Thursday 31 December 2009

"பெற்றால்தான் பிள்ளையா ?" எஸ்.ராமகிருஷ்ணன்

அந்தப் பையனுக்கு 14 வயதிருக்கும். சென்னையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சம்மர் கேம்ப் ஒன்றில் அவனைச் சந்தித்தேன். ஓவியப் போட்டி, கதை சொல்லுதல், பாட்டுப் போட்டி என்று நான்கைந்து முதல் பரிசுகள் வாங்கியிருந்தான். உற்சாகம் பொங்கும் தோற்றம். வெளிறிய மஞ்சள் நிற உடல்வாகு, சப்பையான முகம். செம்பட்டை படிந்த தலை. நிச்சயம் இவன் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.

சம்மர் கேம்ப் ஏற்பாடு செய்திருந்த பள்ளியின் நிர்வாகி மைக்கில் பேசத் துவங்கினார், "நமது பள்ளியில் பணிபுரியும் சுப்ரஜா டீச்சரால் இரண்டு வயதிலேயே தத்து எடுக்கப்பட்ட அஸ்வின் என்ற நேபாளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், இன்று ஐந்து முதல் பரிசுகள் வென்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. யாவரும் அதைக் கைதட்டி வரவேற்போம்'' என்றார். மாணவர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், அஸ்வின் முகத்தில் இருந்த சந்தோஷம் அப்படியே வடிந்திருந்தது. அவன் அவசரமாக மேடையைவிட்டு இறங்கி ஓடினான்.

எதற்காக அவனைத் தத்துப்பிள்ளை என்று அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மேடையில் பேசியது போதாது என்பதுபோல, என் அருகில் உட்கார்ந்த நிர்வாகி, "இந்தப் பையனின் அப்பா-அம்மா எல்லாம் நேபாளிகள். ஸ்வெட்டர் விற்க வந்த ஆட்கள். புருஷன் விட்டுட்டுப் போயிட்டான். நேபாளிப் பெண்ணாலே பிள்ளையைப் பெத்து வளர்க்க முடியலை. டீச்சருக்கும் கல்யாணமாகி ஏழு வருஷமாப் பிள்ளை இல்லை. அதனால், இந்தப் பையனைப் பெரிய மனசு பண்ணி தத்து எடுத்துக்கிட்டாங்க. இப்போ டீச்சர் பேரைக் காப்பாத்துற மாதிரி படிக்கிறான். எங்கே பிறந்தா என்ன? எல்லாம் நாம வளர்க்கிறதுலதானே இருக்கு'' என்று சொன்னார்.

என்னால் அந்த அசட்டு உளறல்களைத் தாங்க முடியவில்லை. "அந்தப் பையனை நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள்'' என்று முகத்துக்கு நேராகச் சொன்னேன். அவரோ, "உண்மையைத்தானே சொன்னேன். இதில் என்ன அவமானப்படுத்த இருக்கிறது?'' என்றார். "அந்த உண்மை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது உங்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதான் இப்படிப் பேசுகிறீர்கள்'' என்று கடுத்த குரலில் சொன்னேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அன்றெல்லாம் ஆத்திரம் எனக்குத் தணியவே இல்லை.

திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் போனால், தம்பதிகள் சந்திக்கும் கேலிகளும், ஏளனப் பேச்சுக் களும், இலவச ஆலோசனைகளும் சகிக்க முடியாத வேதனைகள். குழந்தை பெற்றுவிட்டதைப் பெரிய சாதனைபோலப் பேசும் பலரைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே குழந்தை இல்லா தவர்கள் என்னதான் படித்து, உயர்வேலை செய்து வசதியாக வாழ்ந்தபோதும் அவர்களை விரல் நீட்டி, 'உங்களுக்குத்தான் பிள்ளை இல்லையே' என்று இளக்காரமாகப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

திருமணம், ஆணைவிடப் பெண்களுக்குப் பெரிய சவாலா கவே இருக்கிறது. உலகில் எந்த ஆணும் தான் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்குப் போய் அவர்களது சாப்பாட்டை, பழக்கவழக்கத்தை, இனிஷியலைப் போட்டுக்கொண்டு அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஏதோ சில சலுகைகளுக்காக அப்படி முன்வரும் ஒரு சிலர்கூட அதைப் பெரிய தியாகச் செயல்போலத்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால், பெண்கள் திருமணமான உடனே தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவர்கள் வீட்டு உணவின் ருசியோ, பழக்கமோ எதுவும் இருக்கக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் இது. குழந்தைப்பேறின்மைக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை நாம் யோசிப்பதே இல்லை. குழந்தை இல்லை என்று மறுமணம் செய்துகொண்ட ஆண்கள் பலரைக் கண்டு இருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணைக்கூட நாம் அனுமதிக்கவில்லையே... அது ஏன்?

குழந்தை இல்லாமல் இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், யாரோ ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதை என் உயிர் உள்ளவரை அனுமதிக்கவே மாட்டேன் என்று வீம்பு பேசும் வயதானவர்கள் பல வீடுகளில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து தத்து எடுப்பதைக் கைவிட்ட பலரையும் கண்டு இருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லை. கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பேசி, ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தனர். அந்தக் குழந்தைக் குப் பெயர் சூட்டும் விழாவுக்கு யாவரையும் அழைத்திருந்தார். நண்பரின் தாய் - தந்தை மற்றும் அவர் மனைவியின் உறவினர் என்று வந்திருந்த அத்தனை பேரும், "ஏன் இப்படிச் செய்தீர்கள்? இந்தப் பிள்ளை என்ன சாதியோ, என்ன குலமோ, ஏதாவது நோய் இருக்குமோ? இவள் நிறத்தைப் பாருங்கள்... அட்டைக் கரி. சிவப்பான பிள்ளையைத் தத்து எடுத்திருக்கலாமே'' என்று குற்றம் சொன்னதோடு, ஒருவரும் குழந்தையைத் தொட்டுத் தூக்கவோ, கொஞ்சவோ இல்லை.

எங்கோ கோயிலில் பார்க்கும் அடுத்தவர் குழந்தையைக்கூட ஆசையாகத் தொட்டுத் தூக்கும் நண்பரின் அம்மா, தன் மகன் யாரோ ஒரு அநாதை குழந்தையைத் தத்து எடுத்துவிட்டானே என்று, கடசிவரை குழந்தையைத் தொடவே இல்லை. தத்து எடுப்பதாக ஆசை இருந்தால் சொந்தத்தில் எடுத்திருக்கலாமே என்று அவரது அப்பா ஆதங்கப்பட்டார். இவர்களை ஏன் அழைத்தோம் என்று நண்பருக்கு மனச்சோர்வாகிப்போனது.

அந்தக் குழந்தையை எங்கே அழைத்துச் சென்றாலும், இதே கேள்விகள்... அபத்தமான அறிவுரைகள் அவர்களை ரணப்படுத்தின. ஒருமுறை மருத்துவமனையில், "இது உங்க வயித்துல வளர்ந்த பிள்ளை இல்லையா? அதான் பிள்ளை இப்படி மெலிஞ்சிபோயிருக்கு'' என்று ஒரு நர்ஸ் முகத்துக்கு நேராகச் சொல்லியதும், நண்பர் மனைவி வாய்விட்டு அழுதிருக்கிறார்.

அதற்காகவே அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை. நண்பர்கள் வீடுகளுக்குக்கூட வருவதில்லை. அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோதுதான் அவர்கள் இயல்பானார்கள். ஆனால், அப்போதும் ஊரில் இருந்து வந்துபோகும் யாராவது அந்தப் பிள்ளையின் முன்னால் அது தத்துப்பிள்ளை என்று சொல்லி மனதை நோகடிப்பார்கள்.

அப்படி ஊரில் இருந்து வந்த மாமா ஒருவர் அந்தச் சிறுமியைப் பார்த்து, "இதுதான் அடாப்டட் சைல்டா? நோகாம பிள்ளை பெத்துக்கிடறதுன்னு சொல்வாங்க. அது உங்க விஷயத்துல நடந்திருக்கு. பெத்த பிள்ளைகளையே நம்ப முடியலை. தத்துப் பிள்ளைன்னா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. எவனையாவது இழுத்துக்கிட்டு ஓடிப் போயிரும். பிறகு, நாமதான் தெருவுல நிக்கணும்'' என்று கமென்ட் அடித்திருக்கிறார்.

நண்பர் இந்த வலியைத் தாங்கிப் பழகியதால், அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார். ஆனால், அந்தச் சிறுமி அந்தச் சொல்லால் மிகவும் காயமடைந்துவிட்டாள். இரவெல்லாம் சாப்பிடாமல் அழுதிருக்கிறாள். அவளுக்காகவே நண்பர் வட இந்தியாவுக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு சென்றார்.

100 கோடிக்கும் மேலாக மக்கள்தொகை உள்ள நாட்டில் குழந்தை இல்லை என்பது பற்றி எரியும் பிரச்னையாக இருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். முந்தைய தலைமுறைகள்போல தத்து எடுப்பதற்கு இன்றைய பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதோ, தயக்கம் காட்டுவதோ இல்லை. ஆனால், அவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்து பவர்கள் பெரிதும் குடும்பத்து நபர்களே.

காலங்காலமாகவே நமது சமூகம் குழந்தைப்பேற்றை மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் பாவிகள். சபிக்கப்பட்டவர்கள் என்ற பொதுபிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. இரண்டும் இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாகி அர்த்தமற்றவையாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

குழந்தைகள் உலகுக்கு ஒளியாக வருகிறார்கள். ஒளியில் ஏது பேதம்? உண்மையில் குழந்தைகள் நம் நம்பிக்கைகள், கனவுகள். அன்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். நாம் வாழ்ந்த நினைவுகளை நாம் வசித்த வீடும், ஊரும், சேர்ந்த பணமும், செல்வமும் தேக்கிவைப்பதில்லை. ஆனால், நம் குழந்தைகளிடம் மட்டுமே நம் நினைவுகள் எஞ்சியிருக்கின்றன. நெஞ்சில்வைத்துக் காப்பாற்றப்படுகின்றன.

