல்கேஜி-ல சேர்ந்துட்டேன்”னு அவ கிட்டே சொன்னேன்.

” நீ எல்கேஜிலதானே சேர்ந்தே… நான் நேரா ஒண்ணாங்கிளாஸ் போயிடுவேன்”னு அவ சொன்னா.

” அதெப்படி எல்.கே.ஜி. படிக்காம ஒண்ணாங்கிளாஸ் போக முடியும்? “

” அடுத்த வருஷம் திண்ணை ஸ்ககூலுக்குப் போ… எல்.கே.ஜி- யை விட பெரிய படிப்புன்னு எங்கம்மாதான் சொல்லிச்சு. எங்கப்பாவோட இன்ஜினியரெல்லாம் அங்கதான் படிச்சாங்களாம். “

எனக்கு ஒண்ணுமே விளங்கலை. திண்ணை ஸ்கூலை நான் பார்த்திருக்கேன்.

” அய்யே, அது அழுக்கு ஸ்கூல்ன்னேன். “

அவ கோபிச்சு என்னைப் பிறாண்டினா. இரண்டு பேர்க்கும் சண்டை வந்துருச்சு. நான் அவ கூட டூ விட்டுட்டேன்.

பத்தே நாள்ல புது டிரஸ் எல்லாம் வந்துருச்சு. அம்மா போட்டு விட்டா. ஸ்கூல் பேகை தோளில் போட்டுக்கிட்டேன். டையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். ஷூ சத்தம் ரொம்பப் பிடிச்சது. ரம்யாக்கா, மதுக்கா மாதிரியே டாக் டாக்ன்னு நடந்தேன்.

அம்மா என் நெத்தியில ஆசையா முத்தம் குடுத்தா.

” ஸகூலுக்குப் போலாமா? “

” ஓ…! “

” அங்க போய் அழக் கூடாது. “

” எதுக்கு அழணும்? நான் சமர்த்துப் பாப்பா. “

” அம்மா உன்னை அங்கே விட்டுட்டு வந்துருவேன். டீச்சர் கிட்டேதான் நீ இருக்கணும். “

” நீ கவலைப்படாதேம்மா. நீ வர்ற வரைக்கும் டீச்சர் கிட்டே சமர்த்தா இருந்துப்பேன். “

” பெரிய மனுஷி மாதிரி எப்படிப் பேசறா பாருங்க. ” – அப்பாவைப் பார்த்து அம்மா சொன்னா.

மொத மொதல்ல ஸ்கூலுக்குள்ளே நுழைஞ்சப்ப ஒரு மாதிரி சந்தோஷமா இருந்துச்சு. அம்மாவோட கையை உதறிட்டு வீசி வீசி நடந்தேன்.

கிளாஸூக்குள்ளே போனா என்னை மாதிரியே நிறைய குழந்தைங்க. ‘ வீர் வீர் ‘ன்னு சத்தம். எல்லாருமே அழுதுட்டிருந்தாங்க. எனக்கு சிரிப்பா வந்துச்சு.

என்னமோ தெரியலை. அம்மாதான் லேசா கண்ணு கலங்கியிருந்தா.

” அஸ்மிதா, டாட்டா. “

கையை ஆட்டினா. நானும் வேகமா கையை ஆட்டினேன்.

கொஞ்ச நேரத்தில் மணியடிச்சது. அம்மாவைக் காணோம். பெரியவங்க யாரையும் காணோம். டீச்சர் வந்தாங்க.

” யாரும் அழக் கூடாது. அஸ்மிதா பாரு… எப்படி சிரிச்சிட்டிருக்கா. “

அழற குழந்தைங்க கிட்டே என்னைக் காட்டி சமாதானப்படுத்தினாங்க.

டீச்சரை எனக்குப் பிடிச்சது. அவங்க கையிலிருந்த பிரம்புதான் பிடிக்கலை.

கொஞ்ச நேரம்தான் விளையாட விடுவாங்க. ‘அங்க ஓடாதே… இங்க ஓடாதே’ன்னு பிரம்பைக் காட்டி மிரட்டுவாங்க. அம்மா சொல்லிக் குடுத்த அதே ஏ.பி.சி.டி-யைத்தான் டீச்சரும் சொல்லித் தந்தாங்க. அவங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ளே நான் இஸட் வரைக்கும் சொல்லிடுவேன்.

” முந்திரிக் கொட்டை மாதிரி கத்தாதே”ன்னாங்க.

மிட் டெர்ம் டெஸ்ட்ல எனக்கு நூத்துக்கு நூறு. யுனிபார்ம் சட்டைல கோல்டு ஸ்டார் குத்தி விட்டாங்க.

o0o

அன்னிக்கு ஒரு நாள் டீச்சர் உர்ர்ன்னு கிளாஸுக்குள்ளே நுழைஞ்சாங்க.

” என்ன சளசளன்னு சத்தம்? கீப் கொய்ட். “

அபியும், செல்லம்மாளும்தான் பேசிட்டிருந்தாங்க. என் தலைலயும் பிரம்பு அடி விழுந்துச்சு.

” மிஸ், நான் பேசலை. “

” எதிர்த்தா பேசறே? “

இன்னொரு அடி போட்டாங்க. எனக்குத் தொண்டையெல்லாம் அடைச்சிருச்சு.

அம்மாகிட்டே சொல்லி அழுதேன்.

” சாயந்தரம் மிஸ் கிட்டே கேக்கறேன் ” னாங்க.

” வேணாம்மா. அடிப்பாங்க. “

” ஒண்ணும் அடிக்கமாட்டாங்க. “

அம்மா டீச்சரைப் பார்த்தாங்க.

அம்மா பேசறதுக்கு முந்தியே டீச்சர் பேசினாங்க.

” அஸ்மிதாக்கு வர வர குறும்பு அதிகமாயிருச்சு. லேசா அடி போட்டாத்தான் பயமிருக்கும். “

” குறும்பு செஞ்சா தாராளமா அடிச்சுக் கண்டியுங்க. ” ன்னு அம்மா சொன்னா.

எனக்கு திக்ன்னு ஆச்சு.

அன்னிலர்ந்து டீச்சர் பிரம்போட கிட்டே வந்தாலே, எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.

இப்போவெல்லாம் கை வலிக்க எழுதச் சொல்றாங்க. அம்மாவும் புதுசா ஒரு ஸ்கேல் வாங்கி வெச்சிருக்கா. வீட்டுக்குப் போனதும் யுனிபார்ம் மாத்தி பால் குடிக்க வெச்சிட்டு பேரண்ட்ஸ் டைரியைப் பிரிச்சு வெச்சு ஸ்கேலும், கையுமா உக்காந்துப்பா.

” எழுதுடி. இப்படி சுழி. சனியனே… உனக்கு எத்தனை வாட்டி சொல்லிட்டேன். சொல்றது மண்டையிலே ஏறாதா ? “

” கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேம்மா. “

” வண்டி வண்டியா ஹோம் ஒர்க் இருக்கு. அதை முடிச்சிட்டுப் போய் விளையாடு. “

முடிக்கிறதுக்குள்ளே இருட்டிடும். அப்புறம் தூக்கம் வந்துரும். தூங்கி எழறப்ப கூட ஸ்கேலால சுள்ன்னு அடி விழும். நான் ஓ-ன்னு அழுவேன். அப்பா கத்துவார்.

” ஏண்டி குழந்தையைப் படுத்தறே? “

” ஹாஃப் இயர்லி எக்சாம்ல எவ்வளவு வாங்கியிருக்கான்னு தெரியுமா? முட்டை முட்டையா வாங்கிட்டு வந்திருக்கா. “

” வீட்ல நல்லாத்தானே சொல்றா. “

” வீட்ல சொல்லி என்ன பண்றது? டீச்சர்ட்ட சொல்லணுமே? “

” டீச்சர் கையில பிரம்பைப் பார்த்தா பயமா இருக்கு. எல்லாமே மறந்து போயிடுதும்மா. “

” பேச்சு மட்டும் ஏழு மைல் நீளம். “

” சரி விடு. நாளைக்கு சொல்லிக் குடு. “

” நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிங்களா? அஸ்மிதா இப்பல்லாம் சரியாப் படிக்கிறதில்லைன்னு பிரின்சிபல் மேடம் கூப்பிட்டு சொல்றாங்க. மானம் போகுது. “

” நாம என்ன செய்ய முடியும்? “

” பேரண்ட்ஸ் நீங்க கொஞ்சமாச்சும் அக்கறை எடுத்துக்கணும். ஹோம் ஒர்க்கை எல்லாம் கூட இருந்து செய்ய வெக்கணும். அப்பதான் உங்க குழந்தை நல்லாப் படிக்கும்ன்னு சொல்றாங்க. ‘ உங்களால முடியலைன்னா டியூஷன்ல விடுங்க. நாங்க கேர் எடுத்துக்கறோம் ‘ ன்னு மேடம் சொல்றாங்க. “

” டெர்ம் ஃபீஸ் கட்டறதுக்குள்ளே உயிர் போகுது. இதில் டியூஷனுக்கு வேற தனியா தண்டம் அழணுமா? நோ. “

” அப்ப குறுக்கே வந்து இடைஞ்சல் பண்ணாம இருங்க. “

அப்பாவோட வாயை அடைச்சிட்டு என்னை பொத் பொத்துன்னு அடிக்கறா.

” ச்சே ! வீடா இது. போர்க்களம் ” ன்னுட்டு அப்பா சட்டையை மாட்டிட்டு வெளியே போறார்.

அம்மா ஸ்கூல் ஃபீஸ் கேக்கறப்பவெல்லாம் தப்பாம சண்டை வரும்.

” மாசம் பூரா நீதானே உக்காந்து தொண்டை வறள சொல்லித் தர்றே. அப்புறம் எதுக்கு ஸ்கூல் ஃபீஸ்? “

” இப்படியெல்லாம் சட்டம் பேசினா டிசியைக் கிழிச்சுக் குடுத்துருவாங்க. அப்புறம் உங்க பொண்ணை மாடு மேய்க்கத்தான் விடணும். “

” ஏண்டி மாடு மேய்க்கணும்? அவ என்ன இப்ப ஐஏஎஸ்ஸா படிக்கிறா? வெறும் எல்கேஜிதானே? போனா போகுது. வேற ஸ்கூல்ல சேர்த்திட்டா என்ன? “

” இங்க பாருங்க. குழந்தையோட படிப்புல கஞ்சத்தனம் பார்க்காதிங்க. “

” நான் பணத்துக்காக சொல்லலை. அவ எவ்வளவு கஷ்டப்படறா. “

” கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். எதிர்காலத்தில் போட்டி போட கஷ்டப்பட்டுத்தான் படிச்சாகணும். “

” அததுக்கு வயசு இருக்கு. குழந்தைக்கு ஓவர் ஸ்ட்ரெயின் குடுத்துட்டிருக்கோம். எப்படிக் கலகலப்பா இருந்தவ இப்ப எப்படி ஆயிட்டா. “

” உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆபிஸ், லெட்ஜர் இது மட்டும்தான். உங்களுக்கென்ன கஷ்டம் வந்தது? “

அப்பா பல்லைக் கடிச்சிட்டு பேசாம போயிடுவார்.

இரண்டு பேரும் கத்திப் பேசறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கும்.

கடைசில ஆனுவல் எக்சாம் வந்துச்சு. ஸ்கூல்ல பிரம்படி. வீட்ல ஸ்கேல் அடி. இரண்டுக்கும் பயந்து உளறிக் கொட்டினேன்.

டீச்சர் அம்பது அறுபதுன்னு மார்க் போட்டாங்க. நான் பாஸாம். ஒரு மாசம் லீவு.

அப்புறம் அம்மாவும் அப்பாவும் சண்டையே போடலை. ஊருக்குப் போனேன். லீவுக்கு ஹேமா, கணேஷ், உஷா, கோபி எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே ஜாலி. நிறைய விளையாடினோம்.

திடீர்ன்னு ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் வந்தாங்க.

” நாளைக்கு ஸ்கூல் திறக்குது “ன்னு சொன்னாங்க.

” புது யுனிபார்ம், டை எல்லாம் வாங்கி வெச்சிருக்கோம் “ன்னார் அப்பா.

நான் அதைத் திரும்பிக் கூடப் பார்க்கலை. காலைலர்ந்து ஒரே அழுகை. குட்டிக் குட்டி தலை பின்னி விட்டா அம்மா. பிரம்பு டீச்சர் ஞாபகத்துக்கு வந்தாங்க. என்னோட அழுகை அதிகமாச்சு.

அம்மா திட்டினா.

” எல்.கே.ஜி-க்கு கூட அழாம போனா. இப்ப யூ.கே.ஜி போறப்ப ஏன் இப்படி அழறா? “

அப்பா ஒண்ணும் சொல்லலை.

நான் அழுதுட்டேயிருந்தேன். அம்மா என்னை முறைச்சா.

” நீ இப்படி அழுது அழிச்சாட்டியம் பண்ணினா முதுகுல மொத்திருவேன். மொத நாள் அடி வாங்காதே. “

என்னால அழுகையை நிறுத்த முடியலை. அம்மா தரதரன்னு இழுத்துட்டுப் போனா. பிடிக்கலை. எனக்கு ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கலை. ◙

Thursday 29 October 2009

எனக்கு புத்தகம் பிடிக்கும் - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.,

தயச்சந்திரனின் இதயம் புத்தகங்களால் ஆனது. இலக்கியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் என எந்தப் புத்தகம் வந்தாலும், அதன் வாசம் அறியாமல் விடாத புத்தகப் புழு இந்த ஐ.ஏ.எஸ்!

''இன்று உலகத்தை ஆள்வது இரண்டு புத்தகங்கள். ஒன்று, ஆடம் ஸ்மித் எழுதிய 'தேசங்களின் செல்வம்'. மற்றொன்று காரல் மார்க்ஸின் 'மூலதனம்'. இந்த இரண்டு புத்தகங்களின் கலவையைத்தான் எல்லா நாட்டு அரசாங்கங்களும் தங்களது கொள்கையாக வைத்திருக்கின்றன. ஆடம் ஸ்மித்தை முழுமையாகப் பயன்படுத்தி வந்த அமெரிக்கா, நைந்துபோன தொழிற்சாலைகளை அரசுமயமாக்கி வருகிறது. காரல் மார்க்ஸ் வழித்தடத்தில் வந்த சோவியத்தும், சீனாவும் பல்வேறு தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்கிவிட்டன. ஆம், புத்தகங்கள்தான் இந்த உலகத்தை ஆள்கின்றன.

அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல், புத்தகம் மட்டும்தான். தொடக்க கால அறிவு, காலம் தோறும் கடத்தப்பட்டது. அது ஓலைச்சுவடிகளில் இருந்தபோது சிலரது கைக்கு மட்டும் நெருக்கமாக இருந்தது. சில மன்னர்களது மாளிகையால் மட்டுமே வாசிக்க முடிந்தது. ஆனால், தாளுக்கு மாறிப் புத்தகமானபோதுதான் அறிவு பரவலாக்கப்பட்டது. எனவே, புத்தகம் என்பது ஜனநாயகத்தின் குறியீடு. அதனாலேயே சர்வாதிகாரிகள் முதலில் கைவைப்பது, தடை போடுவது புத்தகங்களுக்குத்தான். இத்தாலி கலிலியோவைப் பார்த்து அன்றைய திருச்சபைகள் பயப்பட என்ன காரணம்? 'டயலாக் கன்சர்னிங் தி டு சீஃப் வேர்ல்ட் சிஸ்டம்' என்ற புத்தகத்தை எழுதிய ஒரே காரணத்துக்காக கலிலியோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான். இங்கிலாந்துக்காரனான சார்லஸ் டார்வின் பலரது கசப்புக்கு ஆளாகக் காரணமும் அவர் எழுதிய புத்தகம்தான். 'ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் பை மீன்ஸ் ஆஃப் நேச்சுரல் செலெக்ஷன்' என்ற புத்தகத்தில் தனது பரிமாணக் கொள்கையைச் சொன்னார். ஐந்து ஆண்டுகள் கப்பலில் சுற்றி ஒவ்வோர் இடத்திலும் போய் உயிரினங்களை ஆராய்ச்சி செய்தான். 'பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்' என்று கண்டுபிடித்தான். 'கடவுள் நினைத்தார்... மனிதன் தோன்றினான்' என்ற கருத்தாக்கத்தை உடைத்தார் தன் புத்தகத்தால். 'ஆண்டவனின் முதல் எதிரி' என்று அவர் அழைக்கப்பட இந்தப் புத்தகமே காரணம். இது டார்வின் பிறந்து 200 ஆவது ஆண்டு. காலங்கள் கடந்தும் அவனை நினைக்கிறோம். கலிலியோ அன்று துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், அவனது புத்தகம் உண்மையைத்தான் பேசியது என்பதை 362 ஆண்டுகள் கழித்து, போப் இரண்டாவது ஜான்பால் ஒப்புக்கொண்டார். தங்களது தவறை 1992-ல் திருத்தினார். சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட புத்தகம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மகுடத்தில் வைத்துக் கொண்டாடப்படும் என்பதற்கு சாட்சி இது. கோபர் நிக்கஸ், கலிலியோ, ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் வந்திராவிட்டால், நாம் இன்று காட்டுமிராண்டிகளாகத்தான் திரிந்து இருப்போம்.

நான் முதலில் தொட்ட புத்தகங்களின் தலைப்பை இன்று நினைக்கிறேன். பள்ளியில் நடந்த போட்டியில் வென்ற எனக்கு மீரா எழுதிய 'கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள், மு.மேத்தாவின் 'கண்ணீர் பூக்கள்' ஆகிய இரண்டு கவிதைப் புத்தகங்கள் பரிசாகத் தரப் பட்டன. கனவு, கற்பனை, காயம், கண்ணீர், பூ ஆகிய ஐந்து வார்த்தைகளுக்குள்தான் எல்லாப் புத்தகங்களும் அடங்கியிருக்கின்றன. வென்றவனின் கதையை வரலாறுகள் சொல்லும், தோற்றவன் வலியை இலக்கியங்களில் தேடுங்கள் என்பார்கள். புரிகிறதோ இல்லையோ, லா.ச.ரா-வின் சிந்தாநதியும் கார்க்கியின் தாயும் பள்ளி நாட்களில் வாசித்தேன். என் வயது மனிதர்களுக்கு நல்ல புத்தகங்களை கணையாழியின் கடைசிப் பக்கங்களின் மூலம் அறிமுகப்படுத்திய சூத்திரதாரி சுஜாதா. மோகமுள் குத்திய வலியுடன் ஜே.ஜே. சில குறிப்புகள் கொடுத்த அதிர்வுகளுடன்தான் கல்லூரிக்குள் போனேன். பொறியியல் மாணவன் நான். அங்கு இலக்கியத் தாகங்களுக்கு இடம் இல்லை என்றாலும், நண்பர்கள் வட்டத்தை வைத்துக்கொண்டு படித்தேன்.

ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்று நினைத்தபோது, தமிழ் இலக்கியத்தையும் மானுடவியலையும் பாடமாக எடுத்தேன். 'புத்தகங்களின் காட்டில் எனது தலையைத் தொலைத்தேன்' என்பது அப்போதுதான் நடந்தது. வ.சுப. மாணிக்கம், நா.வானமாமலை, பிரதாப முதலியார் சரித்திரம், பாரதி எனத் தொடர்ந்த படிப்பு, தி.ஜானகிராமனில் கொண்டுவந்து சேர்த்தது. மோகமுள்ளும், அம்மா வந்தாளும், மரப்பசுவும் படிக்காதவன் மனிதனே அல்ல என்று நினைத்தேன். கரிசல்காட்டு மண்ணைக் குழைத்து தாளில் தடவிய கி.ராஜநாராயணனின் புத்தகங்கள் அதிகாரம் வாய்ந்த பதவிக்காரனையும் புழுதி படிந்த மண்ணில் புரட்டி எடுத்தது. போகாத நூலகங்கள் இல்லை, வாங்காத புத்தகங்கள் இல்லை எனக் கண் விழித்து இருக்கும் நேரம் எல்லாம் வாசிப்பு. வாசிப்பு மட்டுமே. எங்க ளுக்கு அந்தக் காலத்தில் இருந்த ஒரே வாய்ப்பு சென்னை புத்தகக் கண்காட்சி மட்டும்தான். ஒவ்வோர் ஆண்டும் ஏதோ புனிதப் பயணம் போவதைப் போல நான் போனேன்.

ஜார்ஜ் ஆர்வெலின் விலங்குப் பண்ணையும் படிப்பேன். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கமும் வாசிப்பேன். முந்தைய நாள் பெருமாள் முருகனது புத்தகம் எனது மேஜையில் இருக்கும். மறுநாள் அறிவுமதியின் கவிதைகள் மனதை நனைக்கும். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் அழைக்கிறது. ரோமிலா தாப்பர் மறுநாள் ஞாபகம் வருகிறார். டபிள்யூ. டி.ஓ. ஏற்படுத்திய மாற்றங்களும் பொருளாதார அதிர்வுகளும் அடுத்துப் படிக்க ஆசையாக இருக்கின்றன. எந்தப் புதிய டெக்னாலஜி வந்தாலும் அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு என்பதால், அதையும் வாங்கிப் படிப்பேன். வாசிப்பது நாளுக்கு நாள் அதிகமாகியே வருகிறது. களப்பிரர் காலத்தைப்பற்றி நிறையத் தெரிந்து கொள்ள அலைகிறேன். இடங்கை, வலங்கை என்ற சாதிப் பிரிவுகள்பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்குமா என்று தேடி வருகிறேன். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இங்கு அதிகாரிகளாக இருந்த வெள்ளையர்களைப்பற்றி புத்தகம் எழுதுவதற்கான சேகரிப்பில் இருக்கிறேன். எனவே, புத்தகக் காதலுக்கு முற்றுப்புள்ளியே இல்லை.

சினிமா வந்தது, இன்டர்நெட் வந்தது, அவ்வளவுதான் புத்தகங்கள் காலம் முடிந்தது என்று யாரும் புலம்பத் தேவை இல்லை. அவை இரண்டும் இதன் இடத்தைப் பிடிக்க முடியாது. புத்தகம்தான் மனிதனைக் கற்பனை செய்ய அனுமதிக்கிறது. நான் சொல்லிய அளவுக்குள் நீ கற்பனை செய்தால்போதும் என்று சினிமா கட்டுப்பாடு விதிக்கிறது. இன்டர்நெட், தகவல் தரும் மீடியமாக மட்டுமே இருக்கிறது. மனதை ஊடுருவும் வல்லமையை அது இன்னமும் அடைய வில்லை.

காரணம், நீங்கள் புத்தகத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதன் மணம் எழுத்துக்கு ஏற்ப, எழுத்தாளனுக்கு ஏற்ப, உங்களை வருடிக் கொடுக்கிறது. தி.ஜா-வின் நாவல், புதுமைப்பித்தனின் சிறுகதை, சேரன், ஜெயபாலன் கவிதைகள், தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், ராஜ்கௌதமன், வெங்கடாசலபதி ஆகியோரின் சமூகவியல் ஆய்வுகள் படிக்கும் சுகம் சொல்லிப் புரியாது. 'வீட்டுக்கு ஒரு புத்தகச் சாலை' என்று இயக்கமாக்க வேண்டும் என்றார் அண்ணா. பூஜை அறை மாதிரி புத்தக அறையும் அனைத்து வீட்டிலும் வேண்டும் என்பது பேராசையாகக்கூட இருக்கலாம். அறம் பாடிய அறிஞன் வள்ளுவனின் திருக்குறள், புதிய மறம் பாட வந்த பாரதியின் கவிதைகள், வரலாற்று அறிவின் வேதப் புத்தகமான ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை ஆகிய மூன்று புத்தகங்களை மட்டுமாவது வீட்டில் வாங்கிவையுங்கள்.

விலை உயர்ந்த கண்ணாடிக் கோப்பைகள், பீங்கான் ஜாடிகள், மண் குடுவைகள் வைப்பதைவிட அப்போது உங்கள் வீடு அழகாகத் தெரியும்!''

நன்றி விகடன்....

Monday 26 October 2009

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம்

-பேராசிரியர் வெங்கடேஷ் பா. ஆத்ரேயா பொருளாதார நிபுணர்

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்போது பல்வேறு வகையான விவசாய முறைகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலவரி வசூல் செய்வதற்கான உரிமையை ஏலம் விட்டனர். ஏலத்தில் பல இடங்களில் நிலவரி வசூல் செய்யும் போது, வரி செலுத்த முடியாத விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றினர். இது நம்முடைய பாரம்பரியத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இங்கு ஓர் அரசு இருந்தது. அந்த அரசு நிலவரி விதித்தது. அந்த வரியை ஜமீன்தாரர்கள் வசூலித்தார்கள். அதில் சிறு பகுதி ஜமீன்தார்களுக்கும், பெரும்பகுதி அரசுகளுக்கும் சென்றது. அந்த வரியை வைத்து நகரங்களில் தொழில்களைத் தொடங்கினர்.

காலனிய ஆட்சி யில் உறிஞ்சப்பட்ட உபரி இங்கிலாந்தின் முத லாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. இந்தியாவில் உறிஞ்சப்பட்ட உபரி பத்து சதவீதமாக இருக் கலாம் என்று கூறுகின்றனர். இந்தப் பத்து சதவீதம் என்பது பிரிட்டனின் மூலதனத்தில் மூன்று சதவீதமாக இருக்கலாம்.இந்த மூன்று சதவீதம் என்பது அன்றைய பிரிட்டிஷில் கணிசமான பங்கு ஆகும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பேசும்போது காலனி ஆதிக்கத் தைப் பற்றி கூறும்போது இருபெரும் நாகரீகங்கள் சந்தித்துக் கொண்டது என்று சொன்னார். இது ஓர் ஈனமான செயல் என்றே சொல்ல வேண்டும். அடிமை மனப்பான்மையைக் காட்டக்கூடிய செயல் அல்லவா இது. வரிவசூல் செய்யக்கூடிய ஜமீன் தார்களை புதிய முதலாளிகளாக பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் உருவாக்கியது.

பிரிட்டிஷ் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய வகையிலே வேளாண் உற்பத்திகளை இங்கு மாற்றி அமைத் தது. உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணப்பயிரை பயிரிடுமாறு ஆங்கிலேய அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது. இதனால் விவசாயம், வணிகமயம் ஆகியது. ஆங்கிலேயர்கள் வரும்போது நிலமற்ற விவசாயி கள் இருந்தார்கள். அதற்கு முன்னாலும் இருந்தார் கள். ஏனெனில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு நிலம் கிடையாது. ஆங்கிலேயர்கள் நிலப் பிரபுகளுக்கு ஆதரவாகவும் இருந்தனர். நிலப் பிரபுக்கள் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந் தனர் என்பது நமக்கு வரலாற்றில் தெரியும். காலனிய ஆட்சியில் இங்குள்ள ஏராளமான தொழில்துறைகள் அழிக்கப்பட்டன. அவர் களுடைய மலிவான பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர். இதனால் பெரும் பாலான மக்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

விடுதலைக்கு முந்தைய ஆண்டுகளில் உணவு உற்பத்தி அரைசதம் கூட அதிகரிக்கவில்லை. அதே காலக்கட்டத்தில் மக்கள்தொகை 1 சதவீதம் அதிகரித்தது. இதனால் தலா உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. விடுதலைக்கு பின்பு ஓர் எல்லைக்கு உட்பட்டு நிலச்சீர்திருத்தங்கள் செயல்பட்டன. அரசு மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்தது. பாசனத்தை பெருக்கிற்று. ஐந்தாண்டு திட்டங்கள் வந்தன. பல்நோக்கு திட்டங்கள் வந்தன. இவற்றின் விளைவாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு பசுமைப் புரட்சி வந்தது. இந்தப் பசுமை புரட்சியால் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தி மகசூல் அதிகம் பெறப்பட்டது. 1950 முதல் 1990 வரை இந்திய நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மை.

தேசிய அளவிலான தானிய உற்பத்தி என்பது மக்கள் தொகை வளர்ச்சியை விட உயர்ந்தது.60-களில் நம்முடைய தானிய உற்பத்தி குறைவாக இருந்தது. வாங்கும் சக்தியும் குறைவாக இருந்தது. அதனால் தானியங்களை இறக்குமதி செய்தோம். அயல்நாட்டு கொள்கையில் சுயேச்சையான கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அமெரிக்கா வியட்நாமில் போர் செய்து கொண்டிருந்தது. இந்தியாவில் அதைக் கண்டிக்க முடியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் இருந்து உணவுப் பொருட்கள் கப்பலில் வரும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் பசுமைப்புரட்சியைப் பற்றி முடிவுகள் எடுக்கப்பட் டது. விவசாயத்தின் நிலஉறவுகளை மாற்றாமல், அங் குள்ள பெரும் விவசாயிகளை மையப்படுத்தி, அவர்களுக்கு மானியம் கொடுத்து, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்தி, மகசூலை அதிகம் பெறுவது, பிறகு அவர்களைப் பார்த்து மற்றவர்களையும் பின்பற்ற வைப்பது என்பது வலுவானவர்களை முன் வைத்து எடுக்கப்பட்ட யுக்தி என்று சொன்னாலும்கூட புதிய தொழில் நுட்பம், பாசனம், உயர் மகசூல் விதைகள், பூச்சி மருந்துகள், வேதியியல் உரம் உள்ளிட்ட ஒரு நவீன உற்பத்திமுறையால் மகசூல் உயருகிறது. மகசூல் உயரும்போது சந்தையில் விலை சரியும். இந்த விலைச் சரிவை சரி செய்ய அரசு ஒரு கொள் முதல் அமைப்பை 1964-ஆம் ஆண்டில் உருவாக் கியது.

இதன் மூலம் தானியங்களை இருப்பு வைக்கவும், திரும்ப விற்கவும், நியாயவிலைக் கடை சென்று கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தது.விவசாயத்திற்கான பொருட்களை வாங்கு வதற்கு கடன் அமைப்பில் மாற்றம் வந்தது. வங்கிகள் நாட்டுடமையாக்கமும் கூட்டுறவு கடன் வசதியும் பெருக்கப்பட்டன என்று அரசு பல முயற்சிகளை முன் நின்று மேற்கொள்ள வேண்டியிருந்தது. கட்டுபடியான விலையைக் கொடுத்து கொள்முதல், விவசாயம் செய்வதற்கு பயிர்க்கடன், நிலமேம்பாட்டு கடன், விவசாயிகள் கற்றுக்கொள்ள விவசாய விரிவாக்க அமைப்பு, விவசாயிகள் சொல்லக்கூடிய பிரச்சனைகளை தேசிய அளவில் எடுத்துச் சென்று தீர்வு சொல்வதற் காக ஓர் ஆராய்ச்சி அமைப்பு, நாடு தழுவிய விநியோக அமைப்பு போன்றவைகள் இல்லாமல் பசுமைப்புரட்சி நடந்திருக்க வாய்ப்பில்லை. பசுமைப்புரட்சி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த வி‘யம் இல்லை. அரசு விவசாயத்தில் பங்கு எடுத்து, முதலீடுகளை மேற்கொண்டு, அமைப்புகளை ஏற்படுத்தி செய்யக்கூடிய வேலை. இந்தியா போன்ற பெரியநாட்டில் சந்தை இதைச் செய்திருக்காது.

60-களில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஏற்பட்ட நெருக்கடியால் இனி பஞ்சம் வந்தால் மேற்கொள்ள இவ்வாறு செய்யப்பட்டது. இதை ஏன் விரிவாக வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் 90-களுக்குப் பிறகு இந்த ஏற்பாடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. புதியப் பொருளாதாரக் கொள்கையின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட துறை விவசாயத் துறைதான்.பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கூடியிருப்பதாக அரசு சொல்கிறது. தலா வருமானம் கூடியிருப்பதாக சொல்கிறது. ஆனால் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருக்கிறார்கள். இந்த வி‘யத்தில் பங்களாதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம்.நகர்ப்புறங்களில் கல்வி பெற்று வங்கி, காப்பீடு, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், மருந்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களை நீங்கள் நடுத்தர வர்க்கம் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய சிந்தனை எப்போதுமே தொழிலாளிகள் பக்கம் இருக்காது. ஆனால், உலகமயம் வந்த பிறகு நடுத்தர தொழிலாளிகள் மத்தியில் மாற்றம் வந்திருக்கிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உலகமயத்தை ஆதரிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை என்று இவர்கள் சொன்னார்கள். இப்போது அதன் தாக்கத்தை உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால், இதில் மற்றொரு பகுதியினர் 70, 80-களில் நுகர் பொருட்கள் வெளி நாட்டில் கிடைப் பது மாதிரி இங்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப் பட்டு சைனா பஜா ரில் கடத்தப்பட்ட பொருட்களையும் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.

உலக மயத் தால் இங்கே பொருட் கள் கிடைக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்கி றார்கள். கம்ப்யூட்டரையும், செல்போனையும் உலகமயத்தின் சாதனையாக இவர்கள் பார்க்கி றார்கள். புதிய தொழில்நுட்பங்கள் உலகமயத்தை சாத்தியப்படுத்தி இருக்கலாம். நிதித்துறை உலகமயத்தை இந்தத் தொழில்நுட்பங்கள் சாத்தியமாக்கியிருக்கின்றன. ஆனால், தொழில் நுட்பம் முன்னேற்றங்கள் என்பது உலகமயம் அல்ல. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு உலகமயம் வந்த காலகட்டத்தில் செல், கம்ப் யூட்டர், கலர் டெலிவி‘ன் வந்த காலமும் ஒன்றாக இருப்பதால் ஒருவித பிரம்மை வந்திருக்கிறது. இதை தகர்க்க வேண்டியிருக்கிறது.உலகமயத்தில் நாடுகளுக்கிடையே உள்ள வணிகத்தையோ, வணிக உறவுகளையோ, மூலதன உறவுகளையோ நாம் மறுக்க வேண்டிய தில்லை. ஆனால், வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் பன்னாட்டு நிதி மூலதனங்களின் மேலாதிக்கத்தில் நிகழ்கின்ற உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளை சுரண்டுவதை எதிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு அயல்நாட்டு மூலதனமும், உள் நாட்டு மூலதனமும் எப்படி செயல்பட வேண்டும் என்று வரைமுறைகளை உருவாக்க உரிமை உண்டு. இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உலகமயத்திற்கு கதவுகளைத் திறந்து விடுவது என்பது ஜனநாயகத்தை அவமதிக்கின்ற செயலாகும். அயல்நாட்டு மூலதனத்தை எந்த வரையறையும் இல்லாமல் திறந்து விட்டால் அந்த மூலதனம் வெளியேறிவிடும் என்ற அச்சத் தாலேயே ஆட்சியை நடத்த வேண்டியிருக்கிறது. பட்ஜெட் போடும்போது நிதி அமைச்சர்கள், பன்னாட்டு மூலதனக்காரர்கள் கோபப்படும் அளவிற்கு எதுவும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கி றார்கள்.நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையில் மாற்றம் என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும்தான் வருகிறது.

போன்ற நாடுகள் மேலை நாடுகளில் உறவு வைத்துக்கொண்டு தொழில் நுட்பங்களைப் பெறுவதும், அந்நிய மூலதனங் களை வரவழைப்பதும் என்று பார்க்கும்போது அவை எங்கிருந்து செய்யப்படுகின்றன என்று பார்க்காமல் உலகமயம் நல்ல வி‘யம். முன்னேற் றத்திற்கு வழிவகை செய்கிறது. ஒன்றிரண்டு கஷ்டங்கள் இருந்தாலும் நல்ல வி‘யம்தான் என்ற கருத்தோட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுடைய வாழ்நிலைத் தாக்கமும், ஊடகங்களும் இந்தக் கருத்தோட்டத்தை நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்தன. உலகமய சூழலில் நிலைமை மாறுகிறபோது ஊடகங்கள் சொன் னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு இன் றைக்குத் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்.வட மாநிலங்களை ஒப்பிடும்போது மனிதவள குறியீடு தமிழகத்தில் நன்றாக உள்ளது. இதில் கேரளா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரம் என்ற வரிசை உள்ளது. தமிழகத்தில் காலங்காலமாக நடக்கின்ற இயக்கங்களின் விளைவாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் போட்டியும் இதில் அடங்கியிருக்கின்றன. சமூகநலத் திட்டங்கள் நடைபெறுகின்றன. வறுமைக்கோடு என்ற அளவு இல்லாமல் எல்லோருக்கும் ரே‘னில் அரிசி கிடைக்கிறது. சராசரி கிராம மக்களின் வாழ்நிலை என்பது நிலம், குடிமனைப் பட்டா வைச் சார்ந்தது. இந்த இரண்டையும் அடை வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

ஏராளமான அந்நிய முதலீடுகள் வருவதாக செய்திகள் வருகின்றன. அரசு சொல்கிற இந்த முதலீடுகளால் எவ்வளவு பணியிடங்கள் உருவாக்கப்பட்டன? பணியிடங்களின் தன்மை என்ன? பணியிடங்கள் நிரந்தரமானதா? அன்றாட கூலிகளா அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகளா? என்ற விவரங்கள் எதுவும் கிடையாது. தேசிய புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழக கிராமப்புறங் களில்தான் நிலமற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறக் கூலி, கிராமப்புறக் கூலி விகிதங்கள் பெருமளவுக்கு முன்னேறவில்லை. என்னுடைய சமீபத்திய ஆய்வில் பீகார், ஜார்க் கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மனித வள குறியீடு மிக மோசமாக இருக்கிறது. ஒரு நாட்டில் உள்ள பணப்புழக்கத்திற்கும், உற்பத்திக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடை யாது. உதாரணத்திற்கு சில கோடி ரூபாய்களை அரசாங்கம் அச்சடித்துக் கொடுக்கிறது. அதற்கு சமமான தங்கம் இருக்கிறது என்பதெல்லாம் கற்பனை. நாம் கொடுக்கிற ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு பொருள் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. பொருள் கொடுக்க முடியாது என்றால் சட்டப்படி தண்டிப்பதற்கு உரிமையுண்டு. அந்தத் தாளில், இந்தத் தாளை கொண்டு வருபவர் களுக்கு இவ்வளவு மதிப்பை தருகிறேன் என்று அச்சடித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்திட்டு இருக்கிறார்.இது ஒரு வாக்குறுதிதான். மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது. நாம் அந்த தாள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நேரத்தில் விலைவாசி ஏறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, கத்தரிக்காய் காலையில் 30 ரூபாயாகவும், மாலையில் 300 ரூபாயாகவும், இரவில் 1000 ரூபாயாகவும் விற்றால் இந்தப் பணம் என்ற தாளை யாருமே பயன்படுத்த மாட்டார்கள். இந்த மனநிலை சமீபத்தில் ஜெர் மனியில் ஏற்பட்டது. இப்போது ஜிம்பாவேயில் ஏற்பட்டிருக்கிறது. இதை அபரிமிதமான பணவீக்கம் என்று சொல்வர். இதற்குக் காரணம் ஏகப்பட்ட நோட்டுக்களை அச்சடித்து உற்பத்தியும் பெரு காமல், இருப்பதால் நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படாமல் போகும்.

நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது என்பது ஏதோ ஓர் ஆண்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு நூறு ரூபாய் கொடுத்து என்ன பொருள் வாங்கினோமோ, அதே பொருளை இந்த ஆண்டு நூற்றி இருபது ரூபாய்க்கு வாங்க முடியும் என்றால் பணவீக்கம் இருபது சதவீதம் ஆகும். எனவே ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று அர்த்தம். ஆகவே ரூபாயின் மதிப்பை குறிப்பிட்ட ஆண்டை வைத்துத்தான் மதிப்பிட முடியும். பண வீக்கம் என்பது விலைவாசி உயர்வின் விகிதம். இப்போது செய்தித்தாள்களில் பணவீக்கம் 15-லிருந்து எட்டு ஆகிவிட்டது. இது சாதனை என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் பொருள்களின் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. இதனால் பணவீக்கம் குறைந்து இருக்கிறது. ஆனால் விலைவாசி குறையவில்லை. விலைவாசி ரூபாயின் மதிப்பை குறைக்கிறது.

வெளிநாட்டைப் பொறுத்தவரை டாலருக்கு ரூபாயின் மதிப்பு என்ன என்று கேட்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் மேலை நாடுகளில் ஏராளமான கடன் பெற்றிருக்க கூடிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருந்த பணங்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் ஏராளமான அந்நிய நாட்டுப் பணங்கள் வெளியேறுகின்றன. அவர்களிடம் இருக்கிற இந்திய ரூபாய்களை டாலராக மாற்றுகின்றனர். இதனால் டாலருக்கு கிராக்கி கூடுகிறது. ரூபாயின் மதிப்பு சரிகிறது. நாம் இறக்குமதி செய்கிற பொருள் ரூபாய் மதிப்பில் அதிகமாகும். ஆகவே பணவீக்கம் அதிகமாகும்.

Friday 21 August 2009

செய் செய்யாதே! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

பிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பாரதியார் போன்ற பலரின் சரிதங்களையும் அவர்களுடைய நூல்களையும் படித்தேன். எனக்கு ஓர் உத்வேகம் வந்துஉள்ளது. மற்றவர்களில் இருந்து வேறு பட்டு சமூகத்தில் என் பெயரையும் பதித்துவிட்டுப் போக ஆசையாக இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?''

சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனநிலை. அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.

மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?

அந்தத் திரையரங்கம் நிரம்பிவிட்டது.

''எங்கள் இருக்கைகளை வேறு ஒருவன் ஆக்கிரமித்து இருக்கிறான். எவ்வளவு சொன்னாலும் நகர மறுக்கிறான்'' என்று ஒரு தம்பதி மேனேஜரிடம் புகார் செய்தனர்.

மேனேஜர் கோபமாக உள்ளே சென்றார். ஒரு ஆள் அடுத்தடுத்து மூன்று இருக்கைகளை ஆக்கிரமித்து மல்லாந்து படுத்துக்கிடப்பதைக் கவனித்தார்.

''தம்பி, குடித்துவிட்டு வந்திருக்கிறாயா? படம் ஆரம்பிக்கப்போகிறது. உனக்கான இருக் கையில் உட்கார். மற்ற இரண்டு இருக்கைகளை உடனே காலி செய்.''

படுத்துக்கிடந்தவன் ஏதோ முனகினானே தவிர, அசையவில்லை. மேனேஜர் கோபமாகி போலீஸ்காரரை அழைத்து வந்தார்.

போலீஸ்காரர் மிரட்டலாகக் கேட்டார்.

''டேய், உன் பெயர் என்ன?''

அவன் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தான்.

''சங்கரன்'' என்றான்.

''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று அதட்டலாக அடுத்த கேள்வி வந்தது.

வலி கலந்த முனகலாகப் பதில் வந்தது: ''பால்கனியிலிருந்து.''

இப்படி மற்றவர்கள் கவனத்தைக் கவர்ந்தவராக மாறவா ஆசை? 'இல்லை. என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும்' என்று சொல் கிறீர்களா?

வாழ்க்கையில் எதை அணுகினாலும், 'நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்துவிட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.

தவிர, ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்தபோது கிடைத்ததால்தான் மகாத்மா காந்தி ஆனார். மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம். இன்றைய காலகட் டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்க ளோடு தாக்குப்பிடிப்பாரா... யோசியுங்கள்.

ஊழலிலே மூழ்கிப்போன ஓர் அரசியல்வாதி தனியே ஓய்வு எடுக்க கடற்கரைக்குச் சென்றார். தண்ணீரில் கால்களை நனைத்து அவர் நின்றிருந்த போது, திடீரென்று அலைகள் அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டன.

இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் தண்ணீரில் பாய்ந்தான். அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

அரசியல்வாதி வெலவெலத்துப் போயிருந்தார். ''நன்றி, தம்பி. எனக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறை வேற்றிவைக்கிறேன்.''

''ஐயா, என் இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும். இதுவே என் ஆசை.''

அரசியல்வாதி திகைத்தார்.

''தம்பி, இவ்வளவு இளைஞனாக இருக்கிறாய். அதற்குள் உனக்கு எதற்கு மரணத்தைப் பற்றிய கவலை?''

''நான் கடலில் இருந்து யாரைக் காப்பாற்றி இருக்கிறேன் என்பது வெளியில் தெரிந்தால், என் உயிருக்கு ஏது ஐயா உத்தரவாதம்?'' என்றான், இளைஞன் நடுக்கத்துடன்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிறைந்த இன்றைய இந்தியாவில், மகாத்மா காந்தி தனது நேர்மையான கொள்கைகளை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால், வெற்றி பெற முடியுமாஎன்பதே சந்தேகம்தான்.

அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டார்? இல்லை. தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார். அதனால், பெருமை பெற்றார்.

உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வீர்கள்.

இந்தியாவிலேயே செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் பாக்கி இருக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. செய்து முடிப்பதற்கு இன்னும் பல நூறு விஷயங்கள் மிச்சம் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல், உங்கள் தேவைகளை முன்னிறுத்தி மட்டுமே வேலைகளைத் தேடுவதால்தான் அவை கிடைப்பது இல்லை.

'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரகாசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.

உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்துதான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம். அல்லது, உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கப்படுபவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம். அதனால் என்ன?

மற்றவர்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது ஒரு பொருட்டல்ல. உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக உணர்வீர்கள். மகாத்மாவாக வாழ்வீர்கள்!

Thursday 30 July 2009

'what is it?' என்ற குறும்படம். ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம்

படம் ஒரு வீட்டுத் தோட்டத்தில் துவங்குகிறது. புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்ச்சில் வயதான அப்பாவும் அவரது மகனும் உட்கார்ந்துஇருக்கிறார்கள். மகன் நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறான். அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம். புல்வெளியைப் பார்த்தபடியே இருக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக் கிளையில் உட்காருகிறது. அதை அப்பா கவனமாகப் பார்க்கிறார். குருவி தாவிப் பறக்கிறது. அது என்னவென்று மகனிடம் கேட்கிறார். அவன் குருவி என்று சொல்லிவிட்டு பேப்பர் படிக்கிறான். அவர் மறுபடியும் அதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, அது என்னவென்று கேட்கிறார்.

அவன் குருவி என்று அழுத்தமாகச் சொல்கிறான். இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது. அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார். மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவிப்பா. கு... ரு... வி...' என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்கிறான். குருவி ஒரு கிளை நோக்கிப் பறக்கிறது. அப்பா மறுபடி கேட்கிறார்... அது என்ன? மகன், ''குருவி... குருவி என்று எத்தனை தடவை சொல்வது? உங்களுக்கு அறிவு இல்லையா?'' என்று கோபத்தில் வெடிக்கிறான். அப்பா மௌனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, ''உரக்கப் படி'' என்கிறார். அவன் சத்தமாகப் படிக்கிறான்.

'என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்துப் போனேன். அங்கே ஒரு குருவி வந்தது. அது என்னவென்று பையன் கேட்டான். குருவி என்று பதில் சொன்னேன். அவன் அதை உற்றுப் பார்த்துவிட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான். நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன். திருப்திஅடை யாத என் மகன் 21 முறை அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தான். நான் எரிச்சல் அடையாமல், கோபம்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் சந்தோஷமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டேன்!' என்று அந்த டைரியில் உள்ளது.

டைரியைப் படித்து முடித்த மகன், அப்பா போல ஏன் பொறுமையாகத் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல, அப்பாவின் தலையைக் கோதி அவரைக் கட்டிக் கொள்கிறான். அத்துடன் படம் முடி கிறது.

Monday 27 July 2009

நட்பு....

உண்மையான நண்பன் என்பவன் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுபவன். அதன் பிறகும், முன்பை போலவே உங்களிடம் பிரியமாக இருப்பவன்.

பொதுவாக நண்பர்களுக்கு மத்தியில் விமர்சனங்களை தாங்கும் மனோபாவம் குறைவாகவே இருக்கின்றது. மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் செய்கிற தவறுகள் ஏராளம். உரிய நேரத்தில் அதை அறிந்து சரி செய்யாமல் விடும் போது அதற்காக விலை மதிக்க முடியாத நட்பை இழக்க வேண்டியும் வருகிறது.

விமர்சனம் செய்பவர் நாகரிகமாக தன் கருத்தை நண்பருக்கு சொல்லும்போது, அதை அதே முறையில் அவரும் அணுகி ஏற்று கொள்ளும்போது ஒரு ஆரோக்கியமான நட்பு வளருகிறது. இதில் கருத்தை சொல்லும் விதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதே சமயம் , கடுமையான வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்க படவேண்டும். நண்பருக்கு அவருடைய தவறை சுட்டி காட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். இதை பயன்படுத்தி அவர் மனதை நோகடிக்கக்கூடாது.

மனமென்பது விளைச்சல் நிலம். நீங்கள் அதில் விதைக்கும் உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எந்த அளவு, மகிழ்ச்சியான, சந்தோசமான உணர்வுகளை விதைகிறேர்களோ அந்த அளவுக்கு சுவையான பழங்கள் கிடைக்கும்.

மீண்டும் சிந்திப்போம்....

-சூரியபிரகாஷ். வா

Sunday 26 July 2009

என் அவசரம்....

பொதுவாக சனிக்கிழமை தோறும் நானும் என் மனைவியும்

(Shopping) கடைக்கு சென்று அடுத்த வாரத்துக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்குவது வழக்கம்.

நேற்று நாங்கள் கிளம்பும் பொது, என் மனைவி சொன்னா, ஏங்க இங்க தான் (Swine Flu) பன்றி காய்ச்சல் இருக்கே, வெளியே போகும்போது நாம ரெண்டு பேரும் முகத்துக்கு Mask போட்டுக்கலாம்னு சொன்னா. நான் சொன்னேன் அதெல்லாம் நமக்கு வராது, இந்த மாதிரிஎல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதேன்னு சொல்லி Taxi இல் ஏறி சென்று கொண்டிருக்கும்போது என் மனைவிக்கு லேசான சாதாரண இருமல் வந்தது.

வண்டி ஒட்டிகிட்டிருந்த டிரைவர் திடீரென்று பதட்டமாகி அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு Mask எடுத்து அணிந்து கொண்டான். நான் என் மனைவிக்கிட்ட சொன்னேன், பாரு உனக்கு காய்ச்சல் இருக்குமோனு நினைத்து அவன் Mask மாட்டிகிட்டான்.

என் மனைவி உடனே டென்ஷன் ஆகி என்னை முறைத்தால். பொதுவாக Mask போடுவதை அசிங்கமா நினைக்காம, நம்முடைய பாதுகாப்புக்காக போடறது நல்லது தானே.

கடைக்கு சென்றவுடன் என் மனைவி ஒரு தடவைக்கு நாலு தடவை விலை எல்லாம் சரி பார்த்து எல்லா தேவையான பொருட்களையும் வாங்கிகிட்டு பணம் செலுத்த சென்று கொண்டிருக்கும் பொது

ஒரு தொலைகாட்சியில் மைக்கல் ஜாக்சன் பாட்டும் நடனமும் சென்று கொண்டிருந்தது. நான் அவசர அவசரமாக அந்த கடை ஊழியரிடம் அந்த (DVD ) கேசெட் விலையை கூட விசாரிக்காமல் வாங்கி விட்டேன். பின்னர் தான் தெரிந்தது அதன் விலை 400 பாட் என்று. கிளம்பும்போது இதை கவனித்து விட்ட என் மனைவி அதிர்ச்சியாகி, ஏங்க எப்படி பணத்த தேவை இல்லாம செலவு பண்றிங்க என்று ஆரம்பித்து ஒரு சில நிமிடத்தில் நான் இதுவரைக்கும் என்ன என்ன தேவை இல்லாம செலவு செஞ்சேன் என்பதை எல்லாம் வரிசை படுத்தி சொல்ல அரம்பித்து விட்டால்.

எனக்கும் வாங்கின பிறகு தான் தெரிஞ்சது விலை கொஞ்சம் அதிகம் தானோ என்று. சில நிமிட மௌனத்திற்கு பிறகு, நான் சொன்னேன், கொஞ்சம் அவசர பட்டுடேனோ, பின்னர் இருவரும் அந்த காசெட்டை திருப்பி கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த மாதிரி தெரியாம அவசர படர நேரத்தில் நம்ம கூட யாராவது இருந்து அடிக்கடி சரி பண்ணிகிட்டே இருக்க வேண்டியிருக்கு.

மீண்டும் சிந்திப்போம்.

- சூரியபிரகாஷ். வா

Friday 24 July 2009

என் வெற்றி - 1....

சில சமயம் வாழ்க்கை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் போற மாதிரி இருக்கும். சில சமயம் ரொம்ப மெதுவா, அமைதியாகவும் பொய் கொண்டிருக்கும். இதுக்கெல்லாம் நம்ம மனசு, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற சூழ்நிலைகள் காரணமா அமைகிறது.

கடந்த மூன்று வாரமா ஞாயிற்றுகிழமை கிரிக்கெட் விறுவிறுப்பாகவும், நண்பர்களிடையே மிகுந்த உற்சாகமாகவும் பொய் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஆட்டங்களின் பொது ஒரு அணி முன்னிலை பெறுவதும், மற்றொரு அணி பின் தங்குவதும் இயற்கை. மறுபடியும் பின் தங்கிய அணி முன்னிலை பெரும்.

வாழ்க்கை ஒரு வட்டம், இதுல தோற்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோற்பான் - இந்த வசனம் திருமலை படத்துல நடிகர் விஜய் சொன்னது.

வெற்றி தோல்விய சாதரணமாக எடுத்துக்கொளும் பாங்கு எல்லாருக்கும் எளிமையா வந்துடும்னு எதிர்பார்க்க முடியாது. வெற்றி பெறும்போது என்னால தான் இன்னிக்கு என் அணி வெற்றி பெற்றதுன்னு பெருமைய சொல்லற நிறைய பேர். அவங்க அணி தோற்கும் போதும் அதுக்கு தன்னை காரணமா சொன்னதா சரித்திரமே கிடையாது.

என் பத்தாவது வயதிலிருந்து நான் கிரிக்கெட் ஆடிகிட்டு வருகிறேன். அப்போதிலிருந்து நான் நிறைய தோல்விகளையும், குறைந்த வெற்றிகளையும் தான் சந்தித்திருக்கிறேன். சில நேரங்களில் என்னாலேயே சில ஆட்டங்களை தோற்றிருக்கிறோம். முக்கியமான நேரத்தில் கேட்ச் தவற விட்டு விடுவேன். அதிக ரன் எடுத்து ஜெய்க்க வேண்டிய ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆகிவிடுவேன். எதிர் அணி ஆறு பந்துகளில் பத்து ரன் எடுக்க வேண்டிய நிலையில் நான் பந்து வீசினால், எதிர் அணி எளிமையாக அந்த பத்து ரன்னை எடுத்து எங்கள் அணி தோற்கும்.

ஆட்டத்தின் வேறு சில போக்குகளாலும், இதர நண்பர்களுடைய மிக சிறிய தவறுகளும் இந்த தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், ஆட்டம் முடிந்து நண்பர்களுக்கு இடையேயான விவாதத்தில் ஒவ்வொருத்தனும் என்னை நோக்கி ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு, என்னால தான் அன்றைய ஆட்டம் தோற்றதாக உறுதி படுத்தி விட்டு செல்வார்கள்.

இதே போல சில நேரங்களில் நான் அதிக ரன் எடுத்துஅல்லது விக்கெட் வீழ்த்தி என் அணி வெற்றி பெறும்போதோ, நண்பர்கள் விவாதம் இன்றைய ஆட்டம் சிறப்பாக இருந்ததற்கு எல்லோரடைய உழைப்பும், முயற்சியும் இருந்ததாக சொல்லி முடிக்கப்படும். (நெருங்கிய நண்பர்கள் வாழ்த்து மட்டும் இருக்கும்).

இதெல்லாம் எனக்கு மட்டும் ஏற்பட்ட , வாழ்க்கையில் நடந்த அனுபவமாக இருக்க முடியாது. எல்லா விளையாட்டு வீரனும் சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கிற அனுபவங்கள் தான்.

என் அனுவத்திலிருந்து நான் கற்றது, வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்க வேண்டும். வெற்றி பெறும்போது கொண்டாடுவதும், தோல்வியுறும்போது துவண்டு விடுவதும் நல்லதல்ல.

ஜெயித்தால் நல்லது! தோற்றால் அதை விட நல்லது! . தோல்விகள் தான் மனிதனை அடுத்த கட்ட வெற்றிக்கு வலிமையாக கொண்டு செல்கிறது.

மீண்டும் சிந்திப்போம்....

-சூரியபிரகாஷ்.வா

இன்று ஒரு குறள்....

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் - குறள்


குறள் விளக்கம்:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமேவேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

Saturday 11 July 2009

உண்ணாவிரதம்....

இந்தியாவைப் பொறுத்தவரை, உண்ணாவிரதம்என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட இந்தஉண்ணாவிரதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்கள்மத ரீதியான காரணங்களுக்காக உண்ணா நோன்பு இருக்கிறார்கள். ஆனால், மருத்துவ ஆலோசனையுடன் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது என்றவிஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால்50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்குஇணையானது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்புபோதுமானது.

உண்ணாவிரதம் இருக்க நினைத்தால், உடனடியாகஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல்சில நாட்கள் மிகக் கடுமையானவை. இந்த நாட்களில்பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்துவாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல்இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

உண்ணா நோன்பு தொடரும்போதுஇந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும்அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்.

கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் இருக்கிறது.உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும்பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

சாப்பிடாமல் இருப்பதால்என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.அதனால்,ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.

2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது. இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.

3. சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.

4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.

5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.


6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது. குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப்படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறதுமூளை.

மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பதுஅந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள்இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.