Thursday 21 January 2010

உங்களை, உங்களுக்கே உணர்த்தும் - சுவாமி சுகபோதானந்தா

'நாற்பது வயதில் நீங்கள் இருபதாகலாம்... அறுபது வயதில் நாற்பதாகலாம்!'

வாழ்வியல் பயிலரங்கங்களை நடத்த அவ்வப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும்.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில்... ஏராளமான அனுபவ அறிவு தேவைப்படும் பதவிகளில் எல்லாம் வெறும் இருபது, இருபத்தி இரண்டு வயது பெண்கள் வீற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 'எப்படி...?!' என்று நான் வியந்தபோதுதான், என் மாணவன் ஒருவன் எனக்கு அந்த நாடுகளில் நிலவும் நிதர்சனத்தை விளக்கினான்.

"சுவாமி... இவர்கள் எல்லாம் பார்க்கத்தான் இருபது, இருபத்தி ஐந்து வயது பெண்கள் போல இருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அதைவிட இருமடங்கு வயது கொண்டவர்கள்!" என்றான். நம்புவதற்கு நான் சிரமப்படுவதைப் பார்த்த மாணவனே தொடர்ந்தான்.

"சுவாமி... இந்தியாவில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களுக்குச் செல்லும் பெண்கள் நல்ல நகை நட்டோடு, பாந்தமாக பட்டுப்புடவை அணிந்து போவதை எப்படி முக்கியமாக நினைக்கிறார்களோ, அதேபோல அலுவலகத்துக்கு நல்ல கச்சிதமான உடலமைப்போடு போக வேண்டும் என்பதை இந்த நாட்டுப் பெண்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். குழந்தை பெற்று சற்றே சதை போட்டுவிடும் பெண்கள்கூட பேறுகாலம் முடிந்து மீண்டும் அலுவலகம் போக முடிவெடுத்தால், சுமார் இரண்டு மாத காலம் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடம்பை கச்சிதமாக மாற்றிக் கொண்டுதான் அலுவலகம் செல்கிறார்கள்" என்றான்.

நான் என் இந்த அனுபவத்தை என் இந்திய மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு, " 'உடற்பயிற்சியால் நாற்பது வயது பெண்கள் எல்லாம் இருபது வயது பெண்கள் போல தோற்றமளிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவர்களின் உற்சாகம், துறுதுறுப்பு, வேலையில் குதூகலம் என்று... அனைத்திலும் இருபது வயது பெண்கள் போல சுறுசுறுப்போடு எப்படி நடந்து கொள்ள முடிகிறது?!'

- இதுதானே உங்களின் கேள்வி? இது மிகவும் சுலபம். நினைத்தால்... மனதளவில் உங்களால்கூட உங்கள் வயதை பாதியாகக் குறைத்துக் கொண்டு உற்சாகத்தை இரண்டு மடங்கு கூட்ட முடியும்" என்றேன்.

ஒரு பெண்மணி, "சுவாமி... நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே?! திருமணமான புதிதில் என் கணவரின் கவனம் முழுக்க முழுக்க என் மீது இருந்தது. எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. பேறுகாலத்திலும் குழந்தைகள் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த பருவங்களிலும் என் கவனம் முழுக்க அவர்கள் மீது இருந்தது. அப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால், இப்போதோ குழந்தைகள் பெரியவர்களாகி வேலை கிடைத்து திருமணம் நடந்து வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது வாழ்க்கையில் வெறுமை தான் மிஞ்சியிருக்கிறது."

இப்படிப் பேசிய பெண்மணிக்கு நாற்பத்தி ஐந்து வயதுதான் இருக்கும். அதற்குள் அவருக்கு வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்டதைப் போல ஓர் உணர்வு.

ஆனால், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் ஒருபோதும் இப்படி நினைப்பதில்லை. அவ்வளவு ஏன்... மறைந்த நமது பிரதமர் இந்திரா காந்தியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேரன், பேத்தியெல்லாம் எடுத்தவர்தான். அந்த அந்தஸ்தை அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தார். பேரன், பேத்திகளோடு எல்லாம் விளையாடினார். ஆனால், வேலை என்று வரும்போது அவர் தன்னை பாட்டியாக கற்பனை செய்து கொண்டதுகூட இல்லை. ஆம்... உலகம் எப்போதுமே அவரை ஒரு இரும்பு மனுஷியாகத்தான் பார்த்திருக்கிறதே ஒழிய, ஒருபோதும் பாட்டியாகப் பார்த்ததே இல்லை. காரணம்... வயது என்பது உடம்பைவிட மிக அதிகமாக மனதோடும், செயல்பாட்டோடும் சம்பந்தப்பட்டது.

அமெரிக்கா போன்ற பிரதேசங்களில் வாழும் 'வல்ச்சர்' என்று சொல்லப்படும் பருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிஸ்கவரி சேனலே இப்போது தமிழில் வருவதால் அதில்கூட நான் சொல்லும் செய்தியை நீங்கள் பார்க்கக்கூடும். அந்த பருந்துகளுக்குப் பொதுவாக நாற்பது வயது வரைதான் ஆயுள். அந்த வயதை எட்டிப்பிடிக்கும் போதே எலி, பாம்பு மாதிரியான இரைகளை வேட்டையாடிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதன் அலகுகள் மழமழவென்று மழுங்கி போய்விடும். கால் விரல்களில் இருக்கும் நகங்களும் கூர்மையை இழந்துவிடும். அதனால் இந்தப் பருவத்தில் ஒரு சில பருந்துகள் உணவின்றி இறந்துபோய்விடும். ஆனால், அவற்றில் அதீத மனத்தின்மை வாய்ந்த பருந்துகளோ... தங்களின் முயற்சியால் கூடுதலாக முப்பது வருட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும்!

ஆச்சர்யமாக இருக்கிறதா..? ஆனால், அது உண்மைதான்! இந்தப் பருந்துகள், நாற்பது வயதான பருவத்தில் ஆளரவமற்ற ஏகாந்தமான மலைப்பிரதேசங்களுக்குச் சென்று பெரும் மறுமலர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும். இந்தக் காலத்தில் அவை மலைகளில் தன் அலகுகளை மோதி உடைத்துக் கொள்வதுடன், புதிதாக அலகு முளைக்கும் வரை அந்த மலைகளிலேயே தங்கியிருக்கும். அதேபோல கூர்மை இழந்த தங்களது கால் நகங்களை அவை பிடுங்கிப் போட்டுவிட்டு, புதிய நகங்கள் வளரும் வரை காத்திருக்கும். புதிய அலகும் கால் நகங்களும் வளர்ந்த பின்னர், மீண்டும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி... மேலும் முப்பது ஆண்டு காலம் வாழும்!

இந்தப் பருந்துகளைப் போல நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் ஆசைப்பட்டு நிறைவேறாத விஷயங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். நீங்கள் படிக்க விரும்பிய புத்தகங்களை எல்லாம் அனுபவித்து படித்து ரசியுங்கள். 'வீணை கற்றுக் கொள்ள வேண்டும்', 'இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்' 'தெலுங்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்!' என்று ஆளாளுக்கு ஆயிரமாயிரம் நிறைவேறாத ஆசைகள் மனசுக்குள் அடங்கிக் கிடக்கும். உங்களின் வயது என்னவானாலும் அதை இப்போது நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

'குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதித்து விளையாடுகிற மாதிரி...' என்று யாராவது உங்களைப் பரிகாசம் செய்ய முற்பட்டால்... அதையெல்லாம் காதிலேயே வாங்காதீர்கள். எனக்குத் தெரிந்த பல பெண்மணிகள் நாற்பத்தைந்து வயதுக்கு மேல்தான் ஸ்கூட்டி ஓட்டவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் பேரன், பேத்திகளோடு பேச அறுபது வயதுக்கு மேல் கம்ப்யூட்டரை இயக்க கற்றுக் கொண்ட பலரை உங்களுக்கே தெரிந்திருக்கும். புதிய விஷயத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் போது... உங்கள் மனதுக்குள் உற்சாக அலை அடிப்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும்!

பின் நாற்பதிலும் நீங்கள் இருபது; அறுபதிலும் நாற்பது!

- அமைதி தவழும்...

No comments: