Tuesday 17 November 2009

தொல்காப்பியன்... ஸாரி, திருச்செல்வம்


*ஆறுவருட பயணம்... எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொண்டேன். அம்மா, பெண், பாட்டி என மூன்று தலை முறைகளையும் தொலைக்காட்சி முன்னால் அமர வைத்ததை பெரிய விருதாகவே நினைக்கிறேன்.

*தொல்ஸ் மகாபொறுமைசாலியாக இருக்கிறாரே?

இந்த காலத்தில் பொறுமை என்பது அனைவருக்கும் அவசியமான ஒரு குணம். எதற்கெடுத்தாலும் முதலில் கோபப்படுகிறோம். மேடையில் ஆயிரம் பேசினாலும் நிஜத்தில் பெண்களின் முன்னேற்றத்தை ஆண்கள் ஏற்க மறுக்கிறார்கள். இன்னும் சிலர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்புக்கு சாத்தியமில்லை என்று அடித்துச் சொல்வார்கள். இந்த ஆண்கள் திருந்தவே மாட்டார்களா என்ற என் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் 'தொல்காப்பியன்' கதாபாத்திரம். அதிகாரம் செய்யும் ஆணைவிட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும். அந்தவகையில் பெண்களின் நல்ல நண்பன் 'தொல்ஸ்'

*திருநங்கை கதாப்பத்திரத்தையும் குடும்பத்தில் ஒருவராக சேர்த்திருக்கிறீர்களே?

அவர்கள் மட்டும் தீண்டத் தகாதவர்களா என்ன? இயற்கை செய்த தவறுக்கு அவர்களை ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இங்குதான் தேவையில்லாத கேலிப்பேச்சுகளால் அவர்களை பிரித்து பார்த்து ஒதுக்கி வைக்கிறார்கள். எங்க பேராவூரணி ஏரியாவில் அவர்களையும் உறவு முறை சொல்லித்தான் அழைப்போம்.

*அபியை மட்டுமே சுற்றி வரும் கதையில் மார்க்சியம் பேசும் தோழர் கதாபாத்திரம் எதற்கு?

பெண் என்பவள் தனிப்பட்டவள் இல்லை. அவளும் சமூகத்தில் ஒரு அங்கம்தான். அவள் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளோடு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறவர்தான் தோழர். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தின் மீதும், சமூகத்தில் நிகழும் முறைகேடுகள் மீதும் கோபம் இருக்க வேண்டும் என்பதை சொல்வார் என் தோழர். அந்தக் கதாபாத்திரத்தை ரசித்துச் செய்த தோழர் ஆதவனால் அது இன்னும் மெருகேறியது. தங்களால் செய்ய முடியாததை செய்ததாலேயே தோழருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

*தோழரின் மரணம், விடுதலை புலிகள் தலைவர் பிரகரனின் இறப்பை நினைவுபடுத்துவது போல இருந்ததே?

அப்படி நினைவுபடுத்த வேண்டும் என திட்டமிட்டு அமைக்கப்பட்ட காட்சிதான் அது. சாவைக் கண்டு பயப்படாத ஒருவனுடைய கண்கள் மரணத்தின்போது எப்படி இருக்குமோ அதை அப்படியே பிரதிபலித்தார் தோழர். மார்க்சிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, 'முப்பது வருடங்களாக எங்களால் செய்ய முடியாததை உங்கள் தோழர் கதாபாத்திரம் செய்து விட்டது. நான் போகிற ஊர்களில் சிறுவர்கள் கூட 'தோழர்' என்று அழைப்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது' என்று பாராட்டினார். என் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே போதுமே.

மேலும் இந்தத் தொடரில் வரும் எல்லா கதாபாத்திரமும் ஒரு குறியீடுதான். ஆதி என்பவன் முதலாளி வர்க்கத்தின் குறியீடு. தோழரும், அபியும் சமூக மற்றும் தனிமனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போராட்ட வர்க்கத்தின் குறியீடுகள். சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவதை இங்கு அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் போரட்டம் என்ற பெயரில் அரசியல் ஆதாயங்களை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மை எத்தனை பேரைச் சென்று அடைந்திருக்கிறது? சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்கும் யதார்த்தம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் என் கருத்துகளை சின்னத்திரை என்கிற சக்திவாய்ந்த ஊடகம் மூலமாக சொல்கிறேன்.


*அடுத்தது சின்னத்திரையா வெள்ளித்திரையா?

இரண்டும்தான். 'மாதவி மனோகரன்' என்ற தொடரை இரண்டு வாரங்களுக்கு மட்டும் இயக்க இருக்கிறேன். பிறகு கதை, திரைக்கதை மட்டும் எழுதுவேன். தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் 'முத்து குமரனின் காதல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். இது காதல் கதை கிடையாது. அனைவரும் விரும்பு குடும்பம் மற்றம் போராட்ட கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இந்தியின் முன்னனி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்.


*வெள்ளித்திரையில் இயக்கப் போவதில்லையா?

செய்யலாம். ஆனால் சின்னத்திரையில் இருக்கிற வசதி பெரியதிரையில் இல்லை. ஒரு தொடரை இயக்கும் போது இந்த வாரம் சரியில்லை என்றால் அடுத்த வரம் சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் சினிமாவில் அப்படி செய்ய முடியாது.

வரும் டிசம்பர் 4-ம் தேதியோடு கோலங்கள் நிறைவடையப் போகிறதாம். சின்னத்திரையில் வெற்றிவலம் வரும் தொல்காப்பியன்... ஸாரி, திருச்செல்வம் வெள்ளித்திரையிலும் பிரகாசிக்க வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

No comments: