Thursday 29 April 2010

''நான் பாஸ்கர்சக்தி ஆனது எப்படி?''

ண் மணம் மாறா எழுத்து பாஸ்கர்சக்தியுடை யது. வாழ்வில் தவறவிடும் தருணங்களை எளிமையும் கிண்டலும் கலந்த மொழியில் எழுதிச் செல்பவர், சின்னத் திரையிலும், பெரிய திரையிலும் பரபரப்பான வசனகர்த்தா.

''தேனி பக்கம் வடபுதுப்பட்டி என் சொந்த ஊர். எட்டாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். படிப்பில் கெட்டிக்கார மாணவன். ஆனால், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும். வீசிங் பிரச்னை. உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் என் பிரச்னை புரிந்து கரிசனத்துடன் பார்த்துக்கொண்டனர். ஆனால், எட்டாம் வகுப்பு முடிந்ததும் வேறொரு ஊரில் ஒன்பதாம் வகுப்பு சேர வேண்டி இருந்தது. ஒரு மாதம்கூட இருக்காது. கடுமையான உடல்நல பாதிப்பு. பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டேன்.

உள்ளூரைவிட்டு தொழில் தேடி குடும்பம் வெவ்வேறு ஊர்களுக்கு மாறியது. எந்த ஊருக்குப் போனாலும் நூலகங்களைத் தேடிப்போய் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மட்டும் தொடர்ந்தது.

அப்பா திருமலைச்சாமி, விதவிதமான தொழில்கள் செய்து விதவிதமாக நஷ்டப்பட்டவர். உற்சாகமாக ஒன்றைத் துவங்கி படுதோல்வி அடை வார். ஓரிரு நாட்களில் அசராத அதே உற்சாகத்தோடு அடுத்த தொழிலை ஆரம்பிப்பது குறித்த கனவு களுடன் பேசிக்கொண்டு இருப்பார். நான் சிரிப்பு டனும் அம்மா கடுப்புடனும் அதனைக்கேட்டுக் கொண்டு இருப்போம். தனது ஒன்பதாவது தொழிலாக அப்பா விறகுக் கடை வைத்திருந்தார். அதை ஒரு வருடம் கவனித்துக்கொண்டு இருந்தேன். அந்த சமயம் கோட்டூரில் சித்தப்பா ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்தார். மிகுந்த சந்தோஷத்துடன் தியேட்டரில் போய் டிக்கெட் கிழித்தேன். வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தால், என்னுடன் படித்த பையன்கள் எல்லோரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தனர். நன்றாகப் படித்த ஆனால், எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத நான் தோல்வி அடைந்தவனாக உணர்ந்தேன். (என் அப்பா அப்போது சில்வர் பாத்திரங்களை வாங்கி வீட்டில்வைத்து உற்சாகமாக விற்கத் துவங்கி இருந் தார்!) தோற்றுவிடக்கூடாது என்கிற உள்ளுணர்வு உந்த, அடுத்த அக்டோபரில் நேரடியாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினேன். பாஸ். அடுத்த ஏப்ரலில் ப்ளஸ் டூ எழுதி அதிலும் பாஸ். பிறகு அஞ்சல் வழி பி.காம்., படிப்பில் சேர்ந்தேன். ஆனால், அது பிடிக்காமல் நிறுத்திட்டேன். இடையில் கிரிக் கெட், இளைஞர் மன்றம் என அந்த வாழ்க்கை ஒரு பக்கம். எல்லாவற்றுக்கும் மைய இழையாக இருந்தது இலக்கியம். தேனியில் அறிமுகமான த.மு.எ.ச.தோழர் கள் மூலமாக இடதுசாரி தத்துவமும், இலக்கியப் பரிமாற்றமும் சாத்தியமாயின. (இந்தக் காலகட்டத்தில் அப்பா செடி முருங்கைக் கன்றுகளை நாற்றுப்போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்!)

நான் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினேன். அப்பாவோ, வேலைக்குப் போனால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார். அதை மறுத்த அம்மா, 'உங்களை மாதிரி அவனும் உருப்படாமப் போறதுக்கா?' என அப்பாவை அதட்டி, என்னை கல்லூரியில் சேரச் சொன்னார். போடி சி.பி.ஏ. கல்லூரியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட் ரேச்சருக்கு விண்ணப்பித்தேன். எனது படிப்பு வழிப் பயணத்தைப் பார்த்து எனக்கு சீட் தர தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் எனக்காகப் பேசி சீட் வாங்கித் தந்தவர் பேராசிரியர் மோகனசுந்தரம். ஒரு வழியாக நானும் பி.ஏ., முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயில வந்தேன். அடிமனதில் எழுத வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ரொம்ப வருடங்கள் கழித்து 95-ம் வருடம்தான் முதன்முதலில் ஒரு கதை எழுதினேன். 'சாதனம்' என்ற அந்தக் கதை இந்தியா டுடே இலக்கிய மலரில் இரண்டாவது பரிசைப் பெற்றது. இரண்டாவது கதை எழுத இன்னொரு வருடம் ஆனது. அது இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

அதைத் தொடர்ந்துதான் விகடனில் சேர்ந்தேன். (இப்போது அப்பாவுக்கு அண்ணன் ஒரு எஸ்.டீ.டி. பூத்வைத்துக் கொடுத்திருந்தார். அப்பா முன்னிலும் உற்சாகமாக இருந்தார்!) 'ரூட் பஸ்' என்ற எனது முதல் குறுந்தொடர் விகடனில் வெளியானது. அடுத்தடுத்த வருடங்களில் நிறைய கதைகளும், சில தொடர்களும் எழுதினேன். அப்படி எழுதிய ஒரு தொடர்தான் 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்'. அந்த சமயம் அப்பாவுக்கு தொண்டையில் பாதிப்பு. புற்றுநோய் என்றார்கள். அப்பாவைப் பார்த்துக் கொண்டு ஊரில் அண்ணன்வைத்திருந்த எஸ்.டீ.டி. பூத்தையும் கவனித்துக்கொண்டு தேனியிலேயே எழுத்தாளராக ஃபார்ம் ஆகிவிடலாம் என்று நினைத்து தேனிக்குப் போய்விட்டேன். கொஞ்ச நாட்களிலேயே எனது 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்' கதையை மைக்ரோ தொடராக மின் பிம்பங்கள் எடுத்தது. திருமுருகன் இயக்கினார். மருத்துவ மனையில் படுக்கையில் அப்பா. அருகில் நான். அப்பா டி.வி-யில் ஒளிபரப்பான தொடரைப் பார்த்தார். என் மீது அளவு கடந்த நம்பிக்கைவைத்திருந்த அவருக்கு 'நான்என்ன வாகப் போகிறேன்' என்பதில் மட்டும் குழப்பம் இருந்தது. அந்த டி.வி. தொடரைப் பார்த்ததும் குழப்பம் நீங்கியவராக, 'பரவாயில்லேப்பா, உனக்கு இது நல்லா வரும் போலிருக்கு' என்றார். கடைசி வரை எந்தத் தொழில் தனக்கு வரும் என்பதைத் தேடிக்கொண்டே இருந்தவர் அவர்.

அந்த மைக்ரோ தொடர் முடிந்ததும் திருமுருகன் இயக்கத்தில் 'காவேரி' என்ற சீரியலுக்கு வசனம் எழுதினேன். முழுக்க முழுக்க மும்பையிலேயே ஷூட்டிங். சீரியல் நடக்கும்போது அப்பாவின் உடல்நிலை மோசமானது. என்னை வரவழைக்க வேண்டும் என்று அம்மாவும் அண்ணனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். படுத்திருந்த அப்பா சட்டெனக் கண் விழித்து, 'இப்பத்தான் போயிருக்கான். அதுக்குள்ள அவனைக் கூப்பிட வேணாம். நான் இன்னும் ஒரு வாரம் இருப்பேன்' என்றாராம். சரியாக அடுத்த வாரம் அப்பா இறந்து போனார். வாழ்வில் எந்தத் தோல்வியிலும் நம்பிக்கை இழக்காத அந்த மனிதரைத்தான் சோர்வு ஏற்படும்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன். என் குறித்த நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் மரணத் தருவாயிலாவது அவருக்குத் தர முடிந்ததை ஒரு பாக்கி யமாகக் கருதுகிறேன். ஒரு வாரம் கழித்து மொட்டைத் தலையுடன் மும்பைக்குச் சென்று அவரது நினைவுகளுடன் வேலையைத் தொடர்ந்தேன். 'காவேரி' முடிந்ததும் அடுத்த வேலைக்கு திருமுருகன் அழைத்தார். 'மெட்டி ஒலி' ஆரம்பம். 700-க்கும் அதிகமான எபிசோடுகள். இதற்கி டையே திருச்செல்வம் 'கோலங்கள்' ஆரம்பித்தார். அதற்கும் நான்தான் வசனம். இதோ இப்போது திருமுருகனின் 'நாதஸ்வரம்' தொடருக்கும் வசனம் எழுதுகிறேன். 2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை சன் டி.வி-யில் ஏதோ ஒரு ஸ்லாட்டில் நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

திருமுருகன் என்னை சினிமாவுக்கும் அழைத்துச் சென் றார். அவரது 'எம்டன் மகன்', 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு', சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடிக் குழு', அவர் தற்போது இயக்கிக்கொண்டு இருக்கும் 'நான் மகான் அல்ல' என்று திரைத் துறையிலும் வேலை தொடர்கிறது. தோல்விகளின்போது எல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. வெற்றிகளின்போது எல்லாம் அவரது நம்பிக்கை நினைவுக்கு வருகிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்த, உடல் நலமற்று மனச்சோர்வுற்று அமர்ந்திருந்த, அந்தச் சிறுவனை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். அவனை இத்தனை தூரம் அழைத்து வந்த அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!''

நன்றி விகடன்....

No comments: