Thursday 8 April 2010

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் - கோபிநாத்

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார், 'எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயன்றால், எல்லோருக்கும் கெட்டவனாகிவிடுவாய்' என்று. உண்மைதான். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் 'சரி' சொல்பவர்கள் நிறையப் பேர்.

'சரி' சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும் 'சரி' சொல்லி வேலையை இழுத்துப்போட்டுச் செய்யும்போது அனைவரின் அபிமானத்தையும் பாராட்டையும் பெறுவதுபோலத் தோன்றலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்கிற மனோபாவத்தை எல்லோர் மனதிலும் நீங்களே விதைத்துவிடுகிறீர்கள்.

விளைவு, என்றைக்காவது ஒருநாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிறபோது, 'இவன் முன்னைப்போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும். நீங்கள் ஏற்கெனவே பல பேருக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலைகளைச் செய்ய முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும், எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்துப்போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீர்கள். இப்போது, 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்று குற்றம் சாட்டுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும்.
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க நீங்கள் எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிரா கத் திரும்பி நிற்கிறது. போதாக்குறைக்கு இவர் களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.

'சரி'யோ இல்லை 'முடியாது' என்று சொல்வதோ கண்ணையும் மனதையும் மூடிக்கொண்டு சொல்லாதீர்கள். அதனை முடிவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் 'சரி' சொல்ல வேண்டிய நிர்பந்தங்களே நமக்கு நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில், யார் எது சொன்னாலும் அவர்கள் மனசு நோகக் கூடாது என்பதற்காக 'சரி' என்று தலை ஆட்ட ஆரம்பித்தால், தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். முறையாக 'முடியாது' என்று தேவையான இடங்களில் சொல்லிப் பழகாத தால்தான், பலர் கஷ்டப்படுகிறார்கள்.

தன் உயர் அதிகாரியோ, முதலாளியோ, முடியாது என்று சொன்னால், தன்னைப்பற்றித் தவறாக நினைத்துவிடுவார் என்ற எண்ணம்தான் பல நேரங் களில் நம்மைச் 'சரி' சொல்லவைக்கிறது. 'ஏம்ப்பா, உன்னாலதான் அதைச் செய்ய முடியாதே அப்புறம் ஏன் 'சரி'ன்னு தலையாட்டிட்டு வந்தே?' என்று யாராவது கேட்டால், 'முடியாது' என்று எப்படிச் சொல்வது என்று பதில் வரும்.

உண்மைதான். முடியாது என்பதை நாசூக்காகவும், நாகரிகமாகவும் எதிரில் இருப்பவருக்குப் புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சியே நமக்குக் கிடையாதே. தலையை வலமும் இடமும் சாய்த்து நிமிர்த்தினால் வேலை முடிந்தது. 'சரி' என்று சொல்லிஆயிற்று.

நீங்கள் முடியாது என்று சொல்ல நினைத்த விஷ யத்துக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலையை எப்படி ஈடுபாட்டோடு செய்ய முடியும்? ஈடுபாடு இல்லாமல் செய்கிற வேலை எப்படி வெற்றி அடையும்? விளைவு, இரண்டாவது குற்றச்சாட்டும் உங்கள் மீது வரும். 'எல்லாத்துக்கும் சரி சொல்வாரு. ஆனா, ஒரு வேலையைக்கூட உருப்படியாச் செய்ய மாட்டாரு'.
கெட்ட பெயர் எடுக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் சொன்ன 'சரி' இப்போது உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது!

'முடியாது' என்று சொல்வதில் நமக்கு இருக்கிற இரண்டு முக்கியமான பிரச்னைகள் என்னென்ன? ஒன்று, அடுத்தவர் தவறாக நினைக்கக் கூடாது. இரண்டாவது முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

முதல் பிரச்னைக்கான பதில் ஏற்கெனவே கிடைத்துவிட்டது. இரண்டாவது பிரச்னைக்குத் தீர்வு என்ன? நாம் எல்லோரும் ஒன்றும் ராணுவத்தில் இல்லை. இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நீங்கள் 'முடியாது' என்று சொல்லவே கூடாது என எதிர்பார்க்கவும் இல்லை.
அதைவிட முக்கியமான விஷயம், அடுத்தவர் சொல்கிற அனைத்துக்கும் 'சரி' சொல்கிற ஆளாக இருக்கும்பட்சத்தில் உங்களின் சுய சிந்தனை மரத்துப் போகிறது. சுய சிந்தனை மரத்துப்போனவன் ஓர் இயந்திரம் மாதிரிதான் செயல்பட முடியும். அப்படிப்பட்ட ஒருவர் மீது முதலாளிக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ எப்படி மரியாதை வரும்?

நீங்கள் பகுத்தறியும் ஞானம் இல்லாதவர் என்பதைத் தான் எல்லாவற்றுக்கும் 'சரி' சொல்வதன் மூலம் வெளிப் படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப்போல 'முடியாது' என்று சொல்லுவது எளிதான காரியம் இல்லைதான். ஆனால், குறைந்தபட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங் கள், யோசித்துச் சொல்கிறேன்' என்று சொல்லலாம்.

இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் உலகம் உங்களின் 'முடியாது' என்று சொல்லத் தெரியாத பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. உங்களுக்குச் சம்பளம் தீர்மானிக்கும்போது, உங்களிடம் புதிய வேலைகளை ஒப்படைக்கும்போது, இப்படிப் பல தருணங்களில் 'உடனடியாக எனக்குப் பதில் சொல்லுங்கள்' என்பார்கள். காரணம், அந்த அழுத்தத்தை உங்கள் மீது திணிப்பதன் மூலம் உங்களிடம் இருந்து குறைவான விலைக்கு அதிக வேலையைப் பெற்றுவிடலாம். போதாக்குறைக்கு முடியாது என உங்களுக்குச் சொல்லத் தெரியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்தத் தருணங்களில் கொஞ்சம்கூட அச்சப்படாமல் எனக்குச் சற்று அவகாசம் தாருங்கள் எனக் கேட்கலாம். அந்த அவகாசத்தைத் தந்தால் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள் என்பதால்தான், உடனடியாகப் பதில் கேட்கிறது, கார்ப்பரேட் உலகம். அந்த நிர்பந்தத்துக்குப் பணிந்தும் பயந்தும் நீங்கள் 'சரி' என்று தலையாட்டினால், உங்களைக் குறித்து வைத்துக்கொள்வார்கள் 'இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்' என்று

பிறகு, எந்த நியாயம் இல்லாத வேலைப் பளுவாக இருந்தாலும், உங்கள் மீதுதான் சுமத்தப்படும். கடைசி வரை பொதி சுமக்கிற கழுதையாக வாழ்க்கையைத் தள்ளவேண்டி இருக்கும்.
இன்னிக்கு இருக்கிற போட்டி நிறைந்த உலகத்தில்... அவகாசம் கேட்பது, முடியாது எனச் சொல்வதெல்லாம் புத்திசாலித்தனம் இல்லை என்று தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தை நினைத்துப் பார்ப்போம். வேலை கிடைக்க வேண்டும். சம்பளம் கிடைக்க வேண்டும் அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால், நியாயமற்ற வேலைப் பளுவைத் தாங்க முடியாமல் மூன்று மாதங்களில் இன்னொரு வேலையைத் தேட வேண்டி இருக்கும்.

அதற்கு நியாயமான விஷயத்துக்கு மட்டும் 'சரி' சொல்லிவிட்டு, சரியான வேலையைச் செய்வது உத்தமம். இல்லையென்றால், அவசரத்துக்குத் தலையாட்டிவிட்டு அதன் பின்பும் 'முடியாது' என்பதைச் சொல்லவே முடியாமல் மனதும் உடம்பும் களைத்துப் போகும். வேலை தண்டனை ஆகும். மாதச் சம்பளம் வருகிறபோது ஏதோ ஜெயிலில் வேலை பார்த்ததற்குத் தரப்படுகிற 'படி' மாதிரி தெரியும். மனைவி செய்கிற 'சுபச் செலவுகள்'கூட தண்டமாகத் தோன்றும். 'நான் நாய் மாதிரிகஷ்டப் படுகிறேன். நீ ஆடம்பரம் பண்றியா?' என்று கத்த வைக்கும். குழந்தைகளை அடிக்கும். 'அவன் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கித் தரும்.
எங்கேயோ ஓர் இடத்தில் நாகரிகமாகச் சொல்லப்பட வேண்டிய 'முடியாது' சொல்லப்படாததால், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று பாருங்கள்.

நீங்கள் முடியாது என்று நினைக்கிற விஷயத்தை வெளிப்படுத்த ஆரம்ப நிலையில் ஆயிரம் வழிகள் உண்டு. அதைச் செய்ய சங்கடப்பட்டால் ஒருநிலையில் அது மனதோடு கடுமையான வார்த்தைகளாக வெளிவரும். 'என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன உங்கள் அடிமையா?' என்று கத்தவைக்கும்.

அப்படி வெளிப்படுத்த முடியாத சூழலில் தொடர்ந்து இருக்க நேரிட்டால், மன அழுத்தம் அதிகமாகி டாக்டரைப் பார்க்க வேண்டி இருக்கும். ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க வருகிற நண்பர்கள், 'எல்லாத்தையும் இப்படி இழுத்துப் போட்டு செஞ்சா அப்புறம் என்ன ஆகும்' என உங்கள் காதுபடவே சொல்லிவிட்டுப் போவார்கள்.

ஒரு நிமிடம் இப்போது யோசித்துப் பாருங்கள், நீங்கள் யார்? எப்படிப்பட்ட மனிதர்? யார் மனதும் புண்படக் கூடாது, எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்... இப்போது ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறீர்கள் அல்லது, இந்த ஆள் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கி இருக்கிறீர்கள்.

இதற்காகவா இவ்வளவு பாடுபட்டீர்கள்? இந்தச் சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. 'சரி' சொல்வதானாலும் 'முடியாது' சொல்வதானாலும் யோசித்துச் சொல்லுங்கள்.

'தலையாட்டிப் பொம்மையாக இருக்காதீர்கள்!.

2 comments:

ஜிஎஸ்ஆர் said...

இது நீங்கள் எழுதியதுதான நான் வேறு எங்கோ படித்த் ஞாபகம் இருக்கிறது, என் சந்தேகம் தவறாயிருந்தால் வாழ்த்துகள்

surivasu said...

//இது நீங்கள் எழுதியதுதான நான் வேறு எங்கோ படித்த் ஞாபகம் இருக்கிறது, என் சந்தேகம் தவறாயிருந்தால் வாழ்த்துகள்//

ஹலோ ஜி.எஸ்.ஆர்,
நான் படித்து வெகுவாக ரசித்ததை மற்ற நண்பர்களுக்காக என்னுடைய தளத்தில் மறுபதிவு செய்கிறேன். இந்த கட்டுரை திரு.கோபிநாத் விகடனில் எழுதியது. தலைப்பை பார்க்கவும். இறுதியில் நன்றி விகடன் போட மறந்துள்ளேன். தங்கள் கமெண்ட்க்கு நன்றி.