உலகமே பார்த்து ஆச்சர்யப்படும் சூப்பர்மேன் கதாபாத்திரம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பிள்ளையே. நம் காலத்தின் மாபெரும் தத்துவவாதியும் சிந்தனாவாதியுமான ஜெ.கிருஷ்ண மூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரே. செட்டிநாட்டில் ஆண் வாரிசுக்காகத் தத்து எடுப்பது தலைமுறை வழக்கமாகவே இருந்து வருகிறது. தத்துப்பிள்ளை என்பதற்காக அங்கே எந்தப் பேதமும் காட்டப்படுவது இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனப் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தை இயக்கியவர் ஷென் கேஹே. 13 வயதுச் சிறுவன் ஒருவனையும் அவன் அப்பாவையும்பற்றியது படம். அந்தச் சிறுவனுக்கு வயலின் வாசிப்பதில் மிகவும் அசாத்தியமான திறமை இருக்கிறது. அப்பாவோ, சாதாரணத் தொழிலாளி.

தன் மகனை மொசார்ட் போல நாடறிந்த இசைக் கலைஞன் ஆக்குவதற்காக பீகிங் அழைத்து வரும் அப்பா, அங்கே இசைப் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவைக்க ஆசைப்படுகிறார். அந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள திறமையான இளம் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஆகவே, அவனுக்குச் சிறப்பு பயிற்சியளிக்க நல்ல ஆசான் ஒருவர் தேவை என்று அறிந்து, சீனாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைத் தேடிச் சென்று, தன் மகன் அவரிடம் பாடம் படிக்க அனுமதிக்கும்படி கேட்கிறார். அதற்கு நிறையப் பணம் செலவாகும் என்றபோதும், தன்னிடம் உள்ள பொருட்களை விற்றுக் கடன் வாங்கி அவனைப் படிக்க அனுமதிக்கிறார்.

சிறுவனுக்கோ பதின் பிராயத்தில் தோன்றும் ஊர் சுற்றும் ஆசை. பெண்கள் மீது தோன்றும் ஏக்கம் காரணமாக அவன் திசை தடுமாறத் துவங்குகிறான். அப்பா அவனைக் கண்டிக்கிறார். இசையில் சாதனை செய்வது மட்டுமே அவனது உலகம் என்று திட்டுகிறார். அவன் தேர்ந்த இசைத் திறனுடன் இருந்தபோதும், அப்பாவின் ஆசைக்காக எதற்கு தான் சாதிக்க வேண்டும் என்று வீண்பிடிவாதம்கொள்கிறான். அப்பா சொன்ன இசைக் கலைஞரிடம் மனமில்லாமல் பாடம் படிக்கிறான்.

போட்டி நடக்கும் நாளில் தனக்கு இசை முக்கியம் இல்லை என்று விலக முடிவு செய்கிறான். அப்பா ஆத்திரமாகி அவனைப் பிரிந்து போகிறார். அப்போதுதான் அவன் ஒரு தத்துப்பிள்ளை, அவனைக் குழந்தையாக யாரோ ரயில் நிலையத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்பா அவனைக் கண்டெடுத்து வளர்த்து இசைக் கலைஞனாக உருவாக்க மிகவும் போராடியிருக்கிறார் என்ற உண்மைகள் தெரியவருகின்றன.

போட்டியில் வெல்வதைவிடவும், தன்னைப் பிரிந்து போகும் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகத் தனது வயலினுடன் ரயில் நிலையம் ஓடி வருகிறான். அங்கே பெரும் ஜனத்திரள் ததும்பி வழிகிறது. அப்பாவைத் தேடிக் காணாமல் மனம் உடைந்து வயலின் வாசிக்கத் துவங்குகிறான். மிக அற்புதமான வயலின் இசை ரயில் நிலையத்தையே ஸ்தம்பிக்கவைக்கிறது. இசை முடிவில் பொதுமக்கள் அவனைக் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள். தன்னை வளர்ப்பதற்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு அழுகிறான் மகன். அவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

தனது சொந்த வாழ்க்கையை மறந்து, தான் கண்டெடுத்த பிள்ளையின் திறமையை உலகம் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவின் மனதுதான் இந்தப் படம். இது எங்கோ... யாரோ ஓர் அப்பாவின் ஆசை மட்டுமில்லை. பிறப்பில் பேதமில்லை என்ற உறுதியான நம்பிக்கையுடன் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து உன்னத நிலையை அடையவைக்க ஆசைப்படும் பலரது மனதும் இதுவே!

இன்னும் பரவும்...

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
நன்றி விகடன்.

No comments